உதைபந்து

Friday, January 11, 2013

நானும் அந்த சிவப்பு செருப்பும்........




நண்பனின் ஹாஸ்டலிலிருந்து சற்று தூரம் தான் நடந்திருப்பேன், கால் தடக்கியது. என்னவென்று பார்ப்பதற்குள் எனது ஒற்றை செருப்பு என்னை விட்டு சற்று தூரம் தள்ளி போய் விழுந்தது. மழை வேறு லேசாக தூறிக்கொண்டிருக்க அவசர அவசரமாய் செருப்பின் பக்கம் போய் அதனை மீண்டும் காலிற்குள் நுழைக்க முயன்ற போது தான் அது அறுந்திருப்பது தெரிந்தது. எனது பல்கலை கழகத்தின் ஒரு முனை வாயிலில் நின்று கொன்டிருக்கிறேன், இனிமேல் செருப்பில்லாமல் அடுத்த முனை வரை கடந்து, அதனை தொடர்ந்து வரும் பிரதான சாலையையும் கடந்து எனது ரூமை அடைய வேண்டும். என் கௌரவத்திற்கான தூரம் கிட்டத்தட்ட எண்னூறு மீட்டர்கள்.


எப்படியேனும் சரி செய்து ரூமை அடைந்துவிட்டால் போதும் அதன் பின்பு சமாளித்து விடலாம். ஆனால் இந்த செருப்பு அதற்கு ஒத்துழைப்பது போல் தெரியவில்லை. புத்தம் புதிய செருப்பு , வாங்கி சுமார் மூன்று மாதம் கூட ஆகியிருக்காது. மங்கலான தெரு வெளிச்சத்தில் தெரிந்த அந்த செருப்பின் கம்பனி பெயரை வாசித்து சத்தமாக இரண்டு மூன்று ஆங்கில கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டேன்.


என் நண்பர்களில் அனேகர் கறுப்பு வர்ணத்தில் முள்ளு முள்ளு போன்ற ரப்பர் அமைப்புடைய ஒரு வகையான் ரப்பர் செருப்பை அணிந்து கொள்ள , நான் வலிய போய் இந்த சிவப்பு வண்ண செருப்பை வாங்கிக்கொன்டு வந்தேன். அதற்கு காரணம் இரண்டு. முதல் காரணம் அந்த முள்ளு செருப்பு தண்ணீரில் பட்டதும் போடும் "கிரீச் கிரீச்" சத்தம் எனக்கு  சுத்தமாக பிடிப்பதில்லை. தெருவில் நாம் நடக்கையில் ஐம்பதடி தூரம் வரைக்கும் நம் வரவினை அநாவசியமாக அறிவித்துக்கொண்டிருக்கும். இரண்டாம் காரணம், கொழும்பிலும் சரி தற்போது நாட்டின் அநேக பாகங்களிலும் சரி பல வண்ணங்களில் செருப்பு அணிவது ஒரு ஃபேஷன். அதனைக்கும் ஆசைப்பட்டு ஆனால் இப்போது வெற்றுக்கால்களுடன் நின்று கொண்டிருக்கிறேன்.


சொன்னால் நம்ப மாட்டீர்கள் , என் பாதம் நிலத்தில் படுவது சுமார் மூன்று மாத்திற்கு பின்புதான், அதுவும் இந்த செருப்பு அறுந்துவிட்ட படியினால். நீங்கள் நம்பாவிட்டாலும் அது தான் உண்மை, சுமார் மூன்று மாத காலமாக என் பாதம் நிலத்தில் படவேயில்லை , சில செக்கன்கள் கூட....


எனது ரூமில் என் கட்டிலின் அடியில் செருப்பு எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும், காலை எழுந்ததும் காலை நேராக செருப்பின் மேல் வைத்து கொழுவிக்கொண்ட பின்புதான் கட்டிலை விட்டே எழுந்திருப்பேன். அப்படியே காலைக்கடன்களை முடித்துக்கொள்ள , கால் இன்னுமொரு செருப்பிற்கு இடம் மாறும் , ஒரு கால் அடுத்த செருப்பிற்கு மாறும் அந்த கால அவகாசத்தில் கூட ஒற்றைக்காலில் நின்று கொண்டு செருப்பை மாற்றிக்கொள்வேன். காலைக்கடன் முடிந்த பின் மறுபடி அதே செயன்முறையில் மீண்டும் இதே செருப்பு காலில் ஒட்டிக்கொள்ளும். அப்புறம் விரிவுரைகளுக்கு தயாராகி, விரிவுரை முடிவில் ரூமுக்கு வந்து மீண்டும் குளித்து, படம் பார்த்து, இன்டெர்நெட் மேய்ந்து முடித்து கட்டிலுக்கு சென்று உட்கார்ந்து கழற்றி விட்டு காலை தூக்கி கட்டிலில் வைக்கும் வரை இந்த செருப்புக்கும் என் காலிற்கும் இடையிலான பந்தம் ஓயாது. 


