உதைபந்து

Monday, May 20, 2013

ஃபேஸ்புக்கில் வாழும் தமிழும் அப்புறம் அங்கே சில அப்பாட்டாக்கருகளும்!!!




ஃபேஸ்புக் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இப்போது வரை ஃபேஸ்புக் வளர்ந்ததோ இல்லையோ , ஃபேஸ்புக்கினால் வளர்ந்துவிட்ட நன்மைகளும் தீமைகளும் ஏராளம். எப்போ பார்த்தாலும் ஃபேஸ்புக்கை திட்டிக்கொண்டே இருக்க வேண்டுமா? இன்று ஃபேஸ்புக்கால் நாம் என்னதான் நன்மையை அடைந்து விட்டோம் என்று பார்த்துவிடுவோம். யோசித்து பார்க்கையில் தொலைவில் இருக்கும் நண்பர்களை அண்மையாக்குகிறது என்ற பெரிய ஒரு நன்மையையும் , பொழுதுபோக்கு என்ற அம்சத்தையும் தாண்டி வேறு பெரிதாக எந்த அடைவு மட்டத்தையும் நாம் அடைந்துவிடவில்லை என்ற போதிலும்சமகாலத்தில் பேசுபடு பொருளாக இருக்கின்ற "தமிழ்ப் பற்று" என்ற வகையறாவின் கீழ் ஃபேஸ்புக் மூலம் நாம் அடைந்துவிட்ட குறிப்பிடத்தக்க அடைவு மட்டத்தை மறுக்கும் மனநிலையில் நான் இல்லை.

ஃபேஸ்புக் ஆரம்பிக்கப்பட்ட புதிதில் , ஃபேஸ்புக்கில் இணைந்திருந்த அநேக தமிழரின் ஸ்டேடஸ்கள் ஆங்கிலத்தில் இருந்தன. அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அப்போது தமிழ் செயலிகளின் பாவனை அல்லது கிடைத்தல் என்பது அரிதாக இருந்தது அல்லது இல்லாமலே இருந்தது. இரண்டாவது அமோகமாக ஆரம்பிக்கப்பட்டு , கொப்பும்ம் குலையுமாக ஒரு மோகத்துடன் ஆண்களும் பெண்களுமாக ஃபேஸ்புக்கில் இணைந்து கொண்டிருந்த அந்த காலப்பகுதியில் முகம் தெரியாமல் இணைந்து கொண்ட எத்தனையோ நண்பர்களுக்கு தங்களது மேதாவித்தனத்தை காட்ட "பீட்டர்" விடவே பிரியப்பட்டனர் நம்குல ஆண்களும் பெண்களும். ஆரம்ப காலத்தில் ஆங்கில மய ஸ்டேடசுகளுக்கு இந்த இரண்டாம் காரணமே ஏதுவாக இருக்கலாம் என்று வலுவாக நம்புகிறேன். ஆனாலும் அப்போதும் தமிழில் டைப்பியவர்கள் இருந்தார்கள் என்றே கல்வெட்டுகள் கூறுகின்றன.

பின்னாளில் மரண மொக்கை போடுவதில் கைதேர்ந்த நாம் , மொக்கை போடுவதற்கு தமிழ் வார்த்தைகள் தரும் வசதியையும் சுகத்தையும் ஆங்கில மொழி தந்துவிட்டிராத படியால் கைப்பேசியில் எஸ்.எம்.எஸ் அனுப்பும் போது பயன்படுத்தும் ஆங்கில தமிழை பயன்படுத்தி ஸ்டேடஸ் போட ஆரம்பித்தனர். ஆனாலும் அனேகமாக இவை மொக்கை ஸ்டேடஸ் வகையை சார்ந்ததாகவே இருக்க , சீரியசான ஸ்டேடசுகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே பிறந்தன,

பின்னாளில் தமிழ் செயலிகளின் பாவனை அதிகரித்த பின்பு ஆங்காங்கே சிலர் பரீட்சார்த்த முயற்சியாக ஸ்டேடசுகளை தமிழில் போட ஆரம்பித்தனர். இவர்களில் அனேகர் வலைப்பூ அதிபர்களாக இருந்தனர். ஆனாலும் வலைப்பூ அதிபர்களை தவிர்ந்த ஏனைய பாமர வாசகர் கூட்டம் இன்னமும் ஆங்கிலத்தில் ஸ்டேடஸ் போடுவதே பெருமை , அந்தஸ்து என்ற மாயைக்குள்ளே இருந்தது.



தற்போது ஒன்றிரண்டு பெருமை பீத்தக்கலயன்களையும் , பீத்தக்கலச்சிகளையும் தவிர ஃபேஸ்புக்கில் உள்ள அனைத்து தமிழரும் தமிழில் ஸ்டேடஸ் போடுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். இந்த புரட்சி வெடித்தது எப்படிஅதற்கு நான் அறிய இரண்டு காரணங்கள்.

முதலாவது , கல்வியினால் சமூக அந்தஸ்து பெற்ற தமிழார்வம் மிக்க சிலர் , கலை மற்றும் திறமைகளினால் சமூகத்தில் அறியப்பட்ட பிரபலங்கள் சிலர், கல்வி அல்லது ஊடகங்களில் அறியப்படாவிட்டாலும் தமது எழுத்து திறமைகளால் தமக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்ட சிலர் என ஒரு கூட்டம் தமிழில் ஸ்டேடசுகளை போட ஆரம்பித்ததும், அதுவரை ஆங்கிலத்தில் அப்டேட்டுவதே கௌரவம் என்ற மாயைக்குள் இருந்த பாமரன் , தனது முன்மாதிரியாக இருக்க கூடிய பிரபலங்கள் தமிழில் ஸ்டேடஸ் போட ஆரம்பித்ததும் , ஆங்கில மாயைக்குள் இருந்து வெளிவந்து தாமும் தமிழில் ஸ்டேடஸ் போட ஆரம்பித்தனர்.

ஆனாலும் இவ்வாறான முதலாவது புரட்சி (???)  நடந்த பின்னரும் இன்னமும் கணிசமான தொகை தமிழர் ஆங்கிலத்திலேயே ஸ்டேடஸ் போடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். இங்குதான் அந்த மாபெரும் இரண்டாவது புரட்சி வெடிக்கின்றது. நம் தமிழரிடையே ஒரு கேடு கெட்ட பழக்கம் இருக்கின்றது. அதாவது "இன்று போலியோ தினம், உங்கள் பிள்ளைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுங்கள்" என்று வைத்தியர்கள் காட்டு கத்து கத்தினாலும், பாக்கு போட்டுக்கொண்டு பராக்கும் பார்க்கும் நம்மவரகள், அதையே தொலைக்காட்சியில் அமிதாப்பச்சன் தோன்றி "...ன்..று போல்... இயோ.. தடுப்பு தின்னம்ம்ம்... மறக்காமல் உங்கள் குழந்..... தைகளுக்க்க்க்க் கு போல்.. இயோ மருந்து கொடுங்கள்" என்று சொல்லிவிட்டால் பின்னங்கால் பிடரியில் பட தெறித்து மருத்துவமனைக்கு ஓடும் பழக்கம் கொண்டவர்கள்.

அந்த மாதிரி ஒரு புரட்சிதான் வெடித்தது இப்போது, பாட புத்தகத்திலும் , பல்வேறு இடங்களிலும் சொன்னபோது புரியாத தமிழின் அருமை , நம்மவர்களுக்கு சூர்யாவும் , முருகதாசும் இணைந்து ஏழாம் அறிவில் சொன்னபோது கற்பூரம் போல பற்றிக்கொண்டது. ஏழாம் அறிவின் மீது என்னதான் சர்ச்சைகள் முன்வைக்கப்பட்டாலும் அந்த திரைப்படம் தமிழர்களின் மனதில் ஏற்படுத்திய உண்மையான தமிழின தாக்கத்தை அல்லது தமிழ் பற்றை மறுத்துவிட முடியாது என்பதை எனது முன்னைய ஒரு பதிவில் சொல்லியிருந்தேன்.

அந்த தாக்கத்தின் விளைவாய் தமிழே அறியா தமிழன் கூட தமிழில் ஸ்டேடஸ் போட எத்தனித்தான். எழுத்துப்பிழையாகவேனும் சரி தமிழில் ஸ்டேடஸ் போட ஆரம்பித்தனர் ஃபேஸ்புக்வாழ் தமிழர்கள். ஃபேஸ்புக்கில் வலம் வரும் பொழுதுபோக்கு குழுக்கள்  நடிகர்களின் பெயரால் ரசிகர்களுக்கு இடையில் சண்டை மூட்டிவிட்டு ஆதாயம் பார்க்கும் நேரம் தவிர ஏனைய நேரங்களில் தமிழின மற்றும் தமிழர் வரலாறுகளையும் ஃபேஸ்புக் வாயிலாக அறியத்தந்து சில உருப்படியான காரியங்களும் செய்தன. ஏழாம் அறிவு தாக்கத்தின் பின்னர் ஃபேஸ்புக்கில் துணையற்று தன்னந்தனியாக ,தமிழன் + தமிழ் புகழ் பாடிய தமிழின , தமிழ் உணர்வாளர்களும் , தமிழில் எழுத , உரையாட ஆசை இருந்தும் மற்றவன் என்ன நினைப்பான் என்ற ஒரு மாயையான தாழ்வுமனப்பாங்கில் இருந்த தமிழரும் தங்கள் பங்குக்கு ஃபேஸ்புக்கில் தமிழில் உரையாட ஆரம்பித்தனர். இதனால் இப்போது Good Night friends J , Good morning J , Wish You Happy birth day J J J  எல்லாம் தலைகீழாகி இரவு வணக்கம் நண்பர்களே, காலை வணக்கம், சகோதரா, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை சரளமாக காணமுடிகின்றது.




இது போன்ற காரணங்களால் சமகாலத்து தமிழர்வாழ் ஃபேஸ்புக்கில் தமிழில் ஃபேஸ்புக் பெயர் வைத்திருப்பதும், தமிழில் ஸ்டேடஸ் , கமன்டுகள் இடுவதும் தமிழில் வாழ்த்து சொல்வதும் பெருமையான கௌரவமான ஒரு விடயமாக கருதப்பட்டு வருகின்றது. ( வேற்று மொழி பேசும் மக்களோடு நண்பர்களாக இருக்கும் தமிழர்கள், தங்களை அவர்கள் ஃபேஸ்புக்கில் தேடுவதற்கு சிரமாமாக இருக்கும் என்பதால் ஆங்கிலத்தில் தமது பெயர்களை இன்னமும் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.) ஃபேஸ்புக்கில் ஆங்கிலத்தில் உலவுவது தான் கௌரவம் என்ற நிலை இப்போது தலைகீழாகியிருக்கிறது என்பது நிதர்சனம். இப்போதெல்லாம் ஆங்கிலத்தில் போடப்பட்டிருக்கும் ஸ்டேடசுகள் கவனிக்கப்படுவதில்லை, தமிழில் ஏதும் எழுதப்பட்டிருந்தால் அது நிச்சயம் ஒரு மேலோட்டமான வாசிப்பிற்காவது உட்பட்டுத்தான் கடந்து போகின்றது. இது 21ம் நூற்றாண்டு அல்ட்ரா மார்டன் தமிழர்களின் மிகப்பெரிய , வரவேற்கப்படக்கூடிய மனநிலை மாற்றம்.

ஃபேஸ்புக் வாழ் தமிழர்களில் இப்போது யாரெல்லாம் தமிழ் அல்லாத மொழிகளில் ஸ்டேடஸ் இடுகிறார்கள்? தமிழராய் பிறந்தும் தமிழ் மொழியை எழுத வாசிக்க தெரியாத ஈன ஜென்மங்கள், சொந்தமொழியை தவிர வேறு எந்த மொழியும் ஒஸ்தி என்று இன்னமும் நினைக்கும் @#$% கள் , புதிதாக வெளிநாட்டில் அகதி அந்தஸ்து பெற்று இப்போது தான் ஆங்கில அகராதி படித்தோர் . இந்த ஜென்மங்கள் எல்லாம் பட்டுத்தான் தெளிய வேண்டும்.

ஆனாலும் இவர்களை தவிர  வழமையாக தமிழில் ஸ்டேடஸ் போடுவதாய் இருந்தாலும் வேற்று மொழி நண்பர்களுக்கு புரிவதற்காய் மூன்றாம் மொழியை ஆத்திர அவசரத்துக்கு நாடுவோர், தமிழ் செயலியை பயன்படுத்த வசதியில்லாத கைப்பேசிகளை பயன்படுத்துவோர், தமிழ் செயலியை கையாள தெரியாதோர். இவர்கள் ஆத்திர அவசரத்துக்கு அந்திய மொழி நாடுவோர். நான் அறிய இன்னமும் ஃபேஸ்புக்கில் ஆங்கிலத்தை புடித்து தொங்கிக்கொண்டிருப்போரில் பெண்கள் தான் அதிகம் , கவனித்து பாருங்கள். ஆங்கிலத்தில் வந்துவிழும் ஸ்டேடசுகளுக்கு உரிமையாளர்களாக அனேகமாக பெருமை பீத்தகலச்சிகள் தான் இருக்கிறார்கள்.



/////கல்வியினால் சமூக அந்தஸ்து பெற்ற தமிழார்வம் மிக்க சிலர் , கலை மற்றும் திறமைகளினால் சமூகத்தில் அறியப்பட்ட பிரபலங்கள் சிலர், கல்வி அல்லது ஊடகங்களில் அறியப்படாவிட்டாலும் தமது எழுத்து திறமைகளால் தமக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்ட சிலர் என ஒரு கூட்டம் தமிழில் ஸ்டேடசுகளை போட ஆரம்பித்ததும், அதுவரை ஆங்கிலத்தில் அப்டேட்டுவதே கௌரவம் என்ற மாயைக்குள் இருந்த பாமரன் , தனது முன்மாதிரியாக இருக்க கூடிய பிரபலங்கள் தமிழில் ஸ்டேடஸ் போட ஆரம்பித்ததும் , ஆங்கில மாயைக்குள் இருந்து வெளிவந்து தாமும் தமிழில் ஸ்டேடஸ் போட ஆரம்பித்தனர்//////

என்று சொல்லியிருந்தேன். அவ்வாறாக நான் அறிய , நான் பின் தொடருகின்ற எனக்கு பிடித்த சில அப்பாட்டாக்கருகளை இங்கே குறிப்பிடுகிறேன். சுவாரசியமானவர்கள்.. முடிந்தால் நீங்களும் தொடருங்கள்.

மைந்தன் சிவா : எனக்கு நெருக்கமான நண்பர் , ஆலோசனையாளர் என்று அறிமுகமாக முன்னர் ஒரு சிறந்த ஜனரஞ்சக வலைப்பூ எழுத்தாளராக அறிமுகமானவர். பின்பு ஃபேஸ்புக்கில் நண்பரானவர். நாளுக்கொரு ஸ்டேடஸ் என்பது இவரது கணக்கு. அனேகமாக அது இரவில் தான் வந்து விழும். ஆனால் அந்த ஒரு ஸ்டேடஸ் அன்றைய தினத்தின் சிறப்பை அல்லது அன்றை தினத்தில் நிகழ்ந்துவிட்ட அல்லது நிகழ்ந்துகொண்டிருக்கின்ற சிறப்பான அல்லது முக்கியமான நிகழ்ச்சியை பற்றிய செய்திகளை சொல்லிக்கொண்டிருக்கும். நாளுக்கு ஒரு ஸ்டேடஸ் என்ற கணக்கில் வருகிற படியால் ஒரு வலைப்பு பதிவு அளவுக்கு நீளமாகவெ இருக்கும். ஆனாலும் முடிந்தவரை சுவாரசியமாகவே சொல்லவந்ததை சொல்லியிருப்பார். சில வேளை சிறிய விடயத்தையும் அளவுக்கு மீறி நீட்டி விடுவது அண்ணாத்தையின் மைனஸ். ஆனாலும் அது நூற்றுக்கு ஒரு தடவையே  நிகழும். பேஸ்புக்கில் நான் வந்து போனால் முதலில் நான் தரிசிக்கும் நிலை அண்ணனின் நிலை தான். எனது ரசனையை ஒத்த ரசனைக்காரர். அண்ணனின் நிலையை படித்து விட்டால் அன்று உலகில் முக்கியமாக என்ன நிகழ்ந்திருக்கிறது என்பதற்கு செய்திகளை புரட்ட வேண்டிய அவசியம் இருக்காது + அதற்கு ஒரு சுவாரசியமான தன்ன்நிலை விமர்சனமும் அளிப்பது மைந்தன் சிவாவின் சிறப்பு. சுவாரசியமான எழுத்துக்கு சொந்தமான குழந்தை மனசுக்காரர்.

முத்துராம் & கருவைரா : மைந்தன் சிவாவுக்கு முற்றும் முரணான ஃபேஸ்புக் பதிவர்கள். ஒன்று நாளொன்றுக்கு வகை தொகையாக ஸ்டேடஸ் அப்டேட்டி இருப்பார்கள் , ஒரு நாளில் அநேக ஸ்டேடஸ் இடுவதனால் மைந்தன் சிவாவின் நிலை போல இவர்களது நிலை நீளமாக இருக்காது. சுருக்கமாக அதே நேரம் நறுக்கென்று காரமாகவும் கனமாகவும் இருக்கும். எத்தனை நிலை போட்டாலும் "கண்டதும் போட்டு கழுத்தறுப்போ ஃபோபியா" வியாதியோ என்ற எண்ணம் வர வைக்காதவர்கள். போடும் அத்தனை ஸ்டேடசும் நறுக் சுறுக். அநேகமாக இந்திய அரசியல் + ஜோக்குகள் என்பனவே இவர்களின் பேசு பொருள். இவர்களின் ஒவ்வொரு ஸ்டேடசும் சிரிக்க அல்லது சிந்திக்க வைக்கும் என்பதற்கு நான் கியாரண்டி.

.ஆர்.வி.லோஷன் : இலங்கையின் முன்னணி ஊடகவியலாளர் , இவரின் குரலுக்கு அடிமையான நான் பின்னாளில் ஃபேஸ்புக்கில் இவரது நண்பரானதற்கு காரணம் கிரிக்கட் தொடர்பான இவரது ஸ்டேடசுகள். ஆழ்ந்த அலசல்களுடன் வரும் இவரது கிரிக்கட் ஸ்டேடசுகள் எப்போதும் சுவாரசியமானவையும் , எதிர்வு கூறியதன் படி நடப்பவையாகும் இருக்கும். அப்பப்போ அரசியல் தொடர்பில் ஸ்டேடஸ் போட்டாலும் இவரது சிறப்பு இவரது விளையாட்டு தொடர்பான ஸ்டேடஸ்கள் தான். இப்போதெல்லாம் ஊடக வேலை பழு+ டுவிட்டர் என்பதன் காரணமாக அடிக்கடி ஃபேஸ்புக்பக்கம் இவரை காணமுடியவில்லை.

அருளானந்தம் ஜீவதர்ஷன் : லோஷன் அண்னாவின் குறையை இப்போதெல்லாம் தீர்த்துவைத்து கிரிக்கட் ஸ்டேடசுகளை அப்டேட்டிக்கொண்டிருக்கும் இலங்கையர்களில் மிக முக்கியமானவர். இலங்கை அணியின் தீவிர விசிறி + கிரிக்கட் வெறி + கிரிக்கட் தொடர்பிலான தேடல் என்பன இவர் ஸ்டேடசின் பால் நான் ஈர்க்கப்பட காரணம். இவரது பதிவுகளில் இருக்கும் அந்த ஆழ்ந்த அலசல் இவரது கிரிக்கட் தொடர்பான ஸ்டேடசில் இருப்பதில்லை என்ற போதிலும் ( காரணம் ஸ்டேடஸ் அவ்வளவு பெரிதாக இருக்காது) நான் அறிய தமிழில் ஸ்டேடஸ் போடும் சிறந்த ஒரு கிரிக்கட் அவதானி. வெறும் புள்ளிவிபரங்களோடு மட்டுமல்லாது கிரிக்கட் நடப்புகளை தனது பாணியில் ஒரு லொள்ளுத்தனமாகவும் எழுதுகின்ற வித்தியாசமான எழுத்துக்கு சொந்தக்காரர்.  , தான் நினைப்பதை நேராக சொல்லும் குணத்தை உடையவர். கிரிக்கட் தவிர்ந்த இவரது ஏனைய பதிவுகளில் எனக்கு அனேகமாக உடன்பாடு இருந்ததில்லை என்ற போதும் யதார்த்தமான இவரது எழுத்துக்காகவே இவரை தொடரலாம்.

பால கணேசன் : தமிழ் நாடு தந்துவிட்ட அண்ணன்களில் இவரும் ஒருவர். வலைப்பூ மூலமாகத்தான் அறுமுகம் என்று நினைக்கிறேன். சரியா அண்ணே? கடந்த வருடம் நான் தமிழ் நாடு சென்றிருந்த போது "தம்பி நீயி நெறைய எழுதணும் " என்று உரிமையோடு ஆணையிட்டவர். வலைப்பூ ஒன்றுக்கு அதிபராய் இருந்தாலும் அண்ணனின் வாசஸ்தலம் என்னமோ ஃபேஸ்புக் தான். பேஸ்புக்கில் எனக்கிருக்கும் நண்பர்களில் இவரே முதன்மையான கதை சொல்லி என்பேன். தனது வாழ்வில் நடந்த  சம்பவங்களை இலக்கியச்சுவையோடு , ஒரு நகைச்சுவை இழையோடும் வகையில் கதையாக சொல்பவர். இவரது கதைகளில் பயணிக்கும் போது அந்த சம்பவங்கள் நம் கண்முன்னே விரிவது இவரது எழுத்தின் சிறப்பு. புதுக்கவிதைகள் கூட எழுதுவார். சில கவிதைகள் எனக்கு விளங்குவதில்லை , அப்பாவியாய் அவரிடமே விளக்கம் கேட்பேன். ஆனாலும் சில மாதங்களுக்கு முன்னர் "கடவுள் கவிதைகளை " எழுதினார். மிகச்சிறந்த புதுக்கவிதைகள் அவை. சுவாரசியமானவை..... சமகால நடப்பு பேசியவை. ( அண்ணே என்னோட புரிதல் சரிதானா? ) ஆனால் இவரது திரைப்பட விமர்சனங்களோடு நான் ஒத்துப்போவது கிடையாது, இவரது விமர்சனங்கள் ஒரு குழுநிலையை சார்ந்திருப்பதாக படுவதே அதன் காரணம்.



மாஸ்டர் ஷிபு & பி.கே . ராம் குமார் : இருவரும் ஸ்டேடஸ் போடுவார்கள் , ஆனால் அவற்றை விட சுவாரசியம் இவர்களது புகைப்படங்கள். "வைல்ட் லைஃப் போட்டோகிரஃபி" என்று உயிரெடுக்கும் ஜீவன்கள் மத்தியில் ஐந்தறிவு ஜீவன்களின் படங்களை உயிரோடு தருபவர்கள். அதற்காக இவர்களது படங்கள் நாளைய தினமே புலிட்சர் அவார்டு வாங்கும் என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால் மிகச்சிறந்த புகைப்படங்களுக்கு சொந்தக்காரர்கள்.

அப்புறம் நீங்கள் ஆங்கில படங்களை வெறுமனே கைதட்டி ரசித்துவிட்டு முத்தகாட்சிகளை மட்டும் ஜொள்ளு ஒழுக பார்த்துவிட்டு வராமல் ( என்னை போல்) , திரைப்பட நுணுக்கங்களையும் தொழிநுட்ப கலைஞர்களையும் அலசி ஆராய்பவராக இருந்தால் உங்களுக்கு மாஸ்டர் ஷிஃபுவின் போஸ்டுகள் நிச்சயம் பிடிக்கும். ஆனால் எனக்கு இவரோட போட்டோகிராஃபி தான் மொதல்ல.. 

டிமிட்ரி & கார்டூனிஸ்ட் பாலா : இந்த இருவரையும் தெரியாத ஃபேஸ்புக்வாழ் தமிழர்கள் அரிது என்று கூட சொல்லலாம். அந்தளவு "பேஸ்புக் அப்பாட்டாக்கர்கள் " என்ற வார்த்தைக்கு முற்றிலும் தகுதியானவர்கள். அரசியல், உலகநடப்பு, சினிமா, விளையாட்டு, நகைச்சுவை, மரணமொக்கை என்று அப்படி போல் போட்டாலும் சிக்ஸர் அடித்து ஆடும் பன்முக வித்துவான்கள். இன்னும் ஃபாலோ பண்னலியா? இன்னிக்கே பண்ணிருங்கோ.. 100% என்டெர்டெய்ன்மென்டு நிச்சயம்.

எனது நேற்றைய பதிவில் "ஐநா சபையே ஐயகோ" என்று ஒரு வியாதி என்று கிண்டலாக எழுதியிருந்தேன். ஆனால் ஃபேஸ்புக் மூலமான ஒரு அறிவித்தலால் , ஆபத்தில் இருந்த ஒரு உயிருக்கு அவசரமான நேரத்தில் ரத்தம் கிடைக்க உதவியிருந்தார் டிமிட்ரி.

# ஒரு வேளை அந்த சோமாலியா சிறுவர்கள் படத்தை "லைக்" பண்ணுனா நெஜமாலுமே சோமாலியாவில் சோடா ஆறு ஓடுமோ?


தமிழின் வளர்ச்சிக்கும் அதன் விஸ்தீரணதிற்கும் பல்வேறு தளங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ் பயன்பாட்டை ஊக்குவிக்க எவ்வளவோ முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் இருபத்தியொராம் நுற்றாண்டின் கருவி ஒன்றில்எத்திசையிலும் ஆங்கிலம் சூழ்ந்த நிலையிலும் , தமிழ் எழுத்து மற்றும் உரையாடலுக்கு ஃபேஸ்புக் பாலம் அமைத்திருக்கின்றது. தாங்கள் தெரிந்தோ தெரியாமலோ , தங்களால் ஊக்குவிக்கப்பட்டவர்கள் மூலம் தமிழ் பயன்பாட்டை அதிகரித்து , ஃபேஸ்புக்கில் தமிழில் உரையாடுதலே கௌரவம் , தமிழ் உரையாடல்களே கவனிக்கப்படுகின்றன என்ற ஒரு நிலைப்பாட்டினை எற்றடுத்திவிட்ட , மேலே நான் சொன்னது போன்ற அப்பாட்டாக்கர்களது செயற்பாடு பாராட்டப்படவேண்டியதே.....


12 comments:

  1. அடிக்கடி 'மைந்தன் சிவாவின் நிலை' 'மைந்தன் சிவாவின் நிலை ' என்று பார்க்கும்போது,ஏதோ கோமா ஸ்டேஜ்ல இருக்கிறவன பத்தி லைவ் அப்டேட் குடுக்கிற மாதிரியே ஒரு பீலிங்கு.. நன்றி நன்றீ

    எனக்கு தெரிஞ்ச மத்தவங்க பார்க்கமுதல் உன் எழுத்தை முதலில் பார்த்தவன் என்கின்ற திருப்தி.(பெருமை)பலருக்கு அறிமுகம் செய்திருக்கிறேன் நேரில்.என்னுடைய வலைத்தளத்தில் இதுவரை அறிமுகம் செய்தது இருவரை.முதலாவது நீ..இறுதியானவர் நம்ம 'படலை' அண்ணே!

    ReplyDelete
    Replies
    1. ஆயிரமோ , ரெண்டாயிரமோ ஏன் நமக்குள் ஐநூறு இருக்கலாம். ஆனால் எப்போதும் என்னை போன்றவர்களுக்கு நீங்கள் ஒரு முன்னோடி. அப்படியான உங்களால் அறிமுகம் பெற்ற அந்த நாள் என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத நாள். நன்றிண்ணே....

      Delete
  2. Replies
    1. தங்களது பேச்சில் ஒரு "நக்கல்" தெரிகிறதே.... ம்ம்ம்... :P

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. நல்லதுக்குக் காலமில்லை!

      பின்னூட்டம் இட்டதற்கு [பாராட்டியதற்கு] மன்னியுங்கள் கிஷோர்.

      Delete
    4. திருத்தம்...கிஷோகர்.

      Delete
    5. அண்ணே சும்மா ஒரு ஜாலிக்கு சொன்னா , ஒடனே கோவிச்சுட்டீங்களே.... என்னண்ணே இது?

      Delete
    6. அண்ணே நல்லதுக்கு எப்பவுமே காலம் இருக்குண்ணே.... கவலைப்படாதீங்க‌

      Delete
    7. நன்றி கிஷோகர். மனப்பூர்வ நன்றி.

      Delete
  3. அருமையான பதிவு..

    ஒரு சின்ன குறை ..

    முத்து ராம் இல்ல பிரபல எழுதாளர் முத்து ராம் :) ,
    பிரபல எழுதாளர் முத்து ராம் ,கரு வைரா ,பாலா அண்ணன் ,டிமிட்ரி எல்லோருடனும் நட்பில் இருக்கிறேன் . மததவர்களிடம் இந்த பதிவை பார்த்து நட்பில் இணைந்துக் கொள்கிறேன்..

    இதில் முகநூலுக்கு வெளியில் அருமையாக பழக கூடியவர் அண்ணன் கரு வைரா. நல்ல மனிதர் .என்னை போல் சின்னவங்களிடமும் அன்புபாக ,தோழமையுடன் பழகக்கூடுயவர்..

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...