உதைபந்து

Wednesday, August 8, 2012

அவளும்! என்னோடு சேர்த்து நாலைந்து நாய்களும்!



"உன்ட அண்ணனுக்கு இப்ப தான்டா இருபத்தொரு வயசாகுது.... அதுக்குள்ள கலியாணமா?"

" என்னடா செய்யிறது? அந்த பண்ணயாரிட ஆளுகளுக்கு , இவன் மேல ஒரு கண் விழுந்து போச்சு. இவன் வேற சும்மா இருக்கேலாம , உந்த கல்லெறி காற பொடியளோட கொஞ்சம் பழக்கமா இருந்திட்டான். அதான் , ஒரு கலியாணம் செய்திட்டால் , பண்ணையார் ஆக்களிட்ட இருந்து கொஞ்சம் கரச்சல் குறையும் எண்டு அம்மா யோசிக்கிறாடா..அதான், அவசர அவசரமா உந்த ஏற்பாடு"

"டேய்.. உன்ட அண்ணன் தருமிலிங்கத்தாருட மகள் .. அவள் தானடா அந்த சிவல பொட்ட இலக்கியாவெல்லோ பாத்தவன், அது என்னடா நடந்தது?"

"அவவ தான்டா இப்போ அண்ணன் கட்ட போறார்"

"உன்ர கொம்மா தானே அவயள்ர சாதி சரியில்ல எண்டு, உன்ட‌ அண்ணனோட பெரிய பிரச்சினப்பட்டாவே?"

"படிச்ச நமக்கு விளங்குது, நம்மட பெருசுகளுக்கு ஒண்டும் விளங்கிறதில்ல மச்சான், சாதியாவது, கத்தரிக்காயாவது... ஓமடா முதல் மேலையும் கீழையும் குதிச்சவ தான், இப்ப தன்ட மகனிட உயிருக்கு ஆபத்து எண்டோண அவசர அவசரமா கலியாணம். இப்ப போய் சாதிய பாத்துக்கொண்டு இருந்தா , தன்ட மகன்ர உயிர் போயிடும் எண்டோண சாதியெல்லாம் கண்ணுக்கு தெரியேல.... இப்ப சம்மந்தி சமந்தி எண்டு தருமரோட ஒரே உறவு.... எனக்கு நம்மட சனங்கள நினச்சா சிரிப்பு தான் வாறது. எல்லாம் நல்லா நடக்குது, அது வரைக்கும் நல்லம் தானே! "

"அதெண்ண்டால் உண்மை தான் மச்சான்"

"டேய் வாய பாத்துக்கொண்டு இருக்காம கலியாணத்துக்கு நாலஞ்சு நாளுக்கு முதலே வீட்ட வந்திரு, பிறகு ஏதும் சாட்டு சொன்னியெண்டால் எனக்கு விசர் வந்திரும்"

"ஓமிடா.. ஓமிடா..... நீ வெளிக்கிடு பஸ் வர போகுது, அத விட்டா உனக்கு வேற பஸ்ஸும் இண்டைக்கு கிடையாது, நான் உன்ன பஸ் ஸ்டாண்டில விட்டிற்று, அய்யாட தோட்டத்துக்கும் ஒருக்கா போகோணும், வெளிக்கிடு"

'டேய்... நான் என்ன சின்ன் பொடியனா? எனக்கு போக தெரியும், நீ தோட்டத்துக்கு போடா, பஸ் ஸ்டாண்ட் உதுல தானே , நான் போயிருவன்"

"டேய் நான் விட்டிற்று போறனடா"

"லூசு கத கதைக்காம நீ போ, நான் போடிருவன் , இந்தா பக்கத்தில தானே"

"சரி மச்சான் ,கவனம் , நான் வாறன் போற்று, நீ பாத்து போடா, போற வழியில கவனம் , பண்ணையார் ஆக்கள் நிப்பினம்! நீ சும்மா சாதாரணமா  போற மாதிரி போ.... உன்னட்ட உன்ர ஸ்கூல் ஐ.சி இருக்கு தானே! ஒண்டும் பிரச்சின இல்லை. எதுக்கும் கவனம்"

"ஓமடா .. நீ கலியாணத்துக்கு வெள்ளனவே வந்திடு" 

"ஓம் மச்சான், நான் வாறன் போட்டு, நீ கவனம்"

விடைபெற்றுக்கொண்டு நண்பன் புறப்பட, நான் பஸ் ஸ்டாண்டை தேடி நடக்க தொடங்கினேன்.

"எங்கட  ஊரில் கொஞ்ச நாளாவே பொடியளுக்கும் , இந்த பரதன் பண்னயாரோட ஆக்களுக்கும் இடையில நிலம கொஞ்சம் நல்லாயில்ல! உந்த கல்லெறி காற பொடியளுக்கு பிரச்சின எங்கட ஊர் பண்னையார் சிலோத்தாரோட தான் எண்டாலும் , இட நடுவில மத்தியஸ்தம் பண்ணுறன் எண்டு வந்த உந்த பரதன் பண்ணையாரோட ஆக்களோட தான் இப்ப ஒரே அடி புடியா கிடக்கு!"


"எனக்கு உந்த பிரச்சினையோட ஆதி மூலம் எல்லாம் தெரியாது எண்டாலும் , என்ர அம்மா சொன்னதில இருந்து நடக்கிறது என்ன எண்டு நல்லாவே தெரியும். எங்கட ஊர் பண்ணையார் சிலோத்தார் கொஞ்சம் அடாவடி தனமான ஆள். அவருக்கு எப்பவும் தன்ர சாதி சனம் நல்லா இருக்கவேணும், தன்ர சாதி சனம் தான் எங்கன்ர  ஊரில இருக்கவேணும் எண்டு பிரசங்கம் பண்ணிற ஆள். உண்மேல அவற்ற  ஆக்கள்  தான் எங்கன்ர‌ ஊரில கனக்க பேர் இருக்கினம் எண்டாலும் , எங்கன்ர  ஆக்களும் கன காலமா அந்த ஊரில இருக்கிறம். என்ர ஆச்சி சொல்லுவா, அவயளுக்கு முந்தியே , எங்கன்ர ஆக்கள் அந்த ஊரில இருந்தவயளாம் எண்டு. ஆனா இப்ப எங்கன்ர ஆக்கள் கொஞ்ச பேரா இருக்கிறதால , எங்கள அவையள் , வந்தான் வரத்தான் எண்டு சொல்லினம். இஞ்ச தான் முதல் பிரச்சினையே!"


"அதுக்கு பிறகு ....  கொஞ்சம் கொஞ்சமா பிரச்சின பெருசாகி எங்கன்ர சனத்தோட பண்ணியார்ர ஆக்கள் பிரச்சின பண்ண தொடங்கிச்சினம். எங்கன்ர  ஆக்களுக்கு அடிக்கிறது, எங்கன்ர பொட்டையள் ரோட்டில போனா தேவையில்லாம சொறிச்சேட்ட விடுறது எண்டு சும்மா சும்மா பிரச்சினைக்கு வந்திச்சினம். கொஞ்ச வருசமா , எங்கன்ர‌ சனம் உதுகள கண்டும் காணாம இருந்தினம். அதுக்கு பிறகு எங்கன்ர படிச்ச சில பெரியாக்கள் , சிலோத்தரோட கதச்சும் பாத்தினம், ஒண்டும் சரியா வரேல, கொஞ்ச நாள்ள சிலோத்தரோட அட்டகாசம் கூடிப்போச்சு."


" உத பொறுக்காத எங்கன்ர சில இளம் பொடியள் சிலோத்தருக்கு எதிரா பிரச்சின பண்ண தொடங்கினாங்கள். அவரிட அடியாக்களுக்கு நல்ல அடி விழுந்துது, சிலோத்தரோட பண்ணை வீடு, தோட்டம், சொத்து பத்து எல்லாத்துக்கும் கல் எறிஞ்சு உடைக்கிறது, நெருப்பு வச்சு விடுறது எண்டு இவங்களும் தங்கட பாட்டுக்கு சிலோத்தருக்கு அடிக்க தொடங்கினாங்கள். எங்கன்ர சனங்களும் , தங்களுக்கு பாதுகாப்பா இருந்ததால இந்த கல்லெறிகாற பொடியங்களுக்கு நல்ல சப்போட் பண்ணினம். பொடியள் எண்டு நாங்க சொன்னாலும் , கல்லெறிகாரங்கட குறுப்பில நிரைய பொட்டையளும் இருக்கிறாங்கள்."


"இஞ்ச எங்கட ஊரில பிரச்சின நடக்கிறத கண்ட பக்கத்து ஊர் பண்ணையார் பரதருக்கு மூக்கு வேர்த்து , சமாதானம் பண்ணிவிடுறன் எண்டு , எங்கன்ர ஊருக்கு தன்ர அடியாளுகள அனுப்பி வச்சார். பரதரோட ஊர் எங்கன்ர  ஊர விட பெரிய ஊர். தன்னை , சுத்தி இருக்கிற எல்ல கிராமத்துக்கும் , பெரிய சண்டியர் எண்டு காட்டுறதுக்கு பரதருக்கு சரியான விருப்பம். அந்த ஒரு காரணத்துக்காகவே எங்கன்ர‌ சுத்து வட்டாரத்தில எங்க பிரச்சின எண்டாலும் , உடன போய் மூக்க குடுப்பார். ஆனா இங்க, எங்கன்ர ஊரில அவற்ற மூக்கு உடஞ்சது தான் மிச்சம். எங்கன்ர கல்லெறி காற பொடியங்கள் அவருக்கு நல்ல அடி போட்டாங்கள்.


"சமாதானம் பேசுறன் எண்டு முதல் அவர் வரேக்க, எங்கன்ர பொடியளும் , ஓம்பட்டு தான் அவர வரவேற்றவங்கள். ஆனா காலப்போக்கில அவரிட நடவடிக்க எல்லாம் பிழையா போனதால , எங்கன்ட பொடியளிட்ட நல்லா வாங்கி கட்டினார். அந்த கோவத்துக்காகவே , எங்கன்ர பொடியள ஒண்டும் செய்ய ஏலாததால , எங்கன்ர அப்பாவி சனத்தோட சொறிய தொடங்கினார்.  அவருட அடியாக்களுக்கு எங்கன்ர பொட்டையள் எண்டா காணும், நாக்க தொங்க போட்டுக்கொண்டு , விழுங்கிறது மாதிரியே பாப்பினம். எங்கன்ர பொட்டையள் நிறைய பேர கெடுத்து சாவக்கொண்டவையள் எண்டு அடிக்கடி கேள்விப்படுவன். அதால இப்ப பரதரோட ஆக்களுக்கும் எங்கன்ர பொடியளுக்கும் தான் ஒரே பிரச்சினையா கிடக்கு!"



இதெயெல்லாம் யோசித்துக்கொண்டே பஸ் ஸ்டான்டுக்கு வந்துவிட்டேன். என்னை தவிர இன்னும் சிலர் அங்கே பஸ்ஸை எதிர்பார்த்துக்கொண்டு காத்திருந்தார்கள். ரெண்டு மூன்று சிறுவர்களும் , அவர்களது தாயும் நின்றிருந்தார்கள்.  அவர்களிலிருந்து இரண்டொரு அடிகள் தள்ளி பேரழகி என்று சொல்லமுடியாவிட்டாலும், கண்வெட்டாமல் பார்க்க கூடிய அழகுடன் ஒருத்தி நின்றிருந்தாள். என் வயது அல்லது , என்னைவிட ஓரிரு வயது குறைவாக இருக்கலாம். மஞ்சள் பூசி கழுவிய முகம், நெற்றியில் சின்னதாய் ஒரு கறுத்த ஸ்டிக்கர் பொட்டு, அதன் கீழ் மெல்லிய இரு கோடுகளாய் திருநீறும், குங்குமமும் தெரிந்தது. இரண்டாய் வகிடெடுத்து பின்னிய தலை முடி, நேர்த்தியான சல்வார் ஆடையென , என் வாலிபத்துகு சவால் விடும் அத்தனை அம்சங்களையும் தன்னகத்தெ கொண்டிருந்தாள்.


என் மனசு பட்டாம்பூச்சியல்ல, சில பல பருந்துகளே பறக்கும் அளவுக்கு படபடப்பாக இருந்தது. எப்படியாவது அவளை என் பக்கம் திரும்பவைத்து விடவேண்டும். இதோ உன் ராஜகுமாரன் உன்னோடு தான் பஸ்ஸை பார்த்துக்கொண்டு நிற்கிறான் என உணரவைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தேன். உனக்காக பிறந்தவன், பத்தொன்பது வருடத்துக்கு முதலே பிறந்து, இப்போது உனது பக்கத்தில் நிற்கிறானடி , பார்த்து விடு கண்ணே என வேண்டாத கவிதையெல்லாம் வந்து தொலைத்தது. அவள் என்னை பார்த்தாலே போதும் என்று இருந்தது. நான் தொண்டையை செருமியும், "உந்த பஸ்ஸ இன்னும் காணேலேயே" என்று நானே பேசியும், ஓடி விளையாடி திரிந்த அந்த சிறு வண்டுகளுக்கு விளையாட்டு காட்டியும் திரும்பாத தலை, அப்போது திரும்பியது.


நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு பின்னால் நாலைந்து நாய்கள் , உருண்டு பிரண்டு சண்டைபோட்டுக்கொண்டிருந்தன. ஒரு இளம் நாயை இரன்டுமூன்று நாய்கள் சேர்ந்து பிரட்டி எடுத்துக்கொண்டு இருந்தன. எல்லைச் சண்டையா ?அல்லது அடுத்தவன் மனைவியை அபகரிக்க போனதில் வந்த போரா ?என நான் தீர்மானித்து முடிக்கும் முன்னமே அடிபட்ட அந்த நாய் , வாலை சுருட்டிக்கொண்டு எங்கல் பக்கமாக உறுமிக்கொன்டே ஓடி வந்தது. எதிர் பாராமல் நாய் எங்கள் பக்கம் ஓடிவரவும், அவள் பயந்தே போய்விட்டாள், "அக்கா நாய் கடிக்க போகுது" என்று துள்ளிக்கொண்டே ஓடிவந்து, அந்த வாண்டுகளின் தாயின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.


உறுமிக்கொண்டு வந்த நாய் எங்களுக்கு சற்று தொலைவில் நின்று கொண்டு, உறுமலை நிறுத்தி , தனக்கு விழுந்த கடி பலமோ என்று தனது உடலை பரிசோதித்துகொண்டிருந்தது. எனது வீரத்தை காட்ட இது தான் சமயம் என்று முடிவெடுத்தேன். காலுக்கு கீழே கிடந்ததில் கொஞ்சம் பெரிய கல்லாக பார்த்து எடுத்துக்கொண்டு, அதே நேரம் எனது வீர பிரதாப செயலை அவளும் பார்க்கிறாளா என உறுதி செய்துகொண்டு, அந்த அடிபட்ட நாயை நோக்கி நடக்க தொடங்கினேன்.


"அடி...அடி... ச்சூ..." என்று அந்த நாயை நோக்கி குரல் கொடுத்தேன், அந்த நாயோ என்னை ஏன் நாயே என்று கூட சட்டை செய்யாமல் , தனது அங்கத்தை சோதிப்பதிலேயே குறியாக இருந்தது. எனது சொல்லுக்கு மரியாதை இல்லை என்றதும், கையில் இருந்தகல்லை தூதனுப்பினேன். கிரிக்கட் ஆடும் போது , எனது துரோ எல்லாம் சுத்தமாக தேறாது என நண்பர்கள் சொன்ன போதே நான் கொஞ்சம் பிரக்டிஸ் எடுத்திருக்க வேண்டும். நான் எறிந்த கல் , நாயின் வாசனை கூட படாத தூரத்தில் போய் விழுந்தது. அந்த கல் உருண்டு ஓயும் வரை அந்த கல்லையே கண்வெட்டாமல் பார்த்திருந்த அந்த நாய், "உவ்ள்' என்று வாயை பிளந்து, நாக்கை ஒரு தடவை வெளிநீட்டி உள்ளிழுத்து, தடதடவென்று உடலை ஆட்டி உதறி, தனது சோம்பல் முரித்துக்கொண்டு, தான் மிகவும் சந்தோசமாக இருப்பதாக காட்டியது. அடிபட்ட அந்த நாய்க்கு நான் ஒரு என்டெர்டெயின்மென்டாக ஆகிப்போனது நன்றாக புரிந்தது எனக்கு. அந்த நாயும் எனது செய்கைகளை சந்தோசமாக அனுபவித்துக்கொண்டிருந்தது.