இத்தனைக்கும் காரணம் நான் செருப்பை அளவுக்கதிகமாக நேசிப்பதோ அல்லது பாதம் நிலத்தில் படாமல் வாழ்ந்துகொண்டிருக்க நான் அம்பானி பேரனோ கிடையாது. எல்லாம் எங்களது ரூம் இருக்கும் லட்சணம். எங்களது ரூமை யாராவது வந்து பார்த்தால் ஏனைய பேட்சுலர்கள் ரூம்கள் கோவில் என்று கும்பிடு போட்டு போவார்கள் , அந்தளவுக்கு படு "சுத்தமாக " இருக்கும் எங்களது ரூம். நாங்கள் போடும் குப்பைகளில் நாங்களே வெற்று பாதங்களை வைத்து நடக்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கும் எங்களது ரூமில் வெற்றுப் பாதங்களோடு நடந்து விஷப் பரீட்சையில் இறங்க நான் மட்டுமல்ல, எனது ரூம் வாசிகள் யாரும் முயன்றது கிடையாது.


ஒரு தடவை பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துவிட்ட தனது மகனுக்கு ரூம் கேட்டு நாங்கள் இருந்த வீட்டை பார்க்க வந்த ஒரு வயதான தாய் எங்கள் ரூமை பார்த்ததும் , தனது மகனை பல்கலைக்கழகத்தை விட்டே கூட்டிக்கொண்டு போய் விடலாமா என்பது போல் ஒரு அதிர்ச்சியில் உறைந்ததை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை. அந்த அதிர்ச்சியுடன் அந்த தாய் போயிருந்தால் கூட பரவாயில்லை , யாரென்றே தெரியாத எங்களது ரூமை சுமார் ஒரு மணிநேரம் தனது கணவருடன் நின்று சுத்தப்படுத்தி ஜீவகாரூண்ய வேலை செய்துவிட்டு தான் போனார். போனவர் சும்மா போனாரா?  "புத்தே ! பரிசமின் இன்ன... காமரே சத்து ஹிட்டியுத் ஹொயா கண்ண பரி வெனவா.." ( பிள்ளைகள் கவனமாய் இருங்கள். ரூமுக்குள், பூச்சி பூரான் கிடந்தாலும் கண்டுபிடிக்க முடியாது.....) மவராசி நாக்கு கறுப்பு என்று நினைக்கிறேன்...... நான் ஊருக்கு போயிருந்த ஒரு நாள் என் கட்டிலின் கீழே ஒரு இரத்தப் புடையன் பாம்பை எனது ககாக்கள் வெற்றிகரமாக கொன்றிருக்கிறார்கள். நான் அறிய ஒரு தடவை என் சகோதரன் இரண்டு தடவை சாரைப்பாம்புகள் இரண்டு நான் லேப் டாப் வைக்கும் பெட்டிக்குள் அடைக்கலம் புகுவதை கண்டு பிடித்து தண்டித்ததன் பின்னர் இது மூன்றாவது சம்பவம்.




எங்கள் ரூமின் பின்னால் ஒரு காடு இருக்கிறது, காடு என்பது சற்று அதிகப்படியான சொல்... சுமார் ஒரு இருபது பலா மரங்கள் கூட்டமாக நிற்கின்றன. அதை காடென்று நாங்கள்  பொருள் கொள்வதால் , அந்த காட்டிலிருந்து பாம்புகள் வருவதை பிழையென்று கொள்ள‌ முடியாது. மற்றப்படி எமது ரூமில் கிடக்கும் குப்பைகளால் தான் பாம்புகல் வந்து அடைக்கலம் தேடுகின்றன என்ற குற்ற‌ச்சாட்டு  இன்னமும் நிலுவையிலேயே இருக்கிறது. 




முடிந்தவரை வெற்றுப்பாதங்களுடன் இருப்பது உடலுக்கு நல்லது, ஏனென்றால் பாதத்தின் மூலமே உடலின் பெரும் பெரும்பாலான வெப்பம் வெளியேறி உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது. குறைந்தது அல்லது கட்டாயம் குளிக்கும் போதாவது பாதங்கள் வெறுமையாக இருப்பது அவசியம் காரணம் உடலின் சூடுழத்தல் செயன்முறை நடைபெறுவது , பிரதானமாக குளிக்கும் போது தான். ஹிம்..... எங்கள் ரூமே இந்த நிலை என்றால் , குளியலரையை சொல்லவா வேண்டும்? என் நண்பன் ஒருவனின் புத்தம் புதிய டெனிம் !! புது வருடத்திற்கு ஒரு தடவை அணிந்து விட்டு துவைப்பதற்காக , குளியலறையின்  கொடியில் போட்டிருந்தான், வழமை போலவே அந்த கொடி மூலம் ஓடித்திரியும் எலி அதனை கீழே தட்டிப்போட்டது. அன்றே அந்த டெனிமுக்கு போகி கொண்ண்டாடினான் நண்பன்..... அம்மாதிரியான பக்க சுத்தமான அந்த இடத்தில் வெற்றுக்கால்களுடன் நிற்பது என்பது , அந்தாட்டிக்காவில் அம்மணமாக நின்றுகொன்டு ஐஸ்கிரீம் உண்பதற்கு சமம்.




சரி இப்போது அது பிரச்சனையல்ல..... எனது செருப்பு அறுந்துவிட்டது, நான் ரூமுக்கு போயாக வேண்டும். பகீரத பிராயத்தனப்பட்டும் செருப்பை மீட்க முடியவில்லை. இருள் மங்கிய வேளை , நம் காலை எவன் கவனிக்கப் போகிறான்? புறப்பட ஆயத்தமாகி செருப்பை ஒரு புதரினுள் தூக்கி வீசி எறிகிறேன். சில செக்கன்கள் தாமதமாக ஒருத்தன் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தான். எழுந்த அவனை ஒரு கை மீண்டும் புதருக்குள் அமர்த்துகிறது. ஆனல்லும் என்னை பார்த்துக்கொண்டே இருக்கிறான். நான் பதறிப்போய் "தக்க நே மச்சான்.. சொறி... ( கவனிக்கவில்லை மச்சான் ... மன்னித்துக்கொள்) என்று நழுவினேன். அவன் தனியாக இருந்தால் , செருப்பால் அதுவும் அறுந்த செருப்பால், அதுவும் மூன்று மாதம் கூட முழுசாக பாவிக்க முடியாத ஒரு மானங்கெட்ட செருப்பால் அவனை நோக்கில் நான் எறிந்ததற்கு குறைந்த பட்சம் இரண்டு பல்லையாவது தட்டியிருப்பான். ஆனால் அவன் புதருக்குள் கடும் வேலையாக இருந்ததனால், என்னை பல்லுடன் போக அனுமதித்தான்.



கிட்டத்தட்ட பல்கலைக்கழக வளாகத்தை அரைவாசிக்கும் மேல் கடந்திருப்பேன், சில தெரிந்த முகங்கள் தென்பட, வழமையான குசலங்கள், ஊர் வம்பு முடிய "எங்கே செருப்பு?"  என்ற கேள்வி வருகிறது.  இதோ இப்போது உங்களிடம் கூறியதை கிட்டத்தட்ட ஆறு பேரிடம் கூறியிருப்பேன். அந்த செருப்பு பிராண்ட் சரியில்லை , கடைகளில் கண்டால் வாங்கவேண்டாம் என்ற ஒரு இலவச ஆலோசனையையும் வழங்குகிறேன் , முழுவதுமாக மழித்திருந்த முகத்தில் லேசாக அரும்பியிருந்த மீசையில் லேசாக ஒட்டிய மண்ணை  மெதுவாக தட்டும் முயற்சியில்.அவர்கள் கடந்து போகிறார்கள் அந்த கறுத்த முள்ளு செருப்பின் "சரக் சரக்" ஓசை எனக்கு கடுப்பை தருகிறது. இப்போது இது வயிற்றெரிச்சல்..



