உதைபந்து

Thursday, February 23, 2012

நாங்கெல்லாம் அப்பவே அப்பிடி ! இப்போ கேக்கவா வேணும்? பாகம் 2


பாகம் ஒன்றின் தொடர்சி. (பாகம் ஒன்றை படிக்க இங்கே சொடுக்குங்கள் http://www.kishoker.blogspot.com/2012/02/1.html)

எறிபோல்.

இந்த விதி சர்வதேச கிரிக்கட்டின் முறையற்ற பந்து வகையறாவுக்குள் அடங்கும். அதாவது கிரிக்கட்டில் அனுசரிக்கப்பட்ட விதிகளுக்கு ஒவ்வாத முறையில் (கைகளை மட்டக்கி) பந்தை வீசுவது.  இந்த "எறிபோல்" விதி எங்களுக்கு கைகொடுப்பது ஆறாம் தரம் 'பி' வகுப்புடன் (நாங்க ஆறாம் தரம் "ஏ" வகுப்பு) கிரிக்கட் ஆடும் போதுதான்.

ஜந்தாம் ஆண்டிலேயே முறையாக பந்துவீச கற்றுக்கொண்டேன், (எப்படி என்று தெரியவில்லை). எனவே இந்த எறிபோல் விதியின் பக்கவிளைவுகளில் இருந்து நான் தப்பித்துவிடுவதுண்டு. நாங்கள் ஆறாம் ஆண்டு படிக்கும் போது எங்களது 'ஏ' வகுப்பில் என்னோடு சேர்த்து இன்னொரு பையனும் முறையாக பந்துவீசுவான். "பி' வகுப்பு தான் பாவம். எல்லோருமே "எறிபோலின்" வாரிசுகள் தான். இந்த விதி பயன்படுத்தப்பட்டவிதத்தை பாருங்கள்.




 "பி" வகுப்பில் யாருமே முறையாக பந்துவீச மாட்டார்கள் என்பதால், எறிபோல் போடுவது ஆட்டத்தில் முறையற்றது என்று தெரிந்தும் அது அனுமதிக்கப்படும். ஆனால் அதற்கு தண்டனை வேண்டாமா? வைத்திருந்தோம் பாருங்கள் ஒரு விதி! ஜ.சி.சி யும் யோசனை செய்திராத ஒரு விதி. அதாவது எறிபோல் போடும் ஒருவரது ஓவருக்கு எந்தவித ஆட்டமிழப்பும் கிடையாது. (ரன் அவுட் தவிர) . எங்களது வகுப்பில் நானும் , முறையாக பந்துவீச தெரிந்த எனது மற்றைய நண்பனும் மாறி மாறி பத்து ஓவர்களையும் முழுமூச்சில் போட்டு முடித்து விடுவோம்.

"பி" வகுப்பு களத்தடுப்புக்கு வரும் போதுதான் இருக்கிறது கதை. உடனே நாங்கள் கேட்போம் "மச்சான்! எறிபோலுக்கு நோபோல் பிடித்து ரன் சேர்ப்பதா? அல்லது நோபோல் பிடிக்காமல் , எந்தவித அவுட்டும் இல்லை என ஆடுவதா? என்று. எனக்கு தெரியும் நாங்கள் எதிர் பார்க்கும் பதில் தான் என்று. "இல்ல மச்சான்! நோ போலுக்கு அவுட் இல்லை என்றே விளையாடுவோம்" . ஏன் என்று சொன்னால் "எறிபோலை" நோபோலாக எடுத்துக்கொண்டால் பந்தும் கணக்கில் சேராது, அது போக ஒவ்வொரு பந்துக்கும் மன்னிக்கவும் எறிக்கும் நாங்கள் ஓட்டம் ஒன்றை சேர்த்துக்கொண்டே இருப்போம். ஆக எந்தவித பந்தும் வீசப்படாமல் போட்டியில் தோற்றுவிட்டுப் போக அவர்கள் ஒருபோதும் விரும்பியதில்லை.



பின்பு என்ன எங்கள் காட்டில் மழைதான். ரன் அவுட் தவிர எந்த அவுட்ட்டும் தான் கிடையாதே..! விருப்பம் போல ஆட்டத்தொடங்கிவிடுவோம். "டில்ஸ்கூப், பீற்ரர்சன் ரிவேர்ஸ் ஷொட், டோனி ஹெலிஹொப்டர் ஷொட் " என்பன இவர்கள் முயற்சி பண்னும் முன்னமே நாங்கள் அவற்றில் டிப்பிளோமா முடித்திருந்தோம். (எந்த அவுட்டும் தான் கிடையாதே , பின்பென்ன கவலை?) எங்களை வெல்ல வேண்டுமென்றால் அதிக ரன் அடித்து , அந்த ரன்களுக்குள் எங்களை சுருட்டினால் தான் உண்டு. எங்களை "ஓல் அவுட்டாகி" வெற்றி பெற்ற கதை எந்த சரித்திரம், பூலோகம் எதிலும் இருந்ததில்லை. அதே போல் எங்களது வெற்றிகள் எல்லாம் பத்து விக்கட்டுகளால் வென்ற கதையாகத்தான் இருக்கும். இந்த மானம் கெட்ட வெற்றியை வென்றுவிட்டு "இந்த அடி போதுமா ? இன்னும் கொஞ்சம் வேணுமா? என்ற நக்கல்கள் வேறு.

இந்த வெற்றி மிதப்பை அடுத்தநாள் பள்ளிக்கூடத்தில் மிதப்பாக எங்கள் வகுப்பு பெண்களிடம் சொல்லி, அவர்கள் "பி" வகுப்பு ஆண்களை நக்கல் அடிக்கப்போய், மைதானத்தில் நாங்கள் அடித்த நக்கல்களையெல்லாம் தலைகுனிந்து கேட்டுக்கொண்டிருந்துவிட்டு எங்கள் வகுப்பு பெண்கள் லேசாக நக்கலாய் சிரித்த காரணத்தால் உள்ளிருந்த மானம், ரோஷம், வெங்காயம், வெள்ளைப்பூடு எல்லாம் வெளிவர அந்த "பி" வகுப்பின் கவரிமான் குஞ்சுகள் , எங்களை அடி பிழிந்து எடுத்த கதைகளும் அடக்கம். இந்த அடிபிடியிலும் நாங்கள் தான் வெல்லுவோம். அவர்கள் எங்களை அடிக்கத்துரத்த நாங்கள் வெற்றிகரமாக அவர்களை முந்திக்கொண்டு முன்னே ஓடிக்கொண்டிருப்போம். திருப்பி அடிப்பதெல்லாம் ஹி....ஹி...ஹி... அத்தனை முரடர்களும் அவர்கள் வகுப்பில் இருந்தர்கள்.



ஒரு ஆளுக்கு மூன்று ஓவர்கள்.

கிரிக்கட்டில் ஜந்து பந்துவீச்சாளர்கள் கட்டாயம் பயன்படுத்தப்பட வேண்டுமென்பது விதி. அது எங்களுக்கு அப்போது சுத்தமாக‌ தெரியாது. இப்போது கூட பல்கலைக்கழகத்தில் இந்த விதியை பெரும்பாலும் கடைப்பிடிப்பது இல்லை. ஆனால் விஷயம் அதுவல்ல. அது தொடர்பானது தான்.

எங்களது நம்பிக்கையெல்லாம் ஒரு பந்துவீச்சாளர் எத்தனை ஓவர் வேண்டுமென்றாலும் போடலாம். அது போக நாங்கள் வகுத்திருந்த அல்லது அப்படியொரு விதியிருப்பதாக நம்பிய விதியை கேளுங்கள். அதாவது ஒரு பந்துவீச்சாளரால் தொடர்ச்சியாக மூன்று ஓவர்கள் பந்து வீச முடியும். அதன் பின்பு அவரால் எந்தவித ஓவரும் போட முடியாது. உதாரணமாக அது ஜம்பது ஓவர்கள் கொண்ட போட்டியாக இருந்தால் , ஒரு பந்துவீச்சாளர் விரும்பினால் முதல் மூன்று ஓவர்களையும் தொடர்ச்சியாக வீசலாம். அதன் பின்பு அவருக்கு பூரண ஓய்வுதான். அவரால் மேற்கொண்டு பந்துவீச முடியாது. அப்படி இல்லை என்றால் அவரால் இருபத்தைந்து ஓவர்கள் அதிகபட்சமாக வீச முடியும்.



எனக்கு தெரிந்து இந்தவிதி எங்களது தப்பான விளக்கத்தால் வந்திருக்கவில்லை.இது எங்களது சுய லாபத்துக்காக நாங்களாக உருவாக்கியது. ஏனென்றால் "மடையன் சந்தி" ஏரியா அணியுடன் நாங்கள் போட்டிக்கு போன போதே இந்த விதி தொடர்பாக நான் அறிந்து கொண்டேன். அந்த அணியுடன் நாங்கள் எப்போதும் வென்றது கிடையாது. அந்த அணியில் ஆடும் சுமன் என்பவன் எமகாதகன், எப்படி பந்துபோட்டாலும் அடிப்பான். வயதிலும் பெரியவன். அவன் தான் அவர்களது ஒரே நம்பிக்கை. அன்றொருநாள் நண்டுவலை தெரிப்பதற்கு என்று அவன் போய்விட்டான். பந்தயதொகை வேறு பெரிதாக இருந்தது. ( இரண்டு பெப்ஸி). எங்களது அணியில் நான் , எனது மச்சான் சயந்தன் என்னும் இரண்டு பேர் நன்றாக பந்துவீசுவோம் (அதாவது எறிபோல் இல்லாமல்). அதிலும் எனது மச்சான் சயந்தன் என்னைவிட மூன்று வயது மூத்தவன் , அந்த வயதிலேயே எக்ஸ்பிரஸ் வேகத்தில் பந்து வீசுவான்.


அவன் தான் அந்த சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தினான். சுமன் இல்லாவிட்டால் ஒரு சிலரைத்தவிர அனைவரும் சொத்தைகள். உடனே இந் த விதியை கொண்டுவந்தான் சயந்தன். ஆரம்பத்தில் தயங்கிய அவர்களுக்கு , தானே பார்த்திராத ஒரு போட்டியை சொல்லி அந்தபோட்டியில் சமிந்த வாஸ் இவ்வாறு பந்துவீச நடுவர் அனுமதித்தார் என்று  போட்டான் ஒரு போடு. புதியதொரு விதியோடு ஆரம்பமானது ஆட்டம் தனது முதல் மூன்று தொடர்ச்சியான ஓவர்கள் நிறைவில் எதிரணியின் ஆறு விக்கட்டுக்களை சாய்ய்த்திருந்தான் சயந்தன். ஏற்கனவே சுமன் என்ற அஸ்திவார கல் இல்லாமல் ஆட்டம் கண்டிருந்த அவர்களது அணியின் முதல் முக்கிய ஆறு செங்கற்களை உருவிய பிறகு , மிச்சமாய் இருந்த சொத்தை சுவரை சாய்ப்பதற்கு சயந்தனுக்கு வாய்ப்பிருக்கவுமில்லை, தேவையுமிருக்கவில்லை. அந்த வேலையை நாங்களே செய்துமுடித்திருந்தோம்.




தொழிலால் வந்து சுமன் தங்களது அணிவீரர்களிடம் கத்திக்கொண்டிருக்க,  நாங்கள் கீதா அக்காவின் வெறிக்காய் மர நிழலில் உட்கார்ந்து , இரண்டு பெப்சியை சரிசமமாய் பிரிப்பதற்கு சண்டை போட்டுக்கொண்டிருந்தோம்.அதன் பின்பு அந்த விதி எங்கள் ஊர் முழுதும் பின்பற்றப்படலாயிற்று. சொத்தையாய் ஓரிரண்டு பேரை எதிரணியில் கண்டால் போதும்!  இந்த விதியை கையிலெடுத்துக்கொண்டு பந்துவீச்சாளர்கள் தங்கள் வீரத்தை காட்ட தொடங்கினார்கள். இரண்டு வருடத்துக்கு முன்னர் கூட நான் எனது சொந்த ஊருக்கு போன போதுகூட இந்தவிதி "கஸ்பார் பிட்டி" மைதானத்தில் நடைமுறயில் இருக்கக்கண்டு அதிசயித்து போனேன். என்னைகூட அந்தவிதியின் மூலம் பந்துவீச செய்து ஒரு வெற்றிக்கு அடித்தளம் போட்டர் ஒரு அணித்தலைவர். சிரித்துகொண்டே பந்துவீசினேன். உண்மையை சொல்லவில்லை ஏனென்றால் எதிரணியில் ஆடியவர்கள் அத்தனை பேரும் சொத்தையாய் இருந்தார்கள். ஹி..ஹி..ஹி..

அது போக ஆட்டமிழப்பு தொடர்பாக இன்னும்சில விதிகளுமிருந்தது. அதாவது ஒருவர் நான்கு ஓட்டங்களுக்கு மேல் ஓடிவிட்டால் ஒவர் ஆட்டமிழந்துவிடுவார். மற்றொன்று துடுப்பாட்ட மட்டையின் பின்புறத்தில் பந்து பட்டதை எதிரணி வீரர்கள் கண்டு விட்டால் "அம்பியார் பிற பெற்... அம்பியார் பிற பெற்...." என்று கத்திகொண்டே ஓரிவருவார்கள். நமது பக்கமாக இருந்தாலும் கூட கடமையே கண்ணியம் என்று ந‌டுவரும் ஈவு இரக்கமில்லாமல் ஆட்காட்டி விரலை தூக்கிவிடுவார்.அப்புறம் என்ன துடுப்பை தூக்கி அக்குளில் வைத்து நடக்கவேண்டியதுதான்.ஆக துடுப்பாட்ட மட்டையின் பின்புறத்தில் பந்துபடுவது விதிகளுக்கு முரணானது என்பதே எங்கள் நம்பிக்கை.



இன்னும் சில சுவாரசியமான விதிகள்.

ஒரு விக்கட்காப்பாளர் எந்த சூழ்நிலையிலும் பந்துவீச முடியாது. அதுபோல் பந்துவீசிய ஒருவர் எந்த சூழ் நிலையிலும் விக்கட் காப்பாளராக கடமையாற்ற முடியாது. அப்படி தப்பி தவறி இதில் ஏதாவது ஒன்று நடந்தால் கூட நடுவர் 'நோபோல்" பிடித்துவிடுவார்.

எந்த சந்தர்ப்பத்திலும் நீங்கள் "பிட்ச்' இல் வைத்து பிடியெடுப்பொன்றை நிகழ்த்த முடியாது. துடுப்பாட்ட வீரரால் அடிக்கப்பட்டு பந்து நேராக பிட்ச்சுக்கு மேலே எழும்பினால் , ஒரு களத்தடுப்பாளராக நீங்கள் செய்யவேண்டியது "தேமே" என்று பார்த்துக்கொண்டு நிற்பதுதான். பந்து நிலத்தில் விழுந்தவுடன் நீங்கள் ஓடிப்போய் பொறுக்கலாம். ஹி...ஹி...ஹி.... !!

அது போக இன்னுமொரு கொடுமை நடக்கும் ,  பந்து அடிக்கப்பட்டு பிட்சுக்கு வெளியே சற்று அருகில் மேலெழும்புகிறது என வைத்துக்கொள்வோம் . நீங்கள் அந்த பந்தை பிடியெடுக்க‌ முயற்சி செய்யாமல் இருப்பது அதி உத்தமம். நீங்கள் முயற்சி செய்வது கண்டால் , துடுப்பாட்ட வீரர் ஓட்டம் பெறுவது போல் ஓடிவந்து உங்களை இடித்து தள்ளி, அல்லது உங்களது முகத்துக்கு நேரே துடுப்பை உயர்த்தி , ஹீ ஹீ ஹீ ஹீ ஹா ஹா ஹா ஹா என்றெல்லாம் கத்தி காட்டாத விளையாட்டெல்லம் காட்டுவார். எங்களது விதிகளில் இது அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆக உங்கள் முகத்தை காத்துக்கொள்ளும் பொருட்டு அந்த பிடியெடுப்பை நழுவ விட்டு "கெட்ச்சை புடிடா நாயே" என்று தலைவரிடம் திட்டு வாங்குவது புத்திசாலித்தனம். நான் கூட நிறைய தடவை புத்திசாலி என்று நிரூபித்திருக்கிறேன்.



அது போக நீங்கள் பிடியெடுப்பொன்றை நிகழ்த்திவிட்டு ஆர்வமிகுதியால் பந்தை வீசியெறிய , அது போய் எல்லைக்கோட்டை தாண்டி விழுந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். கதை அதோ கதி தான்.... அது ஆட்டமிழப்புமல்ல ,அத்தோடு அது ஆறு ஓட்டமாக கணக்கில் கொளப்படும். (இந்த விதியை சரியென நான் இலங்கை நடுவர் சம்மேளன போட்டிப்பரிட்சையில் சித்தியடையும் வரை சரியெனவே நம்பிக்கொண்டிருந்தேன்)

மேற்சொன்னவை எல்லாம் உண்மையாக கிரிக்கட்டில் விதிகளாக இருக்கின்றன என நாங்கள் நம்பியவை. இன்னும் சில விதிகள் எங்களுக்கு அவை விதிகள் அல்ல என்று தெரிந்தும், ஆடும் இடங்களை கருத்தில் கொண்டும், அல்லது ஆடும் நேரங்களை கருத்தில் கொண்டும் நாங்கள் உருவாக்கியவை. சொல்லப்போனால் இவை "கிரவுண்ஸ் ரூல்ஸ்" என்று சொல்லலாம்



மைதான விதிகள்.

பொது கீப்பர்.

இந்த விதியை நாங்கள் தர்மசங்கடமான நேரங்களில் தான் பயன்படுத்துவோம். அதாவது இரண்டு அணிகளிலும் சமமாக பிரிக்கப்பட்ட நேரத்தில் யாரவது இடையில் வந்து விலையாட்டுக்கு சேர்ந்தால் அவரை உடனே பொதுகீப்பராக்கி விடுவோம். எந்த அணி களத்தடுப்பில் ஈடுபட்டாலும் அவர் தான் விக்கட்காப்பாளராக இருப்பார். ரொமேஷ் களுவுதாரண விக்கட் காப்பாளராக புகழின் உச்சியில் இருந்த நேரத்தில், இவ்வாறாக பொது விக்கட் காப்பாலராக கடமையாறுவதில் எல்லோருக்கும் ஒரு சொல்லமுடியா கர்வம் இருந்தது.எல்லா புகழும் களுவுதாரணவுக்கே....!!  நான் கூட எங்காