உதைபந்து

Showing posts with label சம்பியன்ஸ் கிண்ணம் 2011/2012. Show all posts
Showing posts with label சம்பியன்ஸ் கிண்ணம் 2011/2012. Show all posts

Monday, January 7, 2013

2012இல் உலகின் தலைசிறந்த வீரர் யார்?




இன்னும்  சில மணிநேர காத்திருப்பு தான்., கடந்த வருடம் தொடர்பில் உலகம் கேட்டிக்கொண்டிருக்கும் ஒரு பிரம்மாண்டமான பில்லியன் டாலர் கேள்விக்கு விடை கிடைத்துவிடும். உதைபந்தாட்ட உலகமே ஆவலுடன் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வியான "2012இன் சிறந்த உதைபந்தாட்ட வீரர் யார்"? என்ற கேள்விக்கு இன்னும் சில மணி நேரத்தில் சூரிச்சில் நடைபெறப்போகும் "பலூன் டி ஓர் 2012" விருது வழங்கும் விழா பதில் சொல்லப்போகிறது.


"பலூன் டி ஓர்" விருதானது ஒவ்வொரு ஆண்டிலும் உதைபந்தாட்ட உலகில் பிரகாசித்த வீரருக்கு "ஆண்டின் தலைசிறந்த உதைபந்தாட்ட வீரர் " என்ற கௌரவத்தினை அளிக்கும் ஒரு விருதாகும். சினிமாவிற்கு ஒரு ஆஸ்கர் விருதை போல உதைபந்தாட்டத்தில் ஃபீஃபா அமைப்பு வழங்கும் இந்த விருதானது உயரிய ஒரு விருதாக கொளப்படுகின்றது. வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த விருதினை பெற்று விடுதல் என்பது ஒவ்வொரு உதைபந்தாட்ட வீரனதும் கனவாக இருந்து வருகிறது.


அந்த வகையில் கடந்த ஆண்டிற்கா உலகின் தலைசிறந்த வீரரை தெரிவுசெய்யும் நோக்கில் ஃபீஃபா அமைப்பானது முதலில் இருபத்து மூன்று பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை அறிவித்திருந்தது. இந்த குழுவில் ஸ்பெயினின் முன்னணி கழகமான பார்சிலோனாவின் எட்டு வீரர்கள் உள்ள‌டங்கியிருந்தனர்.பின்னர் அந்த இருபத்து மூன்று பேர் கொண்ட குழுவில் இருந்து வாக்கெடுப்பின் மூலம் மூன்று பேர் வடிகட்டப்பட்டு, இறுதியான போட்டியாளர்களாக  அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் யார் "2012இல் உலகின் தலைசிறந்த வீரர்" என்பதனை எத்ர்வரும் 7ம் திகதி சுவிஸ்லாந்தின் சூரிச் நகரில் நடைபெறப்போகும் விருதுவழங்கும் விழா அறிவிக்கும்.


அந்த வகையில் கடந்த வருடத்தில் பிரகாசித்த வீரகளில் முதன்மையானோரும், விருதின் இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்றிருப்போருமென ஃபீஃபா அறிவித்திருக்கும் வீரர்கள் இவர்கள் தான்.



*ஆர்ஜன்டீனாவின் லியோனல் மெஸ்ஸி ( கழகம் பார்சிலோனா- ஸ்பெயின்)

*ஸ்பெயினின் அன்ட்ரஸ் இனியஸ்டா (கழகம் பார்சிலோனா -ஸ்பெயின்)

*போர்த்துக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ( கழகம் ரியல் மட்ரிட் - ஸ்பெயின்)


இப்போது இந்த மூன்று வீரகளினதும் கடந்த பருவகாலத்தின் பெறுபேறுகளை பார்த்துவிட்டுஎந்த வீரர் இந்த விருதினை பெற்றுக்கொளப்போகிறார் என்பது பற்றி அலசலாம்.


லியோனல் மெஸ்ஸி

நாடு : ஆர்ஜென்டீனா
கழகம் : பார்சிலோனா - ஸ்பெயின்
வயது : 25
நிலை : முன்கள வீரர்


பெறுபேறுகள்

*லீக் கோல்கள் : 50
*சம்பியன்ஸ் கிண்ண கோல்கள் : 14
*ஏனைய கோல்கள் : 09
*அஸிட்டுகள் ( கோலுக்கான உதவி) : 29

அணியுடனான சாதனைகள்

* கோபா டில் ரே வெற்றியாளர்கள். ( பார்சிலோனா)
* சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி ( பார்சிலோனா)

தனிப்பட்ட சாதனை

* லாலீகா வரலாற்றில் ஒரு சீசனில் அதிக கோல்கள் ( 50 கோல்கள்.)
* சம்பியன்ஸ் கிண்ண வரலாற்றில் ஒரு தொடரில் அதிக கோல்கள் ( 14 கோல்கள்)
* ஒரு சீசனில் அதிக கோல்கள் மற்றும் அதிக அஸிட்டுகள் செய்த சாதனை ( 73 கோல்கள் 29 அஸிட்டுகள்)
* லாலீகாவின் சிறந்த வீரருக்கான "தங்க பாதணி விருது"

அன்ட்ரஸ்ட் இனியஸ்டா

நாடு : ஸ்பெயின்
கழகம் : பார்சிலோனா - ஸ்பெயின்
வயது : 28
நிலை : மத்திய வரிசை வீரர்



அணியுடனான சாதனைகள்.

* கோபா டில் ரே வெற்றியாளர்கள். ( பார்சிலோனா)
* சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி  ( பார்சிலோனா )
* யூரோ கிண்ண வெற்றியாளர்க்ள் ( ஸ்பெயின்)


தனிநபர் சாதனை

*2011-2012ம் ஆன்டுக்கான சிறந்த சம்பியன்ஸ் கிண்ண வீரர்.
* 2012 யூரோ கிண்ணத்தின் சிறந்த வீரர்


கிறிஸ்டியானோ ரொனால்டோ

வயது : 27
நாடு : போர்த்துக்கல்
கழகம் : ரியல் மட்ரிட் ( ஸ்பெயின்)
நிலை : முன்கள வீரர்

பெறுபேறுகள்

*லீக் கோல்கள் 46
*ஏனைய கிண்ண கோல்கள் 14

அணியுடனான சாதனைகள்

*லாலீகா கோப்பை வெற்றியாளர் (ரியல் மட்ரிட்)
*சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி ( ரிய மட்ரிட்)
* யூரோ கிண்ண அரையிறுதி ( போர்த்துக்கல்)




மேலே சொன்னவாறு இறுதி சுற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வீரர்களில் அன்ட்ரஸ் இனியஸ்டா இரண்டாவது தடவையாக இந்த விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே 2010ம் ஆண்டில் சக கழக வீரர்களான மெஸ்ஸி மற்றும் சாபி ஹர்னாண்டஸ் ஆகியோருடன் பரிந்துரைக்கப்பட்டு இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.


கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த விருதிற்காக பரிந்துரைக்கப்படுவது இது ஐந்தாவது தடவையாகும். 2007, 2008,2009, 2011 ஆகிய ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்டு 2008ம் ஆண்டில் மட்டும் இந்த விருதினை வென்றுளார்.மிகுதி ஆண்டுகளில் இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளார். 2008இல் மன்செஸ்டர் அணிக்காக ஆடும் போது விருதினை பெற்றுக்கொண்ட ரொனால்டோவால் 2009இல் ரியல் மட்ரிட் அணியுடன் இணைந்து கொண்டதன் பிற்பாடு , குறிப்பாக லியோனல் மெஸ்ஸி இவரது பிரதான போட்டியாளராக உருவெடுத்ததன் பிற்பாடு பரிந்துரைக்கப்பட்ட மூன்று சந்தர்ப்பங்களிலும் மெஸ்ஸியை தோற்கடிக்க முடியாத இவரால இரண்டாம் இடங்களை மட்டுமே பெற முடிந்தது.