எனது கவலை என்னவென்றால் என்னை கண்ட ஆண் நண்பர்கள் எல்லோரும் நின்று கதைத்துவிட்டு போனார்கள். அவர்களுக்கு அந்த செருப்புத் தான் தரமில்லை என்று விளக்க முடிந்தது. ஆனால் அவசர அவசரமாக போய்க்கொன்டிருந்த சில பெண் நண்பிகளுக்கு என்னால் அதனை விளக்க முடியாமல் போனது. என்ன நினைத்தார்களோ? சிலர் "க்ளுக்" என்று சிரிக்க வேறு செய்தார்கள். சரி நாளை போய் சொன்னால் போகிறது.


ஆனாலும் வெற்றும் பாதங்களுடன் சிறுது தூரம் நடந்து செவது, அதுவும் சுமார் மூன்று மாதங்களின் பின்னர், சுகமாகத்தான் இருக்கிறது. நடந்து கொண்டிருக்கையில் காலில் குளிர்மையாக நீங்கள் உணர்வது இலைமேல் விழுந்த மழைத்துளியா? இலை கிழவன் துப்பிய சளியா ? என்று ஆராயாத வரையில் வெற்றுக்காலுடன் வீதியில் நடப்பது சுக அனுபவமாகவே இருக்கிறது.


எங்களது ரூமை நெருங்குகிறேன், இப்போது எனக்கு இன்னொரு கட்டமான சவால் காத்திருக்கிறது. எனது நண்பன் ஒருவன் ஒரு நாய் வளர்க்கிறான், வளர்க்கிறான் என்பதனை விட அது வந்து வளர்கிறது என்று சொல்வது பொருந்தும். நாங்கள் சாப்பிட்ட மிச்சம் , சாப்பிடாமல் கொடுக்கும் பங்கு என அந்த நாயின் பாடு படு கொண்டாட்டம் தான்.


சைவ சாப்பாடு என்றால் அவர் சாப்பிட  மாட்டார், குறைந்த பட்சம்  கோழி எலும்பாவது சோற்றில் இருக்கவேண்டும். இதனாலேயே எங்களை கோழி எலும்புகளை கடித்து உண்பதற்கு எங்கள் நண்பன் அனுமதிக்க மாட்டான், தின்ற‌து பாதி தின்னாதது பாதியாக எடுத்துக்கொன்டு போய் நாய்க்கு தானம் பண்ணி விடுவான். வீட்டில் எந்த எலும்பானாலும் மாவு போன்ரு அரைத்து சாப்பிடும் எனக்கு , இது ஒரு பெரிய இழப்பனாலும் , சரி போகட்டும் எங்கள் நாலோடு அது ஐந்தாக இருந்துவிட்டு போகட்டும் என்று விட்டுவிடுவேன். சில நேரங்களில் வெளியே கடும் மழை பெய்தால் எங்கள் ரூமில் காலியாக இருக்கும் ஒரு மெத்தையில் கூட வந்து படுத்துவிடும் , நாங்களும் கண்டுகொள்வது கிடையாது. 


அப்படி நாங்கள் சோஷலிஷமாக பழகி வந்தாலும் அது எப்போதும் மலம் கழிக்கும் விடயத்தில் சர்வாதிகார போக்கையே கடைப்பிடிக்கிறது. எவ்வளவு சொன்னாலும் , விரட்டி விட்டாலும் விரட்டும் போது ஓடிப்போய் அடுத்த தெருவில் நின்று விட்டு , நாங்கள் போனதும் சரியாக வந்து எங்கள் நடு முற்றத்தில் மலம் கழித்துவிட்டு உற்சாகமாக ஒரு ஊளையையும் விட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்க கிளம்பிவிடும்.

எவனோ எங்க ரூமுக்கு வெறும் காலோட வந்துட்டான்



இப்போது வெளிச்சமிலாத அந்த பகுதியை கடக்கையில் , காலை பதம் பார்க்க காத்திருக்கும் அந்த கண்ணி வெடிகளிடமிருந்து தப்ப வேண்டும். பார்த்து பார்த்து நடக்கின்றேன். நடந்தும் எது நடக்க கூடாதோ அது நடந்து விட்டது... குடலை புடுங்கிக்கொண்டு வந்தது.. வெளியே இருந்த குழாயில் காலை கழுவிவிட்டு ரூமுக்குள் போவதற்காக , வாசலில் நின்றபடியே நண்பனிடம் செருப்பு ஒன்று கேட்டு வாங்கிக்கொண்டு ரூமுக்குள் நுழைகிறேன்.


பிரதான எதிர்கட்சியின் ஆதரவாளனான அவன் ஏதோ பிரச்சனையில் இருக்கிறான்... "மச்சான் இந்த நாட்டில் நடப்பது சர்வாதிகாரம், பிரதம நீதியரசரை பதவி விலக்கி விட்டார்கள். இது வலுவேறாக்கத்திற்கு முரணானது, இது சுத்த சர்வாதிகாரம். இது நாட்டிற்கு ஒரு பெரிய பிரச்சனை. நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு நான் போயே ஆகவேண்டும்"


அட.... நானும் மறந்தே போனேன். விடிந்ததும் முதல் வேலையாக செருப்பு வாங்க போக வேண்டும். இந்த தடவை நான் சிவப்பு செருப்பு வாங்கப் போவதில்லை. ஊதா அல்லது நீலம் நிற‌ம் கிடைத்தால் தேவல......















Monday, January 7, 2013

2012இல் உலகின் தலைசிறந்த வீரர் யார்?




இன்னும்  சில மணிநேர காத்திருப்பு தான்., கடந்த வருடம் தொடர்பில் உலகம் கேட்டிக்கொண்டிருக்கும் ஒரு பிரம்மாண்டமான பில்லியன் டாலர் கேள்விக்கு விடை கிடைத்துவிடும். உதைபந்தாட்ட உலகமே ஆவலுடன் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வியான "2012இன் சிறந்த உதைபந்தாட்ட வீரர் யார்"? என்ற கேள்விக்கு இன்னும் சில மணி நேரத்தில் சூரிச்சில் நடைபெறப்போகும் "பலூன் டி ஓர் 2012" விருது வழங்கும் விழா பதில் சொல்லப்போகிறது.


"பலூன் டி ஓர்" விருதானது ஒவ்வொரு ஆண்டிலும் உதைபந்தாட்ட உலகில் பிரகாசித்த வீரருக்கு "ஆண்டின் தலைசிறந்த உதைபந்தாட்ட வீரர் " என்ற கௌரவத்தினை அளிக்கும் ஒரு விருதாகும். சினிமாவிற்கு ஒரு ஆஸ்கர் விருதை போல உதைபந்தாட்டத்தில் ஃபீஃபா அமைப்பு வழங்கும் இந்த விருதானது உயரிய ஒரு விருதாக கொளப்படுகின்றது. வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த விருதினை பெற்று விடுதல் என்பது ஒவ்வொரு உதைபந்தாட்ட வீரனதும் கனவாக இருந்து வருகிறது.


அந்த வகையில் கடந்த ஆண்டிற்கா உலகின் தலைசிறந்த வீரரை தெரிவுசெய்யும் நோக்கில் ஃபீஃபா அமைப்பானது முதலில் இருபத்து மூன்று பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை அறிவித்திருந்தது. இந்த குழுவில் ஸ்பெயினின் முன்னணி கழகமான பார்சிலோனாவின் எட்டு வீரர்கள் உள்ள‌டங்கியிருந்தனர்.பின்னர் அந்த இருபத்து மூன்று பேர் கொண்ட குழுவில் இருந்து வாக்கெடுப்பின் மூலம் மூன்று பேர் வடிகட்டப்பட்டு, இறுதியான போட்டியாளர்களாக  அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் யார் "2012இல் உலகின் தலைசிறந்த வீரர்" என்பதனை எத்ர்வரும் 7ம் திகதி சுவிஸ்லாந்தின் சூரிச் நகரில் நடைபெறப்போகும் விருதுவழங்கும் விழா அறிவிக்கும்.


அந்த வகையில் கடந்த வருடத்தில் பிரகாசித்த வீரகளில் முதன்மையானோரும், விருதின் இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்றிருப்போருமென ஃபீஃபா அறிவித்திருக்கும் வீரர்கள் இவர்கள் தான்.



*ஆர்ஜன்டீனாவின் லியோனல் மெஸ்ஸி ( கழகம் பார்சிலோனா- ஸ்பெயின்)

*ஸ்பெயினின் அன்ட்ரஸ் இனியஸ்டா (கழகம் பார்சிலோனா -ஸ்பெயின்)

*போர்த்துக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ( கழகம் ரியல் மட்ரிட் - ஸ்பெயின்)


இப்போது இந்த மூன்று வீரகளினதும் கடந்த பருவகாலத்தின் பெறுபேறுகளை பார்த்துவிட்டுஎந்த வீரர் இந்த விருதினை பெற்றுக்கொளப்போகிறார் என்பது பற்றி அலசலாம்.


லியோனல் மெஸ்ஸி

நாடு : ஆர்ஜென்டீனா
கழகம் : பார்சிலோனா - ஸ்பெயின்
வயது : 25
நிலை : முன்கள வீரர்


பெறுபேறுகள்

*லீக் கோல்கள் : 50
*சம்பியன்ஸ் கிண்ண கோல்கள் : 14
*ஏனைய கோல்கள் : 09
*அஸிட்டுகள் ( கோலுக்கான உதவி) : 29

அணியுடனான சாதனைகள்

* கோபா டில் ரே வெற்றியாளர்கள். ( பார்சிலோனா)
* சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி ( பார்சிலோனா)

தனிப்பட்ட சாதனை

* லாலீகா வரலாற்றில் ஒரு சீசனில் அதிக கோல்கள் ( 50 கோல்கள்.)
* சம்பியன்ஸ் கிண்ண வரலாற்றில் ஒரு தொடரில் அதிக கோல்கள் ( 14 கோல்கள்)
* ஒரு சீசனில் அதிக கோல்கள் மற்றும் அதிக அஸிட்டுகள் செய்த சாதனை ( 73 கோல்கள் 29 அஸிட்டுகள்)
* லாலீகாவின் சிறந்த வீரருக்கான "தங்க பாதணி விருது"

அன்ட்ரஸ்ட் இனியஸ்டா

நாடு : ஸ்பெயின்
கழகம் : பார்சிலோனா - ஸ்பெயின்
வயது : 28
நிலை : மத்திய வரிசை வீரர்



அணியுடனான சாதனைகள்.

* கோபா டில் ரே வெற்றியாளர்கள். ( பார்சிலோனா)
* சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி  ( பார்சிலோனா )
* யூரோ கிண்ண வெற்றியாளர்க்ள் ( ஸ்பெயின்)


தனிநபர் சாதனை

*2011-2012ம் ஆன்டுக்கான சிறந்த சம்பியன்ஸ் கிண்ண வீரர்.
* 2012 யூரோ கிண்ணத்தின் சிறந்த வீரர்


கிறிஸ்டியானோ ரொனால்டோ

வயது : 27
நாடு : போர்த்துக்கல்
கழகம் : ரியல் மட்ரிட் ( ஸ்பெயின்)
நிலை : முன்கள வீரர்

பெறுபேறுகள்

*லீக் கோல்கள் 46
*ஏனைய கிண்ண கோல்கள் 14

அணியுடனான சாதனைகள்

*லாலீகா கோப்பை வெற்றியாளர் (ரியல் மட்ரிட்)
*சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி ( ரிய மட்ரிட்)
* யூரோ கிண்ண அரையிறுதி ( போர்த்துக்கல்)




மேலே சொன்னவாறு இறுதி சுற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வீரர்களில் அன்ட்ரஸ் இனியஸ்டா இரண்டாவது தடவையாக இந்த விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே 2010ம் ஆண்டில் சக கழக வீரர்களான மெஸ்ஸி மற்றும் சாபி ஹர்னாண்டஸ் ஆகியோருடன் பரிந்துரைக்கப்பட்டு இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.


கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த விருதிற்காக பரிந்துரைக்கப்படுவது இது ஐந்தாவது தடவையாகும். 2007, 2008,2009, 2011 ஆகிய ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்டு 2008ம் ஆண்டில் மட்டும் இந்த விருதினை வென்றுளார்.மிகுதி ஆண்டுகளில் இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளார். 2008இல் மன்செஸ்டர் அணிக்காக ஆடும் போது விருதினை பெற்றுக்கொண்ட ரொனால்டோவால் 2009இல் ரியல் மட்ரிட் அணியுடன் இணைந்து கொண்டதன் பிற்பாடு , குறிப்பாக லியோனல் மெஸ்ஸி இவரது பிரதான போட்டியாளராக உருவெடுத்ததன் பிற்பாடு பரிந்துரைக்கப்பட்ட மூன்று சந்தர்ப்பங்களிலும் மெஸ்ஸியை தோற்கடிக்க முடியாத இவரால இரண்டாம் இடங்களை மட்டுமே பெற முடிந்தது.