அந்த பெண்ணுக்கு முன்னால் இதுக்கும் மேல் அவமானப்பட முடியாது என்பதற்காக ,  பொறுக்க முடியாமல் , ஒரு தடியை எடுத்து அந்த நாயை நோக்கி வீசினேன். அந்த தடி போய் நாய்க்கு பகத்தில் விழவும், அந்த அதிர்வினால் நாலைந்து மணல் துகள்கள் அந்த நாயை முட்டி, சீண்டிவிட , கால்களுக்கு இடையில் சுருட்டி  வைத்திருந்த தந்து வாலை நிமிர்த்திக்கொண்டு, வாயை திறந்து , அத்தனை பற்களும் தெரியும்படியாக "உர்" என்றபடி என்னை நோக்கி இரண்டு காலடிகள் வைத்தது. என்னையுமறியாமல் நான் பின்னோக்கி சில பல காலடிகளை வைத்து விட்டு பார்கிறேன், அந்த பெண்ணின் பின்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்.


"விசர் நாய் போல கிடக்கு, அது தான் கொஞ்சம் கோவமா இருக்கு, பாத்தியளோ ? அதுட வாலும் சுருண்டு காலிடுக்கில இருந்திச்சு, சும்மா நாய் எண்டா இத்தறிக்கு ஓடிருக்கும் , இது விசர் நாய் அதான்.....  பக்கத்தில ஆஸ்பத்திரியும் இல்ல, கடிச்சா நல்ல ஊசியும் இருக்கோ தெரியாது"


அரும்பு மீசை தானே ! அதனால் நிறைய மண் ஒட்டவில்லை. ஒட்டிய கொஞ்சம் தூசியையும், விசர் நாய் ஊசியை காரணம் காட்டி லாவகமாக துடைத்துக்கொண்டேன்.

" ஓம்.. விசர் நாய் போல தான் கிடக்குது"

இது அவள். என்னிடம் நேரடியாக  சொல்லா விட்டாலும் , எனக்கு பதில் தந்தாள். அதுவே எனக்கு அவள் காதலைச் சொன்னது போல இருந்தது. மனசு பூரா பரவசம் பரவி கிடந்தது.

"அது விசர் நாயே தான்.. வீணீரும் வடியுது பாருங்கோ"

நல்ல வேளை நாய்க்கு தமிழ் தெரியாது, இல்லையென்றால் எனது காதலுக்காக, சும்மா நின்ற‌ அதனை விசர் பட்டியலில் சேர்த்ததற்கு கண்ட இடத்தில் எல்லாம் கடித்தே வைத்திருக்கும்.

ஆனாலும் நல்லா இரு நாயே என்று வாழ்த்திக்கொண்டேன். அந்த சம்பவத்துக்கு பிறகு சில பல பார்வைகளை இருவரும் பரிமாறிக்கொண்டோம். கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் சிரித்தும் கொண்டோம், நான் காதலாகவும் , அவள் நாணமாகவும்!


பேரூந்தின் வருகைக்கான நேரம் பிந்திக்கொண்டு போகப் போக எங்களுக்கிடையான தூரம் குறுகுவதாய் உணர்ந்தேன், உணர்ந்தேன் என்பதை விட உணர்ந்தோம் என்பதே பொருந்தும். அந்த அரை மணிநேர கால அவகாசத்தில் , அவளுக்கு என் மேல் காதல் வந்துவிட்டது என்பது அபத்தம். ஆனால் காதல் வருவதற்கான அறிகுறி அவளிடம் வந்திருக்கிறது என்பது மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடிந்தது.

"தமயனுக்கு கலியாண யோகம் கூடிவரும் நேரம், தம்பிக்கும் வரன் வரும் வாய்ப்பு இருக்கு"

எங்கள் ஊர் ஜோசியர் சொல்லியதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லாத போதும், ஊருக்கு போனதும் முதல் வேலையாக ஜோசியரை பார்த்து விடவேண்டும் என்பதில் இப்போது உறுதியாய் இருக்கின்றேன்


மீண்டும் நாய்களின் குரைப்பு சத்தம், மூன்று நாய்கள் எங்கள் அருகில் வந்து நின்ற படி ஒரே திசையைப்பார்த்து பயங்கரமாக குரைக்கின்றன. இப்போது அனைவருக்கும் பயம் தொற்றிக்கொள்ளும் படியான ஒரு சம்பவத்துக்கு அடிக்கல் நட்டப்படுகிறது. நாய் குரைத்த திசையை பார்க்கிறோம், பரதன் பண்ணியாரின் ஆட்கள் வரிசையாக எங்களைத்தேடி வந்து கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட இருபது பேருக்குமேல் இருந்தார்கள்.




எங்களுக்கு அருகில் வந்ததும் என்னை சந்தேகமாக பார்த்தார்கள், எங்கே வந்தாய்? எதுக்கு வந்தாய்? ஏன் இங்கே நிற்கிறாய்? உட்பட்ட இதர கேள்விகளையெல்லாம் கேட்டார்கள். அவர்களது மொழி எனக்கும் , எங்கன்ர மக்களுக்கும் புதிது என்றாலும் , அடிக்கடி கேட்கப்ப்டும் கேள்விகள் என்பதால், பழகிப்போனது. எனது பாடசாலை ஐ.சி யை பார்த்தவர்கள் , என்னால் ஆபத்து இல்லை என்றதும் நகர்ந்தார்கள். அவர்கள் கொண்டுவந்த அல்லது யாரவது கடைக்காரனிடம் அடித்து பிடுங்கிய இனிப்புக்கள் சிலவற்றை , எங்களோடு நின்றுகொண்டிருந்த அந்த வாண்டுகளுக்கு கொடுத்து, தாங்களும் மனிதநேயமுள்ள‌வர்கள்  என்று காட்டுவதற்கு கடும் முயற்சியும் செய்தார்கள்.

அந்த கழுகுகளின் கண்கள் இப்போது என்னவளை நோக்கி திரும்பியது. அறுபது வயது மூதாட்டியை கூட , இந்த பாரதனின் ஆட்கள் கபளீகரம் செய்துள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியிருக்க , அத்தனை பருவ வனப்பையும் சுமந்து கொண்டிருக்கும் அவளை??? மனம் ஏதேதோவெல்லாம் கற்பனை செய்துகொண்டிருக்க , அவர்கள் அவளை நெருங்கிவிட்டார்கள். மீண்டும் அதே சம்பிரதாயமான கேள்விகள்.

வாய்கள் கேள்வி கேட்கையில் அவர்கள் கண்கள் அவளை கற்பழித்ததை நான் கவனிக்காமலில்லை. அவர்களது மொழி புரியாமல், அவர்களது கேள்விக்கு , எழுந்தமானமாக அவள் தமிழில் பதில் சொல்லிக்கொண்டிருக்க, அதை ஏளனம் செய்து , அவளது அங்கங்களை பற்றி , பச்சைபச்சையாக அவர்களது மொழியில் மிக ஆபாசமாக வர்ணித்தார்கள். இந்த வார்த்தைகள் கூட அடிக்கடி "செக் பொயிண்டுகளில்" பழகிப்பொயிருந்த படியால் , எனக்கு அர்த்தம் நன்றாகவே தெரிந்திருந்தது. அவர்கள் தன்னை வார்த்தைகளால் துகிலுரிவது புரியாமல் , தப்பித்தால் போதும் என்று 'தான் கொப்பிகள் வாங்க தோழியின் வீட்டுக்கு வந்ததை" தமிழில் அப்பாவியாக விளக்கிக்கொண்டிருந்தாள்.



பார்வை, வார்த்தை என்று வன்புணர்வு முடிய ஒரு மிருகம் , தன் அரிப்பெடுத்த கைகளுக்கு விருந்து கொடுக்கும் நோக்கில் பொடி செக் பண்ணனும் என்று கூறிக்கொண்டே உள்ளங்கால் தொடங்கி மேலாக அவளது அங்கத்தை வருட ஆரம்பித்தது. நெளிந்தாள்... துடித்தாள்.... தட்டி விட கை எடுத்தாள்... மேலும் இரண்டு மிருகங்கள் அவளது கையை பிடித்துக்கொள்ள , அந்த மனித மிருகமோ அவளது அங்கத்தை தடவுவதிலேயே குறியாக இருந்தது. ஒரு கட்டத்தில் அவலது காலிடுக்கில் கையைவிட்டு "துப்பாக்கி மறைத்து வைத்திருக்கிறயா? என்று கேட்டு கையை அங்கேயே வைத்திருந்தது அந்த மிருகம். அவள் "வீச்"சென்று கத்தினாள், பொறுக்கமுடியாத அந்த நடுத்தர வயது பெண் அவர்களை தடுக்க போக "பளார் "என்று அறந்தான், அந்த குழுவின் தலைவன் என மதிக்கத்தக்க ஒருவன். "உன்னோட புடவைய உருவணுமா"? அன்று கொச்சை தமிழில் கேட்கவும் , அந்த பெண் அழுதுகொண்டே மௌனமாக, அவன் இப்போது என்னை பார்த்தான். பார்த்து "என்ன பாக்குற? என்று முறைப்பாய் என்னிடம் ஒரு கேள்வி, அவர்களை  ஏதாவது செய்ய வேண்டும் என்று மனது துடித்தது. வழமையா பஸ் பயணங்களில் இதுபோன்ற காட்சிகளை காண நேருவது தான் என்றாலும், சற்று முன் என் மனதுக்குள் வந்தவளுக்கு இப்படி, அதுவும் என் கண் முன்னே நடக்கையில், எனக்கு என்னவோ போல் இருந்தது.


எனக்கு பாரதன் பண்ணையார் ஆட்களது கையில் இருக்கும் அந்த தீப்பந்தத்துக்கு தான் பயமாக இருந்தது. நொடியில் ஒருவனை சுட்டு பொசுக்கி விடும் கொடூரமான பந்தம் அது. அவர்களை கண்டபோது வீரமாக குலைத்த அந்த மூன்று நாய்கள் கூட, அந்த பந்தங்களின் வீரியம் கண்டு , வாயை மூடிக்கொண்டு, வாலை சுருட்டி காலிடுக்கில் வைத்தபடி சும்மா இருந்தன. அவைகளின் நாக்கு கூட வெளியில் வரவில்லை. அப்போது என்னோடு சேர்த்து நாலு நாய்கள் அங்கே மௌனமாக நின்றிருந்தன.


அவளது சல்வாருக்குள் இருந்து கையை எடுத்த அந்த விலங்கு , இது வெடிகுண்டு தானே என்று அவளை மிக மோசமாக பற்றியது. அவள் நிலை குலைந்தாள், கிட்டத்தட்ட மயக்கமான நிலை, ஆனாலும் அந்த வேட்டை விலங்குகள் விடுபதாக இல்லை, "ஹாங்................................................." தூரத்தே பஸ் வருவது தெரியவும், அந்த வேட்டை நாய் கூட்டம் , அவளை விட்டு மெல்ல தள்ளி நின்று கொள்ள , அந்த நடுத்தர வயது பெண்மணி , அவளை தாங்கி பிடித்துக்கொண்டாள். அருகில பஸ் வர எல்லோரும் ஏறிக்கொண்டோம். எனக்கு முன் பக்கத்து சீட்டில் , அந்த நடுத்தர வயது பெண்ணின் அணைப்பில் அவள் குலுங்கி , குலுங்கி அழுது கொண்டே வந்தாள்.



எனக்கு தெரிந்து , அந்த மனித மிருகம் "வெடிகுண்டு தானே?" என்று பிடித்தது மட்டும் வெடிகுண்டாக இருக்கும் பட்சத்தில், இந்த உலகத்தில் பெண்கள் எல்லோரும் , பிறந்த தமது குழந்தைகளுக்கு வெடிகுண்டின் மூலமே தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். அவள் இன்னமும் அழுதுகொண்டு இருந்தாள். கொஞ்ச நேரத்துக்கு பரபரப்பான அந்த பஸ், சம்பவம் அறிந்ததும் வழமையாக நடப்பது தானே என்ற தோரணையில் இயல்புக்கு திரும்பியது.


அந்த நேரத்தில் எனது மனநிலையை எப்படி இருந்தது விபரிக்க முடியாமல் இருந்தது. ஒவ்வொரு நாளும் , பேரூந்தில் , பாரதன் ஆட்களின் இரண்டு செக் பொயின்டுகளை கடந்து வேலைக்கு போய்வரும் எனது அக்காவையும் நினைத்து பார்த்தேன். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.........



நான் இறங்க வேன்டிய இடம் வந்தது, அவள் நிமிர்ந்து பார்க்க திராணி இல்லாதவளாய் இன்னமும் அழுதுகொண்டே இருந்தாள். ஆறுதல் சொல்ல மனது சொன்னாலும், அந்த நிமிடத்தில் நான் ஆறுதல் சொல்வது முறையாக இருக்காது என்பதாலும் , மௌனமாய் நான் இறங்கிவிட , பேருந்து கரும்புகையுடன் கடந்து போனது.


அந்த சம்பவம் நிகழ்ந்து வருடங்கள் இரண்டு கடந்து போனது. இந்த இரண்டு வருடங்களில் பாரதன் ஆட்கலால் நூற்றுக்கணக்கான கற்பழிப்புக்கள் நிகழ்ந்தேறி இருந்தது. ஒரு நாள்  எனது அண்னனுக்கு குழந்தை பிறந்ததாக வந்த செய்தி கேள்விப்பட்டு, அவன் இருந்த ஊருக்கு போயிருந்தேன்.


மதிய சாப்பாட்டுக்கு பின்னே , ஊருக்கு வெளியே கொஞ்சம் உலாத்த போனேன். யாரது? அவளே தான் கட்டுக்குலையாத அதே உடல், அவளது நிறம் கொஞ்சம் குறைந்து இருந்தது. ஆனால் குறையாத அதே அழகு! மென் பஞ்சு போன்று இருந்த அந்த உடல் கொஞ்சம் வலிமையேறி இருப்பது போல் இருந்தது. மனதும் அதே வைமையுடன் இருப்பதாக அவளது முகம் சொல்லியது. கல்லெறிகார பொடியன்களின் சீருடையை அணிந்திருந்தாள். அவளது கையில் , பாரதன் ஆட்களது கைகளில் இருந்தது போலவே ஒரு தீப்பந்தம் , ஏதோ ஒரு விடியலுக்காய் எரிவது போல எரிந்துகொண்டிருந்தது. அருகே வந்துவிட்டாள். ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியாக இருந்தது, வேறு திசை பார்த்தவாறு அவளை கடந்து நடக்க முற்பட்டேன்.


" சுகமா இருக்கிறீங்களா?"

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கேட்ட அதே கணீரென்ற நாண‌ம் கலந்த குரல், இந்த தடவை தன்னம்பிக்கையில் குழைந்து காற்றில் வந்தது.

"ஓம்! நான் நல்ல சுகம்! நீங்க எப்பிடி இருக்கிறீங்க?

'நான் நல்லா இருக்கிறன். எங்க இஞ்சால பக்கம்?"

"அண்ணனையும் அண்ணியையும் பாத்திட்டு போக வந்தனான்"

'நீங்க பயப்பிடாம போங்கோ, நாங்க இஞ்ச தான் இருக்கிறம், இஞ்ச வந்து ஒருத்தரும் செக் பண்ண ஏலாது. நீங்க நிம்மதியா போங்கோ"

"..................................."