லியோனல் மெஸ்ஸியை பொறுத்தவரை 2007ம் ஆண்டு தொடக்கம் 2012 வரை இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுவருகிறார். 2007இல் மூன்றாம் இடத்தினையும் 2008இல் விருதினை கிறிஸ்டியானோ பெற்றுக்கொள்ள இரண்டாம் இடத்தினையும் பெற்றார். அதன்பின்பு அதாவது 2009 தொடக்கம் 2011ம் ஆண்டுவரையான தொடர்ச்சியான மூன்று வருட விருதுகளையும் வென்று நெதர்லாந்தின் "ஜொஹான் குரூயி, மார்கோ வான் பஸ்டன் " இத்தாலியின் மிச்சேல் பிளாட்டினி ஆகியோருடன் மூன்று தடவை இந்த விருதை வென்றவர்கள் என்ற பட்டியலில் இணைந்தார். இவர்களில் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிளாட்டினி ஆகியோர் மாத்திரமே தொடர்ந்து மூன்று தடவைகள் இந்த விருதினை வென்றவர்கள் என்ற பெருமையை பெறுகிறார்கள். இன்று மெஸ்ஸி இந்த விருதினை பெற்றால் தொடர்ச்சியாக நான்கு தடவை இந்த விருதை வென்ற ஒரே வீரர் என்ற தனிப்பட்ட சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.




சரி இந்த இந்த விருதிற்கான காற்று யார் பக்கம் அடிக்கிறது என்று பார்க்கலாம்.


கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் இந்த விருதிற்கு பொருத்தமானவர் என்று ரியல் மட்ரிட் அணியின் பயிற்றுவிப்பாளர் ஜொஸ் மொரின்ஹோ தெரிவித்துள்ள நிலையில், இந்த விருதிற்கு தான் தான் பொருத்தமானவர் என்று ரொனால்டோவும் கூறியிருக்கிறார். போர்த்துக்கல் அணியின் தலைவராக இருக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோவால் இந்த விருதிற்காக வாக்களிக்க முடியும். இந்த நிலையில் தனது ஓட்டு தனக்கே என்று கூறியிருக்கும் கிறிஸ்டியானோவுக்கான வாய்ப்பு எப்படி இருகிறது?


கடந்த பருவகாலத்தில் லா லீகா கிண்ண‌த்தை கைப்பற்றிய ரியல் மட்ரிட் அணியில் ஓர் முக்கிய வீரராகவும், அணி கிண்ணம் வெல்வதற்கு பெரும்பங்கினை ஆற்றிய ஒரு வீரராகவும் இருக்கும் கிறிஸ்டியானோவால் இந்த வருடம் விருதினை வெல்வதில் பலத்த சிக்கல் இருக்கின்றது. மிகப்பெரிய தடைக்கல் எதுவென்றால் அது மெஸ்ஸியாகத்தான் இருக்க முடியும். கடந்த பருவகாலத்தில் 60 கோல்கள் மற்றும் 13 அஸிட்டுக்களை செய்திருக்கும் கிறிஸ்டியானோவா அல்லது இரண்டு சாதனைகள் அடங்கலாக 73 கோல்கள் 29 அஸிட்டுகள்  செய்திருக்கும் மெஸ்ஸியா என்ற கேள்வி தெரிவுக்குழுவிற்கு வந்தால் தெரிவாகப்போவது மெஸ்ஸியாகத்தான் இருக்க முடியும்.


மெஸ்ஸியின் தனிநபர் சாதனைகளுக்கு மத்தியில் ரொனால்டோவின் லாலீகா கிண்ணம் பெற்றுகொடுத்த ஆட்டம் அடிபட்டுப்போனால் அது ஆச்சரியப்படுவதற்கில்லை. ரியல் மட்ரிட் லாலீகா கிண்ணம் வெல்வதற்கு ரொனால்டோ பங்காற்றியதை போன்றே பார்சிலோனா கோபா டில் ரே வெல்வதற்கு மெஸ்ஸியும் பெரும்பங்காற்றியுள்ளார்.


அத்தோடு இந்த விருதிற்கான இறுதிக்கட்ட வாக்கெடுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரமான கடந்த டிசெம்பர் மாதத்தின் போது உதைபந்தாட்ட உலகில் இருந்து வந்த 40 வருட சாதனையான முல்லரின் "ஒரு ஆண்டில் 85 கோல்கள்" என்ற சாதனையை 2012 கலண்டர் ஆண்டில் 91 கோல்கள் அடித்து முறியடித்து புது சாதனையை நிலைநாட்டியிருந்தார் மெஸ்ஸி. இந்த சாதனை அலை அனைத்து உதைபந்தாட்ட ஜாம்பவான்கள், பத்திரிக்கை மற்றும் அனைத்து ஊடகங்களில் புருவங்களையும் உயர்த்த வைத்தது. எனவே குறிப்பிட்ட அந்த நேரத்தில் வாக்களிக்க தகுதியான ஊடகங்கள் மற்றும் உதைபந்தாட பிரபலங்கள் அணியின் தலைவரளின் வாக்கு மெஸ்ஸியின் வாக்கு வங்கிக்கு சென்று சேர்ந்திருக்க கூடிய வாய்ப்புகள் அதிகம்.


பலூன் டி ஓர் குறித்து கருத்து தெரிவித்த பிரபலங்களில் ஜொஸ் மொரின்ஹோ, ரொனால்டோ, ஸிலாற்றன் இப்ரஹிமோவிச் தவிர்ந்த மற்ற அனைவரும் இந்த வருடத்திற்கான விருதினை மெஸ்ஸி வெல்வார் என்றே கூறியிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக ரியல் மட்ரிட் அணியின் முன்னாள் வீரரும் பிரேசிலின் நட்சத்திரமுமான ரொனால்டோ லூயிஸ் " உதைபந்தாட்டத்தை புதிய ஒரு தளத்திற்கு கொண்டு சென்றிருக்கும் மெஸ்ஸி தான் இந்த விருதுக்கு தகுதியானவர்" என்று புகழாரம் சூட்டியுளார். மெஸ்ஸியை சிபாரிசு  செய்யும் பிரபலங்கள் பட்டியலில் முன்னால் உதைபந்தாட்ட ஜாம்பவானளான பிரேஸ்லின் பீலே, ஆர்ஜென்டீனாவின் மரடோனா , ஜேர்மனியின் முல்லர் பிரேஸிலின் ரொனால்டினோ ஆகியோரும் அடங்குவர். இந்த அனைவரும் இந்த விருதிற்காக வாக்களிக்க தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மெஸ்ஸி வெல்வார் என்று பரவலாக கூறப்பட்டு நம்ப‌ப்படுகின்ற போதிலும் சக வீரரான இனியஸ்டா ரூபத்தில் ஒரு ஆப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம் 2012ன் ஐரோப்பாவின் சிறந்த வீரர் விருதிற்காக இதே மூவர் சிபாரிசு செய்யப்பட்டிருந்த போது மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவை பின் தள்ளி விட்டு விருதினை தட்டிச்சென்றவர் இனியஸ்டா. அதற்கான பிரதான காரணம் ஸ்பெயின் அணி 2012இல் யூரோ கிண்ணத்தை கைப்பற்ற இனியஸ்டாவின் பங்கு அளப்பெரியதாக இருந்ததேயாகும். 'இந்த வருடத்திற்கான பலூன் டி ஓர் விருது இனியஸ்டாவுக்கு கிடைத்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன் " என்று லியோனல் மெஸ்ஸியும் தனது கருத்தை இனியஸ்டாவுகு சார்பாக தெரிவித்திருக்கின்றார். ஆர்ஜன்டீனாவின் தலைவராக தனது வாக்கு இனியஸ்டாவிற்கே என்றும் மெஸ்ஸி மேலும் கூறியிருக்கின்றார்.


சிறந்த ஐரோப்பிய வீரருக்கான விருதில் ஐரோப்பா கிண்ணத்தின் செல்வாக்கு மிக அதிகமாக இருந்தபடியால் அந்த விருதுக்கான முழுப்பெருமையும் இனியஸ்டாவுக்கே போய் சேர வேண்டும். உலகின் தலை சிறந்த வீரர் என்று வருகின்ற போது என்னை பொறுத்தவரை கடந்த ஆண்டு சாதனை மேல் சாதனை செய்த லியோனல் மெஸ்ஸி தான் அது. எந்து வாக்கு கணக்கில் கொள்ளப்படாவிட்டாலும் என் வாக்கு மெஸிக்கு தான். 


இன்றைய விருது முடிவு இப்படி இருக்க வாய்ப்பு அதிகம்.

3


2



WINNER

















Tuesday, April 24, 2012

கனத்த மனதுடன் பதிவுகளில் இருந்து வெளியேறுகிறேன்!