லியோனல் மெஸ்ஸியை பொறுத்தவரை 2007ம் ஆண்டு தொடக்கம் 2012 வரை இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுவருகிறார். 2007இல் மூன்றாம் இடத்தினையும் 2008இல் விருதினை கிறிஸ்டியானோ பெற்றுக்கொள்ள இரண்டாம் இடத்தினையும் பெற்றார். அதன்பின்பு அதாவது 2009 தொடக்கம் 2011ம் ஆண்டுவரையான தொடர்ச்சியான மூன்று வருட விருதுகளையும் வென்று நெதர்லாந்தின் "ஜொஹான் குரூயி, மார்கோ வான் பஸ்டன் " இத்தாலியின் மிச்சேல் பிளாட்டினி ஆகியோருடன் மூன்று தடவை இந்த விருதை வென்றவர்கள் என்ற பட்டியலில் இணைந்தார். இவர்களில் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிளாட்டினி ஆகியோர் மாத்திரமே தொடர்ந்து மூன்று தடவைகள் இந்த விருதினை வென்றவர்கள் என்ற பெருமையை பெறுகிறார்கள். இன்று மெஸ்ஸி இந்த விருதினை பெற்றால் தொடர்ச்சியாக நான்கு தடவை இந்த விருதை வென்ற ஒரே வீரர் என்ற தனிப்பட்ட சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.




சரி இந்த இந்த விருதிற்கான காற்று யார் பக்கம் அடிக்கிறது என்று பார்க்கலாம்.


கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் இந்த விருதிற்கு பொருத்தமானவர் என்று ரியல் மட்ரிட் அணியின் பயிற்றுவிப்பாளர் ஜொஸ் மொரின்ஹோ தெரிவித்துள்ள நிலையில், இந்த விருதிற்கு தான் தான் பொருத்தமானவர் என்று ரொனால்டோவும் கூறியிருக்கிறார். போர்த்துக்கல் அணியின் தலைவராக இருக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோவால் இந்த விருதிற்காக வாக்களிக்க முடியும். இந்த நிலையில் தனது ஓட்டு தனக்கே என்று கூறியிருக்கும் கிறிஸ்டியானோவுக்கான வாய்ப்பு எப்படி இருகிறது?


கடந்த பருவகாலத்தில் லா லீகா கிண்ண‌த்தை கைப்பற்றிய ரியல் மட்ரிட் அணியில் ஓர் முக்கிய வீரராகவும், அணி கிண்ணம் வெல்வதற்கு பெரும்பங்கினை ஆற்றிய ஒரு வீரராகவும் இருக்கும் கிறிஸ்டியானோவால் இந்த வருடம் விருதினை வெல்வதில் பலத்த சிக்கல் இருக்கின்றது. மிகப்பெரிய தடைக்கல் எதுவென்றால் அது மெஸ்ஸியாகத்தான் இருக்க முடியும். கடந்த பருவகாலத்தில் 60 கோல்கள் மற்றும் 13 அஸிட்டுக்களை செய்திருக்கும் கிறிஸ்டியானோவா அல்லது இரண்டு சாதனைகள் அடங்கலாக 73 கோல்கள் 29 அஸிட்டுகள்  செய்திருக்கும் மெஸ்ஸியா என்ற கேள்வி தெரிவுக்குழுவிற்கு வந்தால் தெரிவாகப்போவது மெஸ்ஸியாகத்தான் இருக்க முடியும்.


மெஸ்ஸியின் தனிநபர் சாதனைகளுக்கு மத்தியில் ரொனால்டோவின் லாலீகா கிண்ணம் பெற்றுகொடுத்த ஆட்டம் அடிபட்டுப்போனால் அது ஆச்சரியப்படுவதற்கில்லை. ரியல் மட்ரிட் லாலீகா கிண்ணம் வெல்வதற்கு ரொனால்டோ பங்காற்றியதை போன்றே பார்சிலோனா கோபா டில் ரே வெல்வதற்கு மெஸ்ஸியும் பெரும்பங்காற்றியுள்ளார்.


அத்தோடு இந்த விருதிற்கான இறுதிக்கட்ட வாக்கெடுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரமான கடந்த டிசெம்பர் மாதத்தின் போது உதைபந்தாட்ட உலகில் இருந்து வந்த 40 வருட சாதனையான முல்லரின் "ஒரு ஆண்டில் 85 கோல்கள்" என்ற சாதனையை 2012 கலண்டர் ஆண்டில் 91 கோல்கள் அடித்து முறியடித்து புது சாதனையை நிலைநாட்டியிருந்தார் மெஸ்ஸி. இந்த சாதனை அலை அனைத்து உதைபந்தாட்ட ஜாம்பவான்கள், பத்திரிக்கை மற்றும் அனைத்து ஊடகங்களில் புருவங்களையும் உயர்த்த வைத்தது. எனவே குறிப்பிட்ட அந்த நேரத்தில் வாக்களிக்க தகுதியான ஊடகங்கள் மற்றும் உதைபந்தாட பிரபலங்கள் அணியின் தலைவரளின் வாக்கு மெஸ்ஸியின் வாக்கு வங்கிக்கு சென்று சேர்ந்திருக்க கூடிய வாய்ப்புகள் அதிகம்.


பலூன் டி ஓர் குறித்து கருத்து தெரிவித்த பிரபலங்களில் ஜொஸ் மொரின்ஹோ, ரொனால்டோ, ஸிலாற்றன் இப்ரஹிமோவிச் தவிர்ந்த மற்ற அனைவரும் இந்த வருடத்திற்கான விருதினை மெஸ்ஸி வெல்வார் என்றே கூறியிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக ரியல் மட்ரிட் அணியின் முன்னாள் வீரரும் பிரேசிலின் நட்சத்திரமுமான ரொனால்டோ லூயிஸ் " உதைபந்தாட்டத்தை புதிய ஒரு தளத்திற்கு கொண்டு சென்றிருக்கும் மெஸ்ஸி தான் இந்த விருதுக்கு தகுதியானவர்" என்று புகழாரம் சூட்டியுளார். மெஸ்ஸியை சிபாரிசு  செய்யும் பிரபலங்கள் பட்டியலில் முன்னால் உதைபந்தாட்ட ஜாம்பவானளான பிரேஸ்லின் பீலே, ஆர்ஜென்டீனாவின் மரடோனா , ஜேர்மனியின் முல்லர் பிரேஸிலின் ரொனால்டினோ ஆகியோரும் அடங்குவர். இந்த அனைவரும் இந்த விருதிற்காக வாக்களிக்க தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மெஸ்ஸி வெல்வார் என்று பரவலாக கூறப்பட்டு நம்ப‌ப்படுகின்ற போதிலும் சக வீரரான இனியஸ்டா ரூபத்தில் ஒரு ஆப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம் 2012ன் ஐரோப்பாவின் சிறந்த வீரர் விருதிற்காக இதே மூவர் சிபாரிசு செய்யப்பட்டிருந்த போது மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவை பின் தள்ளி விட்டு விருதினை தட்டிச்சென்றவர் இனியஸ்டா. அதற்கான பிரதான காரணம் ஸ்பெயின் அணி 2012இல் யூரோ கிண்ணத்தை கைப்பற்ற இனியஸ்டாவின் பங்கு அளப்பெரியதாக இருந்ததேயாகும். 'இந்த வருடத்திற்கான பலூன் டி ஓர் விருது இனியஸ்டாவுக்கு கிடைத்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன் " என்று லியோனல் மெஸ்ஸியும் தனது கருத்தை இனியஸ்டாவுகு சார்பாக தெரிவித்திருக்கின்றார். ஆர்ஜன்டீனாவின் தலைவராக தனது வாக்கு இனியஸ்டாவிற்கே என்றும் மெஸ்ஸி மேலும் கூறியிருக்கின்றார்.


சிறந்த ஐரோப்பிய வீரருக்கான விருதில் ஐரோப்பா கிண்ணத்தின் செல்வாக்கு மிக அதிகமாக இருந்தபடியால் அந்த விருதுக்கான முழுப்பெருமையும் இனியஸ்டாவுக்கே போய் சேர வேண்டும். உலகின் தலை சிறந்த வீரர் என்று வருகின்ற போது என்னை பொறுத்தவரை கடந்த ஆண்டு சாதனை மேல் சாதனை செய்த லியோனல் மெஸ்ஸி தான் அது. எந்து வாக்கு கணக்கில் கொள்ளப்படாவிட்டாலும் என் வாக்கு மெஸிக்கு தான். 


இன்றைய விருது முடிவு இப்படி இருக்க வாய்ப்பு அதிகம்.

3


2



WINNER

















LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...