"அப்ப சரி ! நான் வாறன் என்ன, எனக்கு இன்சால கொஞ்சம் வேல கிடக்கு"

பிரம்மை பிடித்தவன் போல‌ அவளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். போனவள் திரும்பினாள்

"இனி விசர் நாயெண்டாலும் பயப்பிடாதேங்கோ என"

சொல்லிவிட்டு சிரித்தாள். அந்த சிரிப்பு சுதந்திரமான சிரிப்பு, உண்மையான சிரிப்பு, கட்டுப்பாடுகளை உடைத்த ஒரு சிரிப்பு. பதிலுக்கு சிரிக்க முடியாமல் அவளையே பார்த்துக்கொண்டு நின்றேன். அவள் நடந்து கொன்டிருந்தாள்.

அவளது பாதையில் சில நாய்கள் நின்று அவளை பார்த்து குரைத்தன. அவளோ அதே பாதையில் அச்சு விலகாமல் நடந்துகொண்டேயிருந்தாள்.

அவளுக்கு இப்போது நாய்களுக்கும் பயமில்லை போலும்!!!!!



"போராளிகள் உருவாவதில்லை உருவாக்கப்படுகிறார்கள்"

அமைதிப்படை என்ற பேரில் எண்பதுகளில்  இலங்கைக்குள் நுழைந்த இந்திய ராணுவம், தமிழ் பெண்களின் மீது கட்டவிழ்த்துவிட்ட பாலியல் வன்முறைகளையும், கற்பழிப்பு மற்றும் கொலைகளையும் புரிந்தது.

22 comments:

  1. இது கதையல்ல நிஜம்.

    எழுத்தளர் ஜெயமோகனுக்கு இக்கதை புரியும்.
    நடிகர் ஜெயமோகனுக்கு...புரியாது.

    ReplyDelete
    Replies
    1. எனது வாழ்நாளில் , சிலோத்தாரது ஆட்கள் எம்மின பெண்களை கற்பழித்ததை அறிவேன், ஆனால் பாரதரது ஆட்களின் அட்டூழியங்களை பற்றி கேட்டு மட்டுமே அறிந்துள்ளேன். ஆனால் அவற்றை சமகாலத்தில் அனுபவித்தவராக எழுத்தாளர் ஜெயமோகன் இருக்க கூடும்.

      * நடிகர்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும், அந்த லட்சணத்தில் நம்மை பற்றியா சிந்திப்பார்கள்?

      Delete
  2. அன்று இந்திய ராணுவம் தமிழ் பெண்களை கற்பழித்தது..
    இன்று இந்திய அரசியலும் அதன் அரசாங்கமும் தமிழையே கற்பழிக்கின்றது..!!
    இன்னும் நம்பிக்கிடப்பது முட்டாள் தனம்..!!!

    ReplyDelete
    Replies
    1. ஈழத்தமிழர்கள் இந்தியாவை இன்னும் நம்புவதாக இந்தியா தான் நம்பிக்கொண்டிருக்கிறது நண்பா! முள்ளி வாய்க்கால் அவலத்துக்கு பின்னர் இந்தியா குறித்த அத்தனை நம்பிக்கைகளும் பொய்த்துப்போய் விட்டது. இந்தியாவில் இருந்து இடைக்கும் ஒரே ஆறுதல் என்னவென்றால், தமிழ்நாட்டு உறவுகளின் ஈரமான அந்த நேசம் தான்!

      Delete
  3. தம்பி! உன் முகம் எனக்கு தெரியாது. இதற்கு முன்னர் உன் கதைகளோ, கட்டுரைகளோ படிக்கையில் மனம் விட்டு சிரித்ததது மட்டுமே உனக்கும் எனக்குமான உறவு! ஆனால் இந்த முறை??? வார்த்தைகளற்று நிற்கிறேன். நீ கடக்க வேண்டிய தூரம் எவ்வளவோ உண்டு என்பதை நான் அறிவேன். ஆனால் நீ கடந்த இந்த தூரம்தான் இனி எனக்கான குறிக்கோள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி என சாதாரணமாக சொல்லிவிட முடியல அண்ணே! எழுதும் போது , இது கவனிக்கப்படுமா? ஏற்கப்படுமா? என நான் சுமந்த விபரிக்கமுடியா மனச்சுமைகளை உங்களை போன்றோரது வாழ்த்துக்கள் இறக்கி வைத்து விடுகிறது. மிக்க நன்றி அண்ணே!! , எனது ஜனரஞ்சக பதிவுகள் கவனிக்கப்படாவிட்டாலும் பரவயில்லை, இது போல வலி சுமக்கும் பதிவுகளுக்கு உங்களது ஆதரவு எனக்கு நிச்சயம் வேண்டும்!

      Delete
  4. வர வர இந்த ஏரியாவுல வந்து மொக்க கமெண்டு போட்டா கொன்னுருவாங்களோன்னு பயமா இருக்கு..

    முதல்ல வந்த அந்த உரையாடல்ல கொஞ்சம் குழம்பிப்போய் ஸ்கிப் பண்ணிரவான்னு யோசிச்சுக்கிட்டு வந்தேன்.. அப்பால பார்த்தா பெரிய டைனமைட்டையே உன் வார்த்தைகள்ல பொதிச்சு வைச்சிருக்கே..

