உதைபந்து

Saturday, May 26, 2012

சியர் லீடர்ஸ் பெண்களுக்கு நிகழ்ந்த மற்றுமொரு துஷ்பிரயோகம்! ஐ.பி.எல் இல் தொடரும் அநியாயம்! -கழுகுக் கண்கள்!!!-


எங்கள நிம்மதியா இருக்க விடவே மாட்டீங்களா?

இன்று இந்தியாவின் எந்த மீடியாவை திருப்பினாலும் ஐ.பி.எல் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்தவண்ணமே தான் உள்ளது. விருந்தின் போது நடுவில் ஒரு சியர் லீடர் பெண்ணை நிறுத்தி வைத்து வீரர்கள் சுற்றிவர நின்று கண்ட இடத்தில் எல்லாம் தட்டினாகள், போதையில் வீரர் ஒருவர் சியர் லீடர் பெண்ணின் அறைக்குள் புகுந்து அத்துமீறல் , குடி , வெறி , களியாட்டம் மலிந்து போய் "என்ன கைய புடிச்சு இழுத்தியா?" ரேஞ்சில் பஞ்சாயத்து போய்க்கொண்டு இருக்கிறது.

ஐ.பி.எல் இன் ஆரம்பத்தில், அதாவது முதலாவது ஐ.பி.எல் இன் போது வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்கு முன்னர், இந்த பெண்களால் ஐ.பி.எல் அடையபோகும் நன்மைகளை தெரிந்து தானோ என்னமோ இந்த சியர் லீடர்களை குத்தகைக்கு (????) எடுத்திருந்தார் இப்போது கேடி என்று அறியப்பட்டிருக்கும் லலித் மோடி.

ஐ.பி.எல் இல் இந்த சியர் லீடர்கள் எந்தளவுக்கு முக்கியமாகி போனார்கள் என்றால், இன்று கிரிக்கட் தெரியாத கிழவன் கூட இந்த பெண்களின் "ரெக்கா டான்ஸ்" ( பெரிசுகள் அப்பிடித்தாம்பா சொல்லுதுங்க) பார்ப்பதற்ற்கு அலைகடலென அணிதிரண்டு வருவதை அவதானிக்க முடிகிறது. வந்து போனது பவுண்டரியா , சிக்ஸரா , அல்லது விக்கட்டா என்று கூட தெரியாமல் இந்த பொண்ணுங்க ஆடுகையில் ஆவென்று வாயை பொளக்குதுங்க.  ( ஏன் தெரியணும்ங்கிறேன்? இதில எது நடந்தாலும் ஏதோ ஒரு குரூப் ஆடுதில்ல, நீ மூடிக்கிட்டு எழுதுடா" என்று குரல்கள் எனக்கு கேட்காமல் இல்லை.) 

இந்த பெண்களின் பின்னால் உக்காந்து அவர்கள் ஆடுகையில் பப்பரப்பே என்று நம்மாளு பார்த்துக்கொண்டிருக்க, சீரியலுக்கு விட்ட இடைவெளையில் , பிரட் லீயை ஒரு ரவுசுவிடும் நோக்கில் டி.வி யை திருப்பும் அந்த ஆளின் வீட்டுக்காரம்மா , தன்னிலை மறந்து கணவன் தியான நிலையில் இருப்பதை துரதிஷ்டவசமாக பாழாபோன கமரா மேன் காட்டிகொடுத்துவிட வீட்டில் உருட்டுக்கட்டைகள் உருளும் சம்பவங்கள் நிகழுமழவுக்கு முக்கியமாகி இருக்கிறர்கள். 

சும்மா பூந்து வெளாயாடுவோமில்ல....


இரண்டாவது ஐ.பி.எல் பாதுகாப்பு காரணங்களுக்காக தென் ஆபிரிக்காவுக்கு இடமாற்றப் பட்டபோது ஒரு ஆங்கிலேயரை கண்ட பேட்டி இன்னமும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது.

"சார் கிரிக்கட் எல்லாம் பாக்க வந்திருக்கீங்க. இன்று நடை பெறும் போட்டியில் யாரு ஜெயிப்பாங்கன்னு நெனைக்கிறீங்க? சென்னையா ? இல்லை மும்பையா?"

"ஓ! இன்னிக்கு ஆடுறது சென்னையும் மும்பையுமா?"

"என்ன சார் இப்பிடி சொல்றீங்க, யார் ஆடுறதுன்னு தெரியாமலா மேட்ச் பாக்க வந்தீங்க?"