லா லீகா கிண்ணமிழப்பு + சம்பியன்ஸ் லீக் தோல்விக்கு பின்னரும்  பார்சிலோனாவை இன்னமும் அதிகமாக  நேசிக்கிற ஒரு சராசரி இல்லை இல்லை , ஒரு பார்சிலோனா வெறியனாக உங்களுடன் ஒரு சில வார்த்தைகள்.. 

இது ஒரு பதிவாக இல்லாமல் எனது ஒரு பிரியாவிடையாக கொள்ளுங்கள்.


இன்று சம்பியன்ச் கிண்னத்தின் இரண்டாம் அரையிறுதியில் செல்சியாவிடம் வீழ்ந்தது பார்சிலோனா. செல்சியா சூப்பர் கேம் மச்சி! அதுவும் பத்து பேருடன்! தவளை தன் வாயால் கெடும்ங்கிற மாதிரி பார்சிலோனா கெட்டது அதுவாலே தான், மெஸ்ஸி தனது வாழ்வின் முதல் பெனால்டி வெளியில் அடித்தார், சொதப்பல் ஸ்ரார்ட். சும்மா சொல்லக்கூடாது செல்சியாவோட தடுப்பு ஆட்டம் பிரம்மாதம். முதல் பாதியில் பார்சிலோனா காட்டிய வேகம் இரண்டாம் பாதியில் காட்டாததால் வந்தது பரிதாபம். செல்சியாவோ மட்ரிட்டோ அல்லது முனீக்கொ எல்லாருக்கும் பெஸ்ட் ஆஃப் லக். 

நாளை இடம்பெறப்போகும் போட்டியில் தனது சொந்த மண்ணில் முனீக் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைவது மட்ரிட் அணிக்கு பெரிய சவாலாக இருக்கப்போவது இல்லை. ஒன்றுக்கு பூச்சியம் என்று கோல் அடித்தாலே போதுமானதாக இருக்கும் காரணம் மட்ரிட் ஏற்கனவே முனீக்கில் நடந்த போட்டியில் ஒரு "away" கோல் போட்டு இருப்பதால். 

ஆக எனது கணிப்பின் படி இறுதிப்போட்டியில் ஆடப்போவது செல்சியா மற்றும் மட்ரிட் அணிகள் தான். இரு அணிகளையும் பார்க்கப்போனால்  செல்சியாவைவிட மட்ரிட் பலம் கூடிய அணியாக இருக்கின்றது.எனது கணிப்பின் படி  செல்சியா மற்றும் மட்ரிட் ஆகிய அணிகள் முனீக்கில் இறுதிப்போட்டி ஆடும் பட்சத்தில் , அந்த மைதானம் இரு அணிகளுக்கும் பொதுவானது. என்ன? தங்களது அணியான முனீக் அணியை தோற்கடித்த கடுப்பில் , முனீக் ரசிகர்களது ஆதரவு செல்சி பக்கம் சாயலாம். அது மட்டும் தான் மட்ரிட்டுக்கு பாதகமான ஒன்றாக இருக்கப்போகிறது.

ஆனால் முனீக் அணிக்கு எதிராகவே அவர்கள் மைதானத்தில் கோல் போட்ட மட்ரிட் அணிக்கு இந்த உளவியல் சவால் ஒன்றும் பெரிய எதிர் தாக்கமாக இருக்கப்போவதில்லை. அது போக சாதரணமாகவே மட்ரிட்டுடன் ஒப்பிடும் பொழுது சற்று நலிந்த கழகமான செல்சியாவை இன்றைய போட்டி மேலும் நலிவடைய வைத்திருக்கிறது. ஏன் சொல்கிறேன் என்றால் இன்று கோல் போட்டு செல்சியாவின் வெற்றியை உறுதி செய்த மியரல்ஸ், அணியின் பிரதான பின்கள வீரருமான ஜோன் டெர்ரி, இன்னொரு முக்கியமான  பின்கள வீரரான ரமிர்ஸ் ஆகியோர் சிவப்பு அட்டை காரணமாக அடுத்த போட்டியில் விளையாட முடியாது. இது உண்மையில் செல்சியாவின் பலத்தை பாதியாக குறைத்திருக்கிறது எனலாம். மியரல்ஸின் இடத்துக்கு டொரைஸ் வரலாம் என எதிர் பார்கிறேன். இவையெல்லாம் கிட்டத்தட்ட மட்ரிட்டின் பத்தாவது தடவை இண்ணம் வெல்லும் கனைவை நனவாக்கும் என நம்புகிறேன்.

இத்தனையும் பொய்த்துப்போய் நாளை முனீக்கிடம் மட்ரிட் வாங்கி கட்டினாலோ அல்லது இறுதிபோட்டிக்கு நுழைந்து அங்கு நலிந்து, போய் இருக்கும் செல்சியாவிடம் வாங்கி கட்டி உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக சம்பியன்ஸ் கிண்ணத்தை செல்சியாவிடம் மட்ரிட் தாரை வார்த்தாலோ, சீசனின் ஆரம்பத்தில் நன்றாக ஆடி இறுதியில் சொதப்பிய பார்சிலோனாவை விட சொதப்பல் அணி மட்ரிட்டாக இருக்கும் என்றால் மறு பேச்சில்லை.

நாளைய தினம் தப்பி தவறி மட்ரிட்டை முனீக் வீழ்த்தினால் கிண்னம் முனீக் வசமாகும் என்பது எனது கணிப்பு. எழுத எழுத நிறைய எழுத வேண்டும் போல் உள்ளது. சீரியசாகவே சொல்கிறேன் , மனது கனத்துப்போய் உளது. ஒரு ரசிகனாக நிறைய நொந்து போய் உள்லேன். இப்போதே நிறைய எழுதிவிட்டதாக உணர்கிறேன். தனியே கீழே உள்ள பந்தியை பதிவாக இட்டு முடிக்கத்தான் ஆரம்பத்தில் எண்ணம். ஆனாலும் இந்த அரையிறுயின் முடிவிலும் அடுத்து நடைபெறப்போகும் இறுதிப்போட்டி தொடர்பிலும் கருத்தறிய, எனது உதைபந்து பதிவுகளை எதிர் பார்த்திருக்கும் யாரேனும் இருந்தால் அவர்களை ஏமாற்ற வேண்டாமே என்று தான் மேலே உள்ள போட்டிக்கான் சிறு குறிப்பு தந்தேன்.

அடுத்த லா லீகா சீசன் வரைக்கும் அனேகமாக இனி உதைபந்து பதிவுகள் என்னிடம் இருந்து வராது என்பது எனது 99% கருத்து`. எவராச்சும் ஏமாந்து போனா அடியேனை மன்னிச்சூ.... எனது உதை பந்து பதிவுகளில் பின்னூட்டமிட்டும் , பதிவுகளை வரவேற்று படித்து  ஆதரவளித்த சகல வாசகர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள். 

இப்போது நண்பன் JZ உடன் சில வார்த்தைகள்....  உன்னோட செம ஃபன்னு மச்சி, எல்லா சப்போர்ட்டுக்கும் தாங்க்ஸ். நமது பின்னூட விவாதங்களில் நிறைய கலாய்ச்சோம் நிறைய கத்துக்கிட்டோம்.பார்சிலோனா இல்லாத மட்ரிட்டையும் மட்ரிட் இல்லாத பார்சிலோனாவையும் நினைத்தாலே கடுப்பா இல்ல???? இந்த இரண்டுக்கிடையான போட்டி தான் லாலீகாவை அழகாக்குகிறது, ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என்பது எனது கருத்து நண்பா. ரொம்ப நன்றி நண்பா.... ஆனாலும் சோகமா போனாலும் சும்மா போகல... அடுத்த லா லீகா + சம்பியன்ஸ் கிண்ணம் என்று விட்டதை பிடிப்போம் என்று இவ்விடத்தில் கூறி எனது இதர பதிவுகளுக்கு இதே சுவாரசியத்துடன் நமது பின்னூட்டங்கள் தொடரும் என்ற நம்பிக்கையிலும் கனத்த மனதுடன் வெளியேறுகிறேன்.....! மீண்டும் அடுத்த லா லீகாவில் சந்திப்போம் !!!

Thursday, April 19, 2012

ரஜினியின் "பாபா' தோல்விக்கும் பார்சிலோனாவுக்கும் என்ன சம்மந்தம்? - நான் சப்பைக்கட்டு கட்டுகிறேன் அல்லது உண்மையை சொல்கிறேன்!


இந்த பஞ்சாயத்துக்கு என்ன எதுக்குடா இழுக்கிற?