    ஆனா ஒண்ணு மட்டும் புரியுது.. நீ சாதா ப்ளாக்கர் இல்லைப்பா! சில பிரபல பதிவர்களை விடவும் பிரமாதமா எழுதா உனக்கு தெரிஞ்சிருக்கு.. தலைவா U R Great!

    ReplyDelete
    Replies
    1. //வர வர இந்த ஏரியாவுல வந்து மொக்க கமெண்டு போட்டா கொன்னுருவாங்களோன்னு பயமா இருக்கு..////

      ஏன் பயப்பிடுற நண்பா? அதான் லா லீகா வருதில்ல, சும்மா போட்டு வெளுத்து வாங்கிரலாம்.

      ///முதல்ல வந்த அந்த உரையாடல்ல கொஞ்சம் குழம்பிப்போய் ஸ்கிப் பண்ணிரவான்னு யோசிச்சுக்கிட்டு வந்தேன்..///

      யேய்.. உண்மைய சொல்லு, நீ சொன்னது போல ஸ்கிப் பண்ணிட்டு, இப்போ ஏதோ முழு பதிவையும் படிச்சவன் போல வந்து நாசூக்கா கமன்டு போடுற இல்ல!!

      //நீ சாதா ப்ளாக்கர் இல்லைப்பா!//

      அப்போ என்ன ஸ்பெசல் சாதாவா..? ஆனலும் இதெல்லாம் ரொம்ப ஓவரு மச்சி.....

      Delete
  5. இந்த பதிவை ஜெயமோகனுக்கும் , கருணாநிதிக்கும் மெயில் பண்ணனும்

    ReplyDelete
    Replies
    1. பண்ணினா மட்டும் நம்ம தானை தலைவன் கருணாநிதி என்ன பண்ணுவார்? இதுக்கும் சேத்து ஒரு மாநாடு கூட்டுகிறேன் பேர்வழின்னு மறுபடி காமடி பண்ணுவார். உங்களோட வருகை என் பாக்கியம் அண்ணே! ரொம்ப நன்றி!

      Delete
  6. அருமையா இருக்கு சகோ.. தொடர்ந்து கலக்குங்க..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! தொடர்ந்து வாருங்கள் சந்திக்கலாம்!

      Delete
  7. லோகோவை வேற மாத்திட்டியா?.. அது என்ன மூஞ்சியில பிரகாசமா பல்பு எரியுது.. 99% வரைக்கும் Brightness level-ஐ கூட்டி விட்டியாக்கும்!

    ReplyDelete
    Replies
    1. அன்று ஓர் அதிகாலைப்பொழுது
      ஜன்னலோரமாய் .....
      யாரென்றே தெரியாத ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வந்தது!
      உட்கார்ந்து மணிக்கணக்காய் மொக்கை போட்டேன்!
      சூரிய கதிரும்.. என் முகத்திலி இருந்த
      ஞான ஒளியும் சேர்ந்து ஜொலித்ததை
      சிறை பிடித்தான் என் நண்பன்!

      இது தான் அந்த படத்தின் வரலாறு! உன்னோட ஆசை நிறைவேறிடிச்சா நண்பா? நெனச்ச மாதிரியே மொக்கைய போட்டாச்சில்ல....

      அப்பப்ப லோகோவை மாத்தணும், அப்போ தான் நம்ம பிளாக்கு எப்பவும் புதுசா இருக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங்கு!

      Delete
    2. //நெனச்ச மாதிரியே மொக்கைய போட்டாச்சில்ல....//
      ஆமா.. மொக்கன்னு சொல்லும் போது தான் ஞாபகம் வருது.. "மொக்க மொக்க மொக்க"ன்னு யாரையாச்சும் உனக்குத் தெரியுமாப்பா?.. பதிவுலகின் வருங்காலமே அவனோட எழுத்துதான்னு எல்லாரும் பேசிக்கறாங்க!

      Delete
    3. அவன் ஒரு சில்றபையன் நண்பா! இப்போ எங்கயோ கண்காணாத தேசத்தில உலாத்துறானாம்!

      Delete
  8. //"போராளிகள் உருவாவதில்லை உருவாக்கப்படுகிறார்கள்" //

    .......................................மெளனங்கள் பல சொல்லும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
    நானும் சகோதரிகளோடு பிறந்தவந்தான்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி! நீங்கள் சொன்னது உண்மை தான், சில இடங்களில் மௌனம் தான் எமது பதிலாக இருந்துவிட்டு போகிறது.

      Delete
  9. சிறந்த பதிவு!ஜெமோ பிரச்சனை வந்த சமயம் எழுதி இருந்தால் இன்னமும் ஹிட் ஆகி இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஹிட்டை விடுங்க அண்ணே! ஏதோ இப்பவாவது எழுதினனே! எனக்கு அந்த ஜெ.மோ பிரச்சினை முழுசாக தெரியாது!

      Delete
  10. "போராளிகள் உருவாவதில்லை உருவாக்கப்படுகிறார்கள்"ஃஃஃஃஃஃசல்யுட் அப்!!!!அருமையான பதிவு நண்பா....!நில பதிவுகள் கனமாகவை...நிஜங்களை சுமப்பவை.அப்படியாய் தான் இதையும் பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்களும் ரொம்ப நன்றி சகோதரி! நிஜமான வலிகள், அதே வலியோடு வார்த்தைகளாக வரும் என்பது என் கருத்து!

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...