"சார் சார் எனக்கு கிரிக்கட் அவளவா தெரியாது சொல்லப்போனா எனக்கு சுத்தமா தெரியாது I just came to hang out with Cheer leaders "

இத அப்பிடியே தமிழில் மொழிபெயர்த்தால் "நான் இந்த சியர் லீடர் பெண்களுடன் தொங்குவதற்கு வந்தேன் " என்று வேற மாதிரி ஒரு அர்த்தம் வந்துவிடுவதால், அவர் சொல்ல வந்த விடயத்தை நல்ல தமிழில் சொல்லிவிடுகிறேன்.

"எனக்கு கிரிக்கட் எல்லாம் தெரியாது, நான் வந்தது இந்த சியர் லீடர் பெண்களின் ஆட்டத்தை பார்க்கத்தான்"

இப்படி கிரிக்கட் என்றால் முடிவில் எத்தனை கோல் அடித்தார்கள் என்று கேட்பவனையெல்லாம் மைதானத்துக்கு வரவளைத்தது யாரென்றால், வீரர்களின் சூடான ஆட்டம் மட்டுமல்ல அதையும் தாண்டி புனிதமான இந்த சியர் லீடர்ஸ் தான்.


ஒருவர் சென்னை அணியின் யூனிபோர்ம் அணிந்து போட்டி பார்த்துக்கொண்டு இருந்தார், போட்டி செம டொக்கு ஆட்டமா போய்க்கொண்டு இருந்தது, இவர் ரொம்ப டென்ஷனாக இருந்தார், "அட அடிங்கப்பா, ரன் ரேட் சரியில்லப்பா"ன்னு செம கமண்டு வேற, திடீர்ன்னு சென்னை பட்ஸ்மென் ஆட்டமிழந்து வெளியே போனார்.  உடனே நம்மாளு "ஜே! யா.. ஜே!"ன்னு செவ்விந்தியன் கணக்காட்டம் கத்திக்கொண்டு ஓடினார், உடனே பக்கத்தில் இருந்தவர் கேட்டார் "யோவ்! சென்னைக்கு சப்போர்ட் பண்ணுற, ஆனா உங்க பட்ச்மென் அவுட்டா போனதுக்கு ரொம்ப சந்தோஷப்படுற?" நம்மாளு சொன்னார் "அவன் இருந்தும் என்னதுக்கு, ஒரு பவுண்டரி அடிக்கிறானா? இப்போ பாரு அவன் அவுட்டா போனதுக்கு மும்பையோட சியர் லீடர்ஸ் ஆடுவாய்ங்க". 

இப்படி கட்சி மாறி சப்போர்ட் பண்ணும் அளவுக்கு ஆட்களை வளைத்துப்போட்டுவிட்ட இந்த சியர் லீடர்ஸ்சுக்கு தான் இப்படியொரு கோர சம்பவம், அல்லது சியர் லீடஸ் துஷ்பிரயோகம் என்று கூட சொல்லலாம்.

இந்த பொது ஜனங்களை விடுவோம். என்னையே எடுத்துக்கொள்வோம், நான் இந்த டீமுக்கு தான் சப்போர்ட் என்று கிடையாது ஆனால் நன்ன்றாக வெளுத்து வாங்கும் அணிக்கு நல்ல ரசிகன், காரணம் ஒன்றுமில்லை அப்போ தானே அந்த அணியின் சியர் லீடர்ஸ் மெரிண்ட ஆட்டம் ஆடுவார்கள். அதுதாங்க "குதிச்சு குதிச்சு ஆடலாம்". சோ, இப்படியா ஒரு கலா+ கிரிக்கட் ரசிகனான நான் முதல் நான்கு ஐ.பி.எல் களையும் பெரும்பாலும் தவற விடாமல் பார்த்து வந்தேன். ஆனால் இந்த ஐ.பி.எல் இல் இந்த பெண்களின் துஷ்பிரயோகம் இடம்பெற்று இருப்பதால் நான் முதலிரண்டு போட்டிகளி தவிர வேறு போட்டிகள் பார்க்கவில்லை. நான் பார்க்காமல் இருப்பதால் இந்த துஷ்பிரயோகம் ஒன்றும் நின்றுவிடப்போவதில்லை. இது எப்படியென்றால்  இறைச்சி உண்ணாமல் ஒருவன்  இருப்பதால் இறைச்சி அறுப்பது நின்றுவிடப்போவதில்லை போன்று தான் இதுவும். ஒரு பகிஷ்கரிப்பு. அம்புட்டுத்தான். 

ஒரே புழுக்கமா இருக்கப்பா...

சரி அப்பிடி என்ன துஷ்பிரயோகம் என்கிறீர்களா? அட பின்ன என்னங்க? இன்று மிருகங்களுக்கு நல்ல காற்றோட்டமான இருப்பிடம் இருக்கிறதா, நல்ல வெளிச்சம் , உள்ளே வெளிச்சம் வருகிறதா என சரி பார்ப்பதற்கு சந்துக்கொரு அமிப்பு இருக்கிறது. ஆனால் இந்த பெண்களுக்கு? 

லலித் மோடி இருக்கும் போது இந்திய நாட்டின் பொருளாதார நெருக்கடி உணர்ந்து , ஆங்காங்கே கிடந்த மிச்ச மீதி துணிகளை எல்லாம் எடுத்து இந்த சியர் லீடர்ஸ்சுக்கு ஆடை தைத்து கொடுத்தார். அது இந்திய போருளாதரத்துக்கு பொருத்தமானதாகவும், நல்ல காற்றோட்டமானதாகவும், வெளிச்சம் விழக்கூடியதாகவும் இருந்தது. அது போக இந்தியாவில் இருந்த சிறிய சிறிய துண்டுகள் (துணிகள்) எல்லாம் இவர்கள் மேல் ஆடையாய் விழுந்ததால் இந்திய பட்ஜெட்டிலும் துண்டு விழவில்லை.

ஆனால் இப்போது நிர்வாகம் மாறிவிட்ட பிறகு யாருக்கும் பொறுப்பில்லை! இந்திய மற்றும் உலக பொருளாதாரம் மீது எந்தவிதமான கவலையும் இல்லை. அதுபோக இந்த சியர் லீடர்சின் உடல் நலத்திலும் எந்தவிதமான அக்கறையும் இல்லை. 

இந்த ஐ.பி.எல் இல் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறோம் பேர்வழியென்று பாவம் இந்த அப்பாவி சியர் லீடர்சுக்கு எட்டு முழம் , பத்து முழம் என்று புடவைகளை சுற்றிவிட்டிருக்கிறார்கள். லலித் மோடி காலப்பகுதியில் துணிக்கென்று மிகச்சொற்பமான தொகை செலவிடப்பட, இந்த நிர்வாகத்தில் பெருமளவான துணிப்பாவனையினால் , பட்டுப்பூச்சிகளால் அந்தளவு துணி உற்பத்தி செய்யமுடியாது போய்விட இந்தியாவின் கைத்தொழில் சரிந்தது, கைத்தொழில் சரிவால் பணவீக்கம் ஏற்பட்டுவிட சர்வதேச சந்தையிலும் அது எதிரொலித்தது, உடனே கச்சா எண்ணையின் விலை அதிகரித்துவிட விளைவு இன்று இந்தியாவில் ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 70+ ரூபாய்கள்!!!!!!! இந்த தாக்கம் எத்தனை பேருக்கு புரிந்திருக்கிறது?

எப்பிடி இருந்த நாங்க இப்பிடி ஆயிட்டோம்!

எண்ணைவிலை உயர்வுக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தும் சமூக அக்கறை கொண்ட அமைப்புக்களே உங்கள் பார்வையை உடனே இந்த சியர் லீடர்ஸ் துஷ்பிரயோக வழக்குக்கு திருப்புங்கள் அப்புறம் என்ன வருகின்ற செவ்வாய் கிழமைக்குள் இந்தியா வல்லரசாகிவிடும். இப்படி ஒரு ஆலஓசனை தந்ததற்காக எனக்கு நோபல் பரிசுகளோ, பணப்பரிசுகளோ, பொற்கிழிகளோ தரவேண்டியதில்லை, ஏதோ அண்டை நாட்டுக்கு என்னாலான உதவியாக இருந்துவிட்டு போகட்டுமே! 

சரி! இந்திய பொருளாதாரத்தின் மீது தான் யாருக்கும் அக்கறை இல்லை, அட அந்த பெண்களின் உடல் நலத்தின் மீதுமா இல்லை? இந்தா தண்டி ஆடையை சுற்றிக்கொண்டு ஆடுவது என்பது எவளவு கடினம் என்று மனிதாபிமானத்தோடு சிந்தித்து பார்த்தோமா? அதை தான் விடுங்கள், ஆரம்பாகால ஐ.பி.எல் சியர் லீடர் ஆடைகளில் இருந்த காற்றோட்ட + வெளிச்சம் விழும் வசதிகள் தான் இந்த ஆடைகளில் இருக்கிறதா? 

சற்று சிந்தித்து பார்ப்போம்! மதுரை ஆதீனமாக நித்தியானந்த பொறுப்பேற்ற பிறகு வரப்போகும் வீடியோவை பார்க்க இருக்கும் ஆர்வத்தில் பாதியாவது இந்த விடயத்தில் காட்டி சியர் லீடர்சின் இந்த சுமை பாதியாக குறைக்க ஒரு வழி பண்ணக்கூடாதா?

என்னால் இப்போதெல்லாம் கிறெஸ் கைல் மாங்கு மாங்கு என்று அடித்து நொருக்குவதை எல்லாம் ரசிக்க முடியவில்லை, அவர் அடிக்கும் போது காற்றோட்டம் இல்லாத இந்த ஆடையை தூக்கி கொண்டு இந்த பெண்கள் கஷ்டப்படுவதை பார்க்கும் போது என்னால் மூன்று தட்டு சோற்றுக்கு  மேல் சாப்பிட முடிவதில்லை!

இதுகுறித்து ஒவ்வொரு அணி தலைமைகளுடனும் வாக்குவாதப்பட்டு நான் எடுத்த எனது பகீரத பிரயத்தனத்தால், சில அணிகள் சற்று சிமைக்குறைப்பு செய்து காற்றோட்ட வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். சிலர் அவ்வாறு செய்வதாக கூறினாலும் இன்னும் திருந்திய பாடு இல்லை.

அதிலும் சிலர் இன்னொரு அநியாயம் வேறு செஇகிறார்கள். இந்த கலாசார உடைகள் காற்றொட்டத்தை தடுத்து உடலுக்கு தான் சுமை தருகிறது என்று பார்த்தால் சில அணி தலமைகள் இந்த சியர் லீடர்சை உள ரீதியாகவும் துன்புறுத்துகிறார்கள். எப்படி என்றால் ஒரு ஜீன்ஸ்சை அணியக்கொடுத்துவிட்டு அதற்கு மேல் ஒரு குட்டி ஷோர்ட்சை போட்டு விட்டிருக்கிறார்கள். கேட்டால அந்த ஜீன்ஸ் கழன்று விழாமல் இருக்கவாம். இது இந்த சியர் லீடர்ச் பெண்களின் மனதில் "நாங்கள் என்ன சின்ன பிள்ளைகளா? எங்களுக்கு எங்கள் ஜீன்ஸ்சை பார்த்துக்கொள்ள தெரியாதா? எங்களை சிறு பிள்ளை போல் நடத்துகிறார்கள்" என்று மனதளவில் குமுறி மனநிலை பாதிப்புக்களை ஏற்படுத்துமளவுக்கு ஒரு பூதாகரமான பிரச்சனையாக மாறிவிட்டிருக்கிறது.

ஆக நான் என்ன சொல்கிறேன் என்றால் அந்த ஷோர்ட்சை மட்டும் கொடுங்கள் அவர்கள் மனநிலையோடு விளையாடாதீர்கள்.

எனதருமை ஐ.பி.எல் ரசிகர்களே! சமூக தொண்டு நிறுவனங்களே! இந்திய பொருளாதார அமைச்சரே, பொருளாதார வல்லுனர்களே, நாம் அனைவரும் ஒன்றுபட்டு இந்த சியர் லீடர்ஸ் துஷ்பிரயோகத்துக்கு ஒரு முடிவு கட்டுவோமானால் இந்தியாவில் பாதி பிரச்சினை தீர்ந்து விடும் . இப்போதைக்கு இந்த பெட்ரோல் விலை குறையும். 

கேட்க செவியுள்ளோன் கேட்கட்டும்!

டிஸ்கி  :- ஐ.பி.எல் சியர் லீடர்ஸ் அணிந்திருக்கும் ஆடைகள் ( கலாசார ஆடைகள்) ஐ.பி.எல் இன் சுவாரசியத்தை குறைப்பதாக இருக்கிற படியால் இனிவரும் போட்டிகளில் ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் ஆடை வடிவமைப்பு இருக்கும். 

- ஐ.பி.எல் அதிகாரி ஒருவர்-
(ஏதோ ஒரு ஊடகத்தில் படித்த ஞாபகம்) 

இந்தியாவில் இருக்கின்ற பிரச்சினைகளில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுள் இதுதான் முக்கியாமானதென்று அவர் கருதியிருப்பதால் , அண்ணலின் கருத்துக்கு நானும் வலுச்செர்த்து இருக்கிறேன்.
- வெளங்கிரும், நிச்சயம் வல்லரசு ஆயிடுவோம்- 

ஐ! வாண்ட் ஒன்லி காமார்ஷியல் , ஐ வாண்ட் ஒன்லி கமார்ஷியல்!



8 comments:

  1. //இந்த தாக்கம் எத்தனை பேருக்கு புரிந்திருக்கிறது?//
    அடப்பாவி.. OKOK சந்தானம் ரேஞ்சுக்கு கணக்கு காட்டுறான்ப்பா இவன்.. கேட்டுக்கோங்க! கேட்டுக்கோங்க!

    ReplyDelete
    Replies
    1. உங்கள மாதிரி பொறுப்பில்லாத இளைஞர்களால் தான் ( எஸ்கியூஸ் மீ, நீங்க இளைஞரா?) இந்த ஆசிய பிராந்தியமே இப்பிடி பொருளாதார சீரழிவில இருக்கு, நானாவது பொறுப்பா யோசிக்கிறனே! அது உங்களுக்கு பொறுக்காதே, !

      வந்ததுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி தல! அதுசரி என்ன உனக்கு பதிவு ஒண்ணும் சிக்கலயா? ரொம்ப நாளா ரோம் தான் எரிஞ்சுகிட்டு கெடக்கு!

      Delete
  2. கலக்கிறீங்க மாப்பு....அருமை அருமை...!!!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி நண்பா.... அடிக்கடி வாருங்கள் , சந்திக்கலாம்!

      Delete
  3. இந்திய பொருளாதாரத்தின் மீது தான் யாருக்கும் அக்கறை இல்லை, அட அந்த பெண்களின் உடல் நலத்தின் மீதுமா இல்லை? இந்தா தண்டி ஆடையை சுற்றிக்கொண்டு ஆடுவது என்பது எவளவு கடினம் என்று மனிதாபிமானத்தோடு சிந்தித்து பார்த்தோமா? அதை தான் விடுங்கள், ஆரம்பாகால ஐ.பி.எல் சியர் லீடர் ஆடைகளில் இருந்த காற்றோட்ட + வெளிச்சம் விழும் வசதிகள் தான் இந்த ஆடைகளில் இருக்கிறதா?

    ஆடு நனையுதென்று ஓநாய் அழுகிறதோ

    ReplyDelete
    Replies
    1. அட என்னப்பா நீங்க? இந்திய கிரிக்கட் சபை அதிகாரி ஒருவரே இது சம்மந்தமா தன்னோட கவலய தெரிவிச்சு ஊடகம் ஒண்ணுக்கு பேட்டி குடித்திருக்காரு. அத விட்டுப்புட்டு நானா போயி அந்த அப்பாவி பொண்ணுகளுக்கு ஆதரவு பண்ணலாம்னு பாத்தா வந்துட்டாய்ங்க ஆறாம் வகுப்பில படிச்ச பழமொழிய தூக்கிட்டு! :) lol

      என்ன மிஸ்டர் கோபிநாத்! எப்போ உங்க பிளாக் வந்தாலும் சிரிக்க தான் கூப்பிடுறீங்க, வேற ஏதும் இன்னும் சிக்கலயா?

      Delete
  4. ///"எனக்கு கிரிக்கட் எல்லாம் தெரியாது, நான் வந்தது இந்த சியர் லீடர் பெண்களின் ஆட்டத்தை பார்க்கத்தான்"///
    சரி மச்சி..நல்ல ரகம்தான்.

    பதிவு கலகலவென செம்மையா இருக்கு நண்பா..தாமதமாக பின்னூட்டம் அளிப்பதற்கு மன்னிக்கவும்.
    பார்சலோனா தெய்ச்சாச்சு நண்பா..கேம் பார்த்தீங்களா ? ஏதாச்சும் எழுதலாமே..வருகிறேன்.பகிர்வுக்கு ரொம்ப நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மன்னிப்பு ! தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை! எபோ வந்தாலும் என்ன நண்பா, நாம எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு! மண்ணுக்குள்ள மண்ணு! எனக்கு என்ன கவலன்னா நான் உன்னய தொவச்சு தொங்க போட்டு ஒரு பதிவு எழுதினப்ப, அத நீயி படிக்கலயேன்னு தான்!

      பார்சா மேட்ச் பார்த்தேன், ஆட்டம் ரகளை! அது சமந்தமாகவும் , குவாரியோலாவுக்கு பிரியாவிடை கொடுத்தும் பதிவு தயார் செய்கிறேன், விரைவில் பதிவிடுகிறேன். ( பாரு குமரா! நாம மேட்ச் ஜெயிச்சது தான் ஜெயிச்சோம், இந்த JZ பயல ஆளையே காணம்)

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...