உதை பந்து தொடர்பில் பதிவுகளை எழுதும் உத்வேகத்தில் நான் எழுத ஆரம்பித்திருந்லும் அது எந்தளவிற்கு வரவேற்பை பெறும் என்பது எனக்கு ஒரு கேள்வியாகவே இருந்தது. நான் எழுதிய முதல் உதைபந்து பதிவில் ஒரு பின்னூட்டம் + 100 ஹிட்ஸ் கூட கிடைப்பது சந்தேகம் என்று எழுதியிருந்தேன். ஆனால் இதுவரை எழுதிய இரண்டு உதை பந்து பதிவுகளும் பலத்த வரவேற்பை பெற்றிருக்கின்றது என்று பொய் சொல்லவில்லை சுமாராக ஒரு 400- 500 ஹிட்ஸ் கிடைக்கிறது, அத்தோடு பின்னூட்டங்களும் வருகிறது. "அருமை நண்பா' ரக பின்னூட்டங்களை தாண்டி சிறந்த உதைபந்தாட்ட ரசிகர்களிடமிருந்து பிரயோசனமான பின்னூட்டங்கள் வந்திருப்பது எனக்கு தொடர்ந்தும் அவ்வப்போது உதை பந்து பதிவுகளை எழுத ஊக்கம் தருகிறது.

இது ஒரு பதிவாகவே எழுத எண்ணம் இருக்கவில்லை. (அப்போ என்ன வெண்ணைக்கு எழுதின என்று நீங்கள் கேட்பதி நியாயம் இல்லாமல் இல்லை. #இருக்கு எண்டுறியா? இல்ல எண்டுறியா?). சரி மேட்டருக்கு வருவோம் நேற்று இடம்பெற்று முடிந்த சம்பியன்ஸ் கிண்ண போட்டி தொடர்பில் நான் எழுதிய முன்னோட்டப் பார்வை பதிவை பார்த்துவிட்டு , நடந்து முடிந்த போட்டி தொடர்பில்  நண்பர் JZ தந்த பின்னூட்டங்களுக்கு பதில் தர ஆரம்பித்தேன் , கொஞ்சம் எழுத தொடங்கி விட்டு பார்த்தால் அது ஒரு பதிவு ரேஞ்சுக்கு நீண்டிருந்தது. சரி வந்தவரைக்கும் லாபம் என்று , கொஞ்சம் மேலதிக பிட்டுக்களும் சேர்த்து ஒரு பதிவாக தயாரித்து விட்டேன். (எப்படி என் சாமர்த்தியம்? # உன் சாமர்த்தியத்தை நாய் விறாண்ட) இதை நண்பர் JZ தனக்குரிய பதிலாக பார்க்கலாம், ஏனையோர் "பார்சிலோனா எதிர் செல்சியா நடந்தது என்ன ?" ரீதியில் படித்துக் கொள்ளலாம்.

இது ஒரு பின்னூட்டமாக தயாரிக்கப்பட்டு பின்னர் பதிவிடும் நோக்கத்தில் தொகுக்கப்பட்டது. எடிட்டிங்கில் ஏதாவது கோளாறாகி தொடர்புத்தன்மை எங்காவது காணாமல் போயிருந்தால் மன்னிச்சூ....

நண்பரே தங்களது வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றிகள்! தொடர்ந்து உங்களது ஆதரவு எனக்கு வேண்டும். 




2009 என்பது முடிந்து போனது அதைப்பற்றி இப்போது பேசுவது அர்த்தமற்றது என்பது எனது தாழ்மையான கருத்து, அத்தோடு நடுவரின் பிழையான தீர்ப்பு என்பது பார்சினோலாவின் தவறில்லையே! இதை பதிலடியாக நீங்கள் எடுத்துகொண்டால் அதை இல்லை என்றும் மறுக்க முடியாது. நான் பார்சிலோனாவின் தீவிர ரசிகன் தான் , ஆனால் நடுநிலமையான உதைபந்தாட்ட ரசிகன். எனது பதிவைப் பார்த்தால் அது உங்களுக்கு புரிந்திருக்கும். நான் செல்சியாவை குறைத்து மதிப்பிடவில்லையே! நேற்றைய போட்டியில் செல்சியா வெல்லும் அல்லது சமநிலை என்று தானே குறிப்பிட்டிருந்தேன்.



ஆனால் நேற்றைய போட்டியை நீங்கள் பார்த்திருந்தால் புரிந்திருக்குமே, யார் பக்கம் ஆட்டம் இருந்தது என்று! 80% பந்து பார்சிலோனாவின் பக்கமே இருந்தது, அது போக நேற்றைய ஆட்டத்தில் அறிவிப்பாளர்கள் கூட பார்சிலோனா தான் ஃகோம் டீம் போல ஆடுவதாக குறிப்பிட்டிருந்ததை அவதானித்திருப்பீர்கள். உங்கள் மன சாட்சிக்கு தெரியும் எந்த அணியின் ஆட்டம் நேற்று சிறப்பாக இருந்தது என்று. சனியாஸ் ஒன்று , பண்ணாட ஃபப்ரிகாஸ் இரண்டு இறுதி நிமிடத்தில் பெட்ரோ ரொட்ரீகஸ் ஒன்று என்று இலகுவாக அடித்திருக்க வேண்டிய நான்கு கோல்களை பார்சிலோன தவறவிட்டது காலக் கொடுமை என்பதை விட வேறு என்ன சொல்வது?


ஸ்பெயின் டீமில இடம் கெடச்ச மாதிரி தான்!



செல்சியாவின் மைதானத்தில் இவ்வாறான ஒரு சிறந்த ஆட்டத்தை பார்சிலோனாவால் வெளிப்படுத்த முடிந்திருகிறது என்றால் அவர்களது கோட்டையான நியூ கேம்பில் அவர்களது ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. நான் எனது பதிவில் கூறியது போல இரண்டு கோல்களுக்கு அதிகமான கோல் அடித்து பார்சிலோனா வெல்வது உறுதி. இதை பார்சிலோனா ரசிகனாக சொல்லவில்லை ஒரு உதைபந்தாட்ட ரசிகனாக சொல்கிறேன்.நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?



சொல்லப்போனால் செல்சி நேற்று ஆடிய தற்காப்பு ஆட்டம் அர்த்தமற்றது, காரணம் தங்களது சொந்த மைதானத்தில் தாக்குதல் ஆட்டம் ஆடி எதிரணிக்கு குறைந்தது இரண்டு கோல்களாவது அடித்தால் மட்டுமே பார்சிலோனா போன்ற வலிமையான அணிக்கு எதிராக அவர்கலது மைதானத்தில் தாக்குபிடிக்க முடியும். 

செல்சியாவின் தடுப்பு ஆட்டம் அவர்கள் திட்டமிட்டு செய்தது இல்லை, வெளி மைதானத்தில் தடுப்பு ஆட்டம் ஆட வேண்டிய பார்சிலோன யாரும் எதிர் பார்க்காத வண்ணம் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியதால் செல்சியா தடுப்பு ஆட்டத்துக்கு நிர்பந்திக்கப்பட்டது எனலாம். ஏன் சொல்கிறேன் என்றால் போட்டியின் முதல் பதினைந்து நிமிடங்கள் செல்சியா தாக்குதல் ஆட்டத்துக்கு முனைந்ததை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள். ஆனால் அதை பொருட்படுத்தாமல் பார்சிலோனாவும் தாக்குதல் ஆட்த்தை தொடரவும் வேறு வழியின்றி தனது துருப்புக்களை பின் நகத்தியது செல்சியா. செல்சியாவின் நோக்கம் தாக்குதல் ஆட்டம் ஆடி பார்சிலோனாவின் பலவீனப்பட்ட பின்களத்தை ஊடுருவி  இரண்டு கோல்களாவது போடுவதாகதான் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் செல்சியாவின் இந்த நோக்கத்தை அறிந்து தானோ என்னமோ பார்சிலோனா தடுப்பில் இறங்காமல் தாக்குதல் ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. சும்மா சொல்லக்கூடாது நான் குறைத்து மதிப்பிட்ட கிழட்டு சிங்கம் புயோலின் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. யாரும் எதிர் பாராமல் ட்ரகோபா அடித்த அந்த கோல் தவிர செல்சியாவின் எந்தவொரு வீரரும் ஆடுவதற்கு புயோல்+ பார்சிலோனாவின் பின்களம் இடம் தரவில்லை என்றால் மிகையாகாது.

வட போச்சே!


நான் எதிர் பார்த்த அளவுக்கு செல்சியாவின் ஆட்டம் அவளவு சிறப்பாக இல்லை என்று தான் சொல்லுவேன். வயதாகி விட்டது அவர்கள் உடல் தகுதி போதாது என்று நான் குறிப்பிட்ட ட்ரக்கொபா கிஷோகர் சொன்னது நியாயம் என்பதை நேற்று நிரூபித்தார், பார்சிலோனாவின் பின்களவீரர்களது (நியாயமான + நியாயமற்ற) தாக்குதல்கள சமாளிக்க முடியாமல் திணறினார், அது போக தானே சில வேளைகளில் யாரும் தட்டி விடாமலே கீழே விழுந்தார். இந்த திணறல் ஆட்டம் நியூ கேம்பில் சுத்தமாக எடுபடாது. ஆனாலும் ஒரு கோல் அடித்து ரசிகர்களின் நாயகனாகி போனார்.


லம்பார்ட் மைதானத்தில் இருந்தாரா , இல்லைய என்பதே எனக்கு தெரியவில்லை. ஆஸ்லே கோல் சுமார், டெர்ரி எதிர் பார்த்ததைவிட சொதப்பல் ரகம் தான். ஆனால் செல்சியாவின் அசத்தல் இளம் வீரர் மியரல்ஸின் ஆட்டம் பிரம்மிக்கவைத்தது. அடுத்து அணியின் கோல் காப்பாளர் பீட்டர் சேச், மனிதர் இல்லாவிட்டால் பார்சிலோனாவுக்கு இரண்டு கோல் உறுதியாகியிருக்கும். அது போல் நடுக்கள வீரர் ரமிர்ஸ், மற்றும் மிகெல் ஆகியோரது ஆட்டமும் கவனிக்கப்பட வேண்டியது.


பார்சிலோனா தோற்றதற்கு செல்சியா காரணம் இல்லை. பார்சிலோனாவே தான் காரணம். நான் சொதப்பும் என எதிர் பார்த்த பார்சிலோனாவின் பின் களம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த சிறந்த முன்களம் என பெயர் வாங்கிய முன்வரிசை சொதப்பியது. முன்வரிசை என ஒட்டு மொத்தமாக பழி போடுவதை விட ஃபப்ரிகாஸ் என பச்சையாக சொல்லலாம். ஆர்சனலில் இருந்து ஸ்பெயின் அணியில் தனக்கு இடம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் இடைவிலகி பார்சிலோனாவுடன் சேர்ந்து ஆடும் இந்த பக்கிக்கு ஸ்பெயின் அணியில் இடம் குடுக்க கூடாது என்று பரிந்துரை செய்கிறேன்.

இங்கிலாந்து பிராந்திய அணிகளுக்கு ஆடும் ஸ்பெயின் வீரர்களுக்கு ஸ்பெயின் தேசிய அணியில் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைப்பது அரிது என்பதால் , ஃபப்ரிகாஸ் பார்சிலோனாவுக்கு மாறினார். ஆர்சனலின் பள்ளியில் இருந்து தெரிவான இந்த ஃபப்ரிகாஸ் ஆர்சனலுடனான தனது ஒப்பந்த காலம் முடிவைவதற்கு முன்னமே இடைவிலகியிருப்பதால் ஆர்சனல் இவருக்கு செலவழித்த செலவீங்களை பார்சிலோனா வழங்கும் சம்பள பணத்தில் கட்டி கட்டி கடனைத்து கொண்டிருக்கிறார் இந்த கடன்காரன்.

அந்த பன்னாடை நேற்று ஆடிய ஆட்டம் பார்சிலோனாவின் தோல்வியை உறுதி செய்தது எனலாம். மெஸ்ஸி கொடுத்த பந்தை "சிப்" பண்ணுகிறேன் பேர்வழி என்று கோட்டை விட்டதும், இடது காலால் அடிக்கப் போய் இன்னொரு பந்தை வெளியால் அடித்ததும் சொதப்பலின் உச்சக் கட்டம். இவரது பாஸ்களும் சொதப்பல் ஒஃப் த இயர். முதலாவது பாதியில் சனியாஸ் அடித்த பந்தும் இரண்டாம் பாதி இறுதியில் தியாகோ அடித்த பந்தும் கோல் கம்பத்தில் பட்டு திரும்ப வந்தது துரதிஷ்டத்தின் உச்சக்கட்டம்.

அது போல் எதிர் பார்த்த அளவு மெஸ்ஸி மற்றும் சனியாஸ் கூட சோபிக்கவில்லை.மெஸியின் தவறு தான் கோல் ஆகிப்போனது குறிப்பிடத்தக்கது.இதுவரை 243 கோல்களை  அடித்திருக்கும்  லியோனல் மெஸ்ஸி செல்சியாவுக்கு எதிராக கோல் ஏதும் அடிக்காமல் சொதப்பிய தொடர்ச்சியான ஏழாவது போட்டி இது. ஆனால் மெஸ்ஸி சில கோலுக்கான உதவிகளை (அஸிஸ்ற்) செய்தார், அதை பம்பிலிமாஸ் சாரி ஃபப்ரிகாஸ் மண்ணாக்கினார்.


நான் முதலில் குறிப்பிட்டது போல நேற்றைய தினம் தாக்குதல் ஆட்டம் ஆடியிருக்க வேண்டிய செல்சியா தடுப்பு ஆட்டம் ஆடியது அல்லது ஆடுவதற்கு நிர்பந்திக்கபட்டது எதுவானாலும் அது பார்சிலோனாவுக்கு கிடத்த முதல் வெற்றி எனலாம். போட்டிக்கு முன்னர் பார்சிலோனாவின் முகாமையாளர் பெப் குவாரியோலா சொன்னது நினைவிருக்கிறதா? "நாங்கள் ஒரு சமநிலைக்கோ அல்லது ஒன்ரு அல்லது இரண்டு என்ற குறைந்த எண்ணிக்கையிலான கோல்களோடோ போட்டியை முடித்து கொள்ளவே போராடுவோம்". இது நியூ கேம்பில் அதற்கு மேலதிகமாக கோல்களை பார்சிலோனா அடிக்கும் என்ற தன்நம்பிக்கையே காட்டுகிறது.

உனக்கு வட போச்சு எனக்கு வாழ்க்கையே போச்சு!


 செல்சியா நேற்று தாக்குதல் ஆட்டம் ஆடியிருந்தால் கூட  இரண்டு கோல்களை போட்டிருக்கலாமா என்பது சந்தேகமே. காரணம் பார்சிலோனாவின் ஆட்டம் அவளவு சிறப்பாக இருந்தது. என்ன தான்  நேற்றைய தினம் செல்சியாவின் பதினொரு வீரர்களும் தடுப்பு ஆட்டத்தில் பிஸியாக இருந்திருந்தாலும் பார்சிலோனா அவர்களது கோல் பகுதில் வாழைப்பழம் போல நான்கு கோல் வாய்ப்புக்கள் உள்ளடக்கமாக பந்துகளை கொண்டுவந்ததை அவர்களால் தவிக்க முடியாது போனது. . செல்சியாவின் மைதானத்திலேயே இந்த நிலை என்றால் எந்த முறையான செல்சியாவின் தடுப்பு ஆட்டமும் பார்சிலோனாவின் மைதானமான நியூ கேம்பில்  பார்சிலோனாவை  தடுத்து நிறுத்துமா  என்பது கேள்வியே!

இதை ஒரு பார்சிலோனா ரசிகனாக் சொல்லவில்லை நேற்றைய போட்டியில் செல்சியாவின் அற்புதமான ஆட்டம் ஒன்றை எதிர் பார்த்து ஏமாந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். நேற்ரைய போட்டியின் புள்ளிவிபரங்களையும் , செல்சியா ஆடிய ஆட்டத்தையும் பார்த்த உங்களுக்கெ அது புரிந்திருக்கும்.பந்து கால்களில் இருந்த விகிதம் செல்சியா 20% , பார்சிலோனா 80%. இது நேற்றைய ஆட்டம் பாசிலோனா கைகளில் இருந்ததையே காட்டுகிறது.

20%
Possession
80%
209
Passes attempted
814
159 (76%)
Passes completed (success rate)
757 (93%)
Xavi (134)
Top individual passer
Jon Obi Mikel (32)
4
Attempts on goal
24
1
Attempts on target
6
(source BBC sports 18 April 2010)
  
இங்கு ஒன்றை குறிப்பிட வேண்டும் முதல் 17/04/2010 நடந்த இன்னொரு அரையிறுதியில் ஃகோம் டீமாக ஆடிய பயன் முனீக் அணி ஒரு மூர்கத்தனமாக, நாங்கள் ஃகோம் டீம் என்ற ஆதிக்கத்தில் பலம் வாய்ந்த மட்ரிட் அணிக்கெதிராக  சிறந்ததொரு  தாக்குதல் ஆட்டம் ஆடி இரண்டு கோல்கள் அடித்தது நினைவிருக்கலாம்.

இரண்டாவது சுற்று அரையிறுதி செல்சியாவுக்கு ஸ்டாம்ஃபோர்ட் பிறிட்ஜ் போல் கடினமானதாக  இருக்க போவதில்லை மாறாக மிகக் கடினமானதாக இருக்கப்போகிறது. அது போல் என்னதான் பார்சிலோனா தனது சொந்த மைதானத்தில் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் , தப்பி தவறி கூட செல்சியா நியூ கேம்பில் ஒரு கோலை போடும் பட்சத்தில் பார்சிலோனா மூன்று கோலகள் அடிக்கவேண்டிய கட்டாயம் உருவாகும். அது கொஞ்சம்  கடினமான பணியாக கூட இருக்கலாம்.

(இந்த பந்தியை ஒரு பொதுவான விமர்சனமாக பார்க்க வேண்டாம், இதை பார்சிலோனா ரசிகனாக எழுதுகிறேன்) ஒரு நடுநிலமையான உதைபந்தாட்ட விமர்சகனாக நான் அது ஒரு கடுமையான பணியாக இருக்கலாம் என கூறினாலும் ஒரு பார்சிலோனா ரசிகனாக , நியூ கேம்பில் பார்சிலோனாவுக்கு மூன்று கோல்கள் என்பது சாதாரணம் என்கிறது உள் மனது. மூன்று என்ன? செல்சியா நேற்று ஆடிய ஆட்டத்துக்கு நான்கே சாத்தியம் என்கிறது பட்சி. நேற்றே நான்கு அடித்திருக்க வேண்டியது! என்ன தான் "பாபா" படம் ஃபிளாப் என்று பொது இடத்தில் ஏற்றுக்கொண்டாலும், ஒரு ரஜினி ரசிகனாக அதை ஏற்றுக்கொள்ளாத மனநிலைதான் இதுவும்.

அது போக எதிர்வரும்  21ம் திகதி பார்சிலோனா , மட்ரிட் அணிகள் மோதும் லா லீகாவின் "எல் கிளாசிக்" ஆட்டம் வேறு வருகிறது. அதன் காய்ச்சல் இப்போதே பரவ ஆரம்பித்திருக்கிறது. இந்த வருட லா லீகாவின் ஆரம்ப கட்டத்தில் மட்ரிட்டின் மைதானத்தில் 1 - 3 என்று  மட்ரிட்டை வீழ்த்திய  பார்சிலோனா தங்களது மைதானத்தில் சோடை போகாது என நம்புகிறேன்.

இவ்விடத்தில் , பார்சிலோனா ரசிகனாக , அந்த அணிமீது இருந்த அசாத்திய நம்பிக்கையில், நேற்று செல்சியாவின் மீது பெட் கட்ட இருந்து , என் பேச்சைக்கேட்டு கட்டாமல் விட்டு பண் நஷ்டமான டென்மார்கில் இருக்கும் எனது மச்சான் உஷாந்தன் ஜகநாதனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.அரசியல்ல இதெல்லாம் சாதரணம் அப்பா! ஹி....ஹி...ஹி.....ஹி...

அட! மேற்சொன்ன ஏதாவது எதிர் வரும் 24ம் திகதி நியூ கேம்பில் பிழைத்தும் போகும் பட்சத்தில் மீண்டும் ஒரு உண்மைசொல்லும் பதிவுடன் உங்களை சந்திக்கிறேன். அது வரையில் தொடர்ந்து இணைந்திருங்கள். பின்னூட்டம் தாருங்கள்! நன்றி வணக்கம்.ஹி....ஹி...ஹி.....ஹி...



யம்மா சகிரா! ஏதோ நீ என்னோட கேர்ள் ஃபிரண்டா இருக்கிறதால அடிக்கடி தோத்து இப்பிடி கட்டிப்பிடி வைத்தியம் வாங்கலாம் போல இருக்கே!


Wednesday, April 18, 2012

பக்கத்து வீட்டில் பாச்சா பலிக்குமா? சூடு பிடிக்கிறது லண்டன்!



இந்த பதிவு நேற்று போட்டிருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும். உதை பந்தாட்ட ரசிகர்களின் திருவிழாவின் இறுதிக்கட்டம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதுதாங்க யுஏஃபா சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான அரையிறுதிப்போட்டிகள் நேற்று ஆரம்பித்திருக்கின்றது. அரையிறுதியின் முதல் சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கியிருக்கின்றது. ஒரு முனையில் ஜேர்மனியின் பிரபல அணியான பயன் முனீக்  எதிர் ஸ்பெயினின் ரியல் மட்ரிட் அணிகள் மோத , மறுமுனையில் இங்கிலாந்தின் செல்சியா அணியை ஸ்பெயினின் பார்சிலோன எதிர் கொள்கிறது.

நேற்றைய தினம் பயன் முனீக் அணியின் மைதானத்தில் இடம்பெற்ற முதல் அரையிறுதி  போட்டியில், மட்ரிட் அணியை 2- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது முனீக் அணி. இரண்டாவது அரையிறுதி மட்ரிட் அணியின் மைதானத்தில் எதிர்வரும் 23ம் திகதி இடம்பெற இருக்கின்றது.மட்ரிட் அணி தனது மைதானத்தில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய அணி என்பதால் முனீக் அணி இப்போது பெற்றிருக்கும் இந்த தற்காலிக வெற்றியை தக்கவைக்க  சற்று கடுமையாக போராடவேண்டியிருக்கும். ஏற்கனவே முனீக் அணி ஒரு கோல் முன்னணியில் இருப்பதால் பின்வரிசையை சற்று பலப்படுத்தி , தடுப்பு ஆட்டத்தில் ஆடுவது இப்போது பெற்றிருக்கும் தற்காலிக வெற்றியை தக்கவைக்க  பொருத்தமானதாக இருக்கும்.

மாறாக மேலதிக கோல் போடும் அவாவில் அதிகபட்ச தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கும் பட்சத்தில் , ரியல் மட்ரிட்டின் ஊடுருவல் தாக்கத்தை தடுக்க முடியாது போய்விடும். பின்வரிசை சற்று அசந்தாலும் சந்து பொந்துகள் கிடைக்கும் போதெல்லாம் சிந்து பாட காத்திருக்கும் கிறிஸ்டியானோ ரொனல்டோ,பென்ஸமா, ஓர்ஸில் ஆகியோருக்கு, பின்வரிசையை பலவீனப்படுத்தி இடம் கொடுப்பது முனீக் அணியை அதால பாதாளத்தில் தள்ளிவிடும்.

முனீக்கின் றிபறி, குரூஸ், ரொபன் போன்றோர் தமக்கு கிடைக்கும் பந்துகளை தவறவிடாமல் கோல் அடிப்பது அவசியம். நேற்றைய தினம் , குரூஸ் கோல் அடிக்கக்கூடிய சில பந்துகளை விரயமாக்கியது குறிப்பிடத்தக்கது. முல்லர், அலபா, குஸ்டாவா ஆகியோரது திறமான ஆட்டம் ரியல் மட்ட்ரிட்டின் மைதானத்தில் அளவுக்கு அதிகமாகவே தேவைப்படும். நேற்றைய போட்டியில் தடுமாறிய ஸ்டிவீன்ஸ்டேஜரது ஆட்டம் இன்னும் மெருகுபடாவிட்டால் , முனீக் அணி, பழுதுபட்ட அணியின் எஞ்ஜினுடன் தூரப்பிரயாணம் செய்யும் வண்டிக்கு சமனாகிவிடும். லாம் தலமையில்  இயங்கும் பின்வரிசை தடுப்பாட்டம் ஓக்கே ரகம் தான். மட்ரிட்டுடனான போட்டியில் கொஞ்சம் ஓவர்டைம் செய்யவேண்டியிருக்கும். 

இவையெல்லாம் சரியாக இயங்கும் பட்சத்தில் தமது சொந்த மைதானத்தில் வேறு இரண்டு அணிகள் இறுதிப்போட்டியில் ஆடுவதை பார்க்கும் துரதிஷ்டத்தை முனீக் அணி தடுக்கலாம். (சம்பியன்ஸ் கிண்ண இறுதிபோட்டி முனீக் நகரில் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.)மட்ரிட் அணியை பற்றி சொல்லவே வேண்டாம், தங்களது சொந்த மைதானத்தில் பின்னி பெடல் எடுப்பார்கள் என நம்பலாம். நேற்றைய போட்டி வெளி மைதான போட்டி என்பதால் கொஞ்சம் அதிக வேலை செய்த மட்ரிட்டின் பின்வரிசை தங்களது சொந்தமைதானத்தில்  கொஞ்சம் ஓய்வு எடுத்து விளையாட சந்தர்ப்பம் கிடைக்கும். 23ம் திகதி போட்டி தனியே கிரிஸ்டியானோ ரொனால்டோ, பெஸ்ஸமா, ஓர்சில்,காகா ஆகியோரின் ஷோவாகவே இருக்கும் என நம்பலாம். 

இதுவரை இடம்பெற்ற யுஏஃபா சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் அதிக தடவை சம்பியனாக வந்த மட்ரிட் அணியும் (9 தடவைகள் , கடைசியாக  2002 இல்), இதுவரை நான்கு தடவைகள் சம்பியனாக  வந்துள்ள முனீக் அணியும் (கடைசியாக 2001இல்) உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தை தருவார்கள் என எதிர்பார்க்கலாம்.



இப்போது இன்று நடைபெறவிருக்கும் அதிமுக்கியமான போட்டி பற்றி பார்க்கலாம். நடப்பு சம்பியனான பார்சிலோனா அணியும் ( இதுவரை பார்சிலோனா நான்கு தடவைகள் சம்பியனாக வந்துள்ளது,கடைசியாக 2011இல்), இதுவரை கிண்ணமே கைப்பற்றாத செல்சியா அணியும் ( 2008இல் இரண்டாமிடம் மட்டும் கிடைத்தது, சக நாட்டு அணியான மன்செஸ்டர் யுனைட்டட் அணியுடன் பரிதப தோல்வி கிடைத்தது.) செல்சியாவின் மைதானத்தில் மோதுகின்றன. 

செல்சியாவின் மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியே இரு அணிகளின் வாழ்வா சாவா போட்டியாக இருக்கும். இரு அணிகளின் வெற்றிவாய்ப்பை தீர்மானிக்கும் போட்டியாக இந்த போட்டி இருக்கும். காரணம் இரண்டாவது அரையிறுதி பார்சிலோனாவின் மைதானத்தில் இடம்பெற இருந்தாலும் அந்த போட்டியில் பார்சிலோனாவின் வெற்றி உறுதி. செல்சியாவால் பார்சிலோனாவை நியூ கேம்பில் வீழ்த்துவது என்பது முடியாத காரியம். தனது சொந்த மைதானமான நியூ கேம்பில் பார்சிலோனாவின் பலம் எப்படியானது என்பது உலகு அறிந்த செய்தி. 

ஆக இன்று செல்சியாவில் இடம்பெறவிருக்கும் இந்த போட்டிதான் செல்சியாவில் ஒரேயொரு அதிகபட்ச நம்பிக்கையாகவிருக்கும். அதே போல் பார்சிலோனாவும் இரண்டோ அல்லது அதற்கு மேலதிகமாக கோல்களை வாங்காமல் பார்த்துக்கொள்ளுதல் அவசியம். காரணம் இரண்டு அல்லது அதற்கு மேலதிகமாக கோல்களை செல்சியா அடித்துவிடும் பட்சத்தில் பார்சிலோனாவுக்கு கஷ்டகாலம் ஆரம்பித்துவிடும். நியூ கேம்பாகவே இருந்தாலும் , இரண்டு கோல்களை முன்னணியில் வைத்துக்கொண்டு பலமான பின்கள வரிசையை கொண்ட செல்சியா தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட தொடங்கினால் மூன்று கோல்களை அடித்து அந்த அணியை வீழ்த்துவது என்பது சற்று கடினமானது என்பதைவிட, இயலாத காரியமாகவே இருக்கும். தனது மைதானத்தில் பார்சிலோனா நிச்சயம் செல்சியாவை வீழ்த்தும், ஆனால் இரண்டுக்கு மேலதிகமாக கோல்கள் இருக்கும் பட்சத்தில், மொத்த கோல் அடிப்படையில் வீழ்த்தமுடியுமா என்பது கேள்விக்குறியே! ஆக மொத்தத்தில் செல்சியாவை விட ஒரு கோல் பின்னணியில் அல்லது  சமநிலையில் போட்டியை முடித்துக்கொள்வதே பார்சிலோனாவின் கிட்னிக்கு நல்லது. அதற்காகவே பார்சிலோனாவும் போராடும் என்பது எனது கணிப்பு, ஒரு கோல் பின்னணி என்பது பார்சிலோனாவுக்கு பெரிய தாக்கமாக இருக்காது. செல்சியாவுக்கு எதிராக தனது மைதானமான நியூ கேம்பில் இரண்டு கோல்களை அடிப்பது என்பது பார்சிலோனாவுக்கு கஷ்டமான வேலையாக இருக்கப்போவது இல்லை.. இப்போது பார்சிலோனா இருக்கும் ஃபோர்மில் இரண்டென்ன மூன்றும் சாத்தியம் தான். அதற்காக செல்சியாவிடம் இன்று இரண்டு அல்லது அதற்கு மேலதிகமாக வாங்கிகட்டினால்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!



இப்போது இந்த போட்டியில் இரு அணிகளின் சாதக பாதக  நிலைகளை பார்க்கலாம்.முதலில் செல்சியாவின் பக்கம் போகலாம்.

முதலில் இது செல்சியா அணியின் மைதானம், பழக்கப்பட்ட மைதானம்  ஆர்பரிக்கும் ரசிகர்கள் இவை போதும் ,செல்சியா அவர்களது மைதானத்தில் ஒரு உத்வேகத்துடன் ஆடுவதற்கு, இதுவே அவர்களது முதல் பலம், இது ஒரு சின்ன சைக்காலஜி!

அடுத்து செல்சியாவின் பலம் வாய்ந்த வீரர்கள் வரிசை. டொரைஸ், டிரக்பா, கோல், டெர்ரி, மிகேல், கலோவு, லூகாகு, லம்பார்ட் என்று மிரட்டும் வீரர்களைக்கொண்ட அணியாக இருகிறது செல்சியா! சமீப கால போட்டிகளில் செல்சியாவின் முன்கள வீரர்களது ஆட்டம் பிரம்மாதமாக இருகிறது. கடந்த ஃஎப்.ஏ கிண்ண டோடின்காமுடனான போட்டியில் 5 கோல்கள் அடித்து அசத்தியதை மறக்க முடியாதது.

பார்சிலோனாவின் வயதான புயோல் வகையறாக்கள் நெருங்கமுடியாத வேகத்தில் ஓடும் டிரக்பா, டொரைஸ், மிகேல் ஆகியோர் கூடுதல் பலம், பார்சிலோனாவின் பின்வரிசை சற்றே கண் அசந்தாலும் அந்த செக்கனில் கோல் போடும் அசகாய சூரர்களை கொண்டது செல்சியா. "லம்பார்ட்"  செல்சியாவின் தூண் , முன்வரிசை வீரர்களுக்கு சரியான் முறையில் பந்துகளை பகிர்வதிலிருந்து , சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கோல் அடித்து அசத்தும் அசகாய சூரன். இவர் மீது பார்சிலோனாவின் ஒரு கண் இருக்க வேண்டியது அவசியம்.

 செல்சியாவின் உச்சக்கட்ட பலம் அதன பின்வரிசை தான் என்றால் மிகையாகாது. கோல், டெரி, லுவிஸ் என்று மெஸ்ஸி, பெட்ரோ, ஃபபிரிகாஸ் வகையறாக்களுக்கு சவால் விடும் அளவுக்கு திறமையான வீரர்கள். இவர்களது கண்களில் மண்ணைத்தூவி விடு கோல் போடுவது மெஸ்ஸி வகையறாக்களின் மேலதிக தகமையால் தான் முடியும். கோல் போடனும்ன்னா கொஞ்சம் ஓவர் டைம் பார்க்கணும் பாய்ஸ்!

செல்சியாவின் பலகீனம் என்றால் சற்று வயதான வீரர்கள். சூடான ஆட்டத்தில் ஈடுகுடுக்காத இவர்களது உடல்தகுதிதான் சற்று பிரச்சனைக்குரியது. டெர்ரி, லம்பார்ட், டரகோபா போன்றோர் சிறந்த ஆட்டக்காரர்களாக இருக்கின்ற அதே வேளை வேகமான ஆட்டத்தின் போது இவர்களது பூஸ்ட் இறங்கி விடுவது ஒரு மைனஸ் என்று சொல்லலாம்.


அடுத்து சாபி, இனியெஸ்டா வகையறாக்களை சமாளிக்க ஒரே ஒரு லம்பார்ட் போதாது, இந்த இரு இமயங்களையும் சமாளிக்கும் அளவுக்கு மத்திய வரிசையில்  போதுமான தகுதியான ஆட்பலம் இல்லாமை. இந்த இருவருக்கும் இடம் கொடுக்கும் பட்சத்தில் மெஸ்ஸி அல்லது அலக்சிஸ் கோல் போடுவது உறுதி.

இப்போது பார்சிலோனாவின் பக்கம் வரலாம் பலம் என்று பார்க்கப்போனால் , பார்சிலோனாவுக்கு அதன் வீரர்கள் மட்டுமே பலம். உளரீதியாக எந்த பலமும் கிடைக்கப்போவது இல்லை. ஏனெனில் இது செல்சியாவின் மைதானம். வேண்டுமானால் கடந்த போட்டிகளில் லண்டனில் வைத்து செல்சியாவை வீழ்த்திய ஒரு நம்பிக்கை மட்டுமே ஒரே ஒரு உள ரீதியான நம்பிக்கையாக இருக்கலாம்.

மெஸ்ஸி, சாபி, இனியெஸ்டா, ஃபப்ரிகாஸ், டானி அல்விஸ் ,சேர்ஜியோ, பெட்ரோ, அலக்ஸிஸ், தியாகோ, பீகே போன்ற வீரர்கள் நல்ல ஃபோர்மில் இருப்பது பார்சிலோனாவின் பலம். இனியெஸ்டா + சாபியின் உதவியுடன் மெஸ்ஸி ஒரு கோல் போட்டால் அதுவே பார்சிலோனாவுக்கு போதுமானதாக இருக்கும். ( செல்சியா இரண்டு கோல்களுக்கு மேல் அடிக்காத பட்சத்தில்) இடைவேளையின் பின்பு களமிறங்கும் கொயக்கா, டெல்லொ போன்றோர் தங்கள் பங்குக்கு, தங்களது இளமை துள்ளும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அது கூடுதல் பலமாக இருக்கும். ஆனால் டெல்லோ இந்த போட்டியில் ஆடும் சாத்தியம் இல்லை என்றே நினைக்கிறேன்.



பார்சிலோனாவின் பலவீனம் என்று பார்க்கும் போது முதலாவது வேற்று மைதானம் என்பது தான். அந்த மன உளைச்சலுடன் ஆடுவது சற்று சவாலான காரியம் தான்.

அதைவிட அணிரீதியில் பார்சிலோனாவின் பலகீனம் என்றால் அதன் பின்கள வரிசை தான். அபிடால் புற்று நோய் என்று வைத்தியம் பார்க்க கிளம்பிவிட்டதால், அல்லாடுகிறது பார்சிலோனாவின் பின்வரிசை. இன்று எதிர் பார்க்கப்படும் பின்கள வரிசை புயோல்,அண்ரியானோ, பீகே, டானி அல்விஸ். இதில் இடது பக்க பிகள வீரராக இருக்கும் டானி அல்விஸ் அதிகமான நேரங்கள் இடது பக்க முன்கள வீரர்களுக்கு உதவும் பொருட்டு அவரது பொசிசன் அமைக்கப்பட்டு இருப்பதால் , டிரகோபா, காலோஉ போன்றோர் அந்த பக்கமாக ஊடுருவும் அபாயம்ம் அதிகம். 

அடுத்டு அண்ரியானோ, துடிதுடிப்பான வேகமான பின்கள வீரர், செல்சியாவின் அதிவேகமாக ஓடும் முன்கள வீரர்களை துரத்தக்கூடிய ஒருவர். ஆனால் மனிதர் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவதால் மஞ்சள், சிவப்பு அட்டைகள் காட்டப்பட்டு வெளியேறும் அபாயம் அதிகம்.

அடுத்து புயோல்,உலகின் தலைசிறந்த சிறந்த பின்களவீரர், அணியின் தலைவர். ஆனால் சிங்கத்துக்கு வயசாகிவிட்டது. சீறி ஓடும் செல்சியாவின் சிறுத்தைகளை துரத்தி அடிக்க வேகம் காணாது. இவரை களமிறக்காமல் அந்த இடத்துக்கு மஸ்கரானோவை களமிறக்குவது உத்தமம்.

அடுத்து பீகே! பார்சிலோனாவின் பின்களத்தில் ஒரேயொரு நம்பிக்கை இவர் தான். இவரும் பல்பு வாங்கும் பட்சத்தில் கிழிஞ்சுது கிருஷ்ணகிரி!



இப்போது சமீபத்தைய போட்டிகளில் இந்த இரு அணிகளும் சந்தித்துக்கொண்ட போது எத்தனை ஆணிகள் பிடுங்கப்பட்டது என்று பார்க்கலாம்.

21 பெப்ரவரி 2006 பார்சிலோனா வெற்றி 2 - 1 (செல்சியா)
08 மார்ச் 2006 போட்டி சமநிலை 1 - 1 (பார்சிலோனா)
18 ஒக்டோபர் 2006 செல்சியா வெற்றி 1 - 0 (செல்சியா)
31 ஒக்டோபர் 2006 போட்டி சமநிலை 2- 2 (பார்சிலோனா)
28 ஏப்ரல் 2009 போட்டி சமநிலை 0 - 0 (பார்சிலோனா)
06 மே 2009 போட்டி சமநிலை 1 - 1  (செல்சியா)

அடைப்புக்குள் இருப்பது போட்டி நடந்த மைதான அணி அது தாங்க ஃகோம் டீம்.

இந்த தரவுகளின் அடிப்படையில் இரு அணிகளும் சம பலம் கொண்டிருப்பதையே காட்டுகின்றது. ஒரு சின்ன முன்னேற்றம் மட்டுமே மாற்றமாகியிருக்கின்றது. அதாவது இந்த போட்டிகள் இடம்பெற்ற காலப்பகுதிகள் 2006 - 2009 வரையானதாகும். இக் காலப்பகுதியில் செல்சியாவின் பலம் ஓங்கி இருந்தது நிதர்சனம். ஆனால் 2010 உலக கிண்ண போட்டிகளின் பின்னர் பார்சிலோனாவின் பலமானது சற்று அதிகரித்திருக்கிறது. 2010 உலக கிண்ணத்தை கைப்பற்றிய ஸ்பெயின் அணியின் அனேக வீரர்களை தன்னகத்தே கொண்டிருக்கும் பார்சிலோனா அணி உள ரீதியிலும் , வீரர்களின் செயற்திறனிலும் கூடுதல் பலம் பெற்றிருக்கிறது. இதை 2010,2011,2012 சீசன்களில் பார்சிலோனாவின் சாதனைகளை வைத்தே கூறிவிடலாம்.

ஆக இன்று சமபலம் கொண்ட உலகின் தலைசிறந்த இரு அணிகள் மோதுகின்றன. இன்று எதிர் பார்க்கும் கோல் விபரம். 
(1,1) அல்லது 
(2,1) செல்சியா வெற்றி.

24ம் திகதி பார்சிலோனாவின் மைதானமான  நியூ கேம்பில் எதிர் பார்க்கப்படும் கோல் விபரம்
(2,0) பார்சிலோன வெற்றி
அல்லது
(3,1) பார்சிலோனா வெற்றி

இன்றைய போட்டி இலங்கை , இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15கு ஆரம்பமாகிறது. இலங்கை மற்றும் இந்தியாவில் டென் அக்ஷன் அலைவரிசையில் போட்டியை பார்க்ககூடியதாக இருக்கும். ஒன்லைனில் போட்டியை காண்பதற்கு www.livetv.ru/en என்ற இணையத்துக்கு செல்லுங்கள்.

உங்களது கருத்துக்களை தயவுசெய்து பின்னூட்டமாக இடுங்கள்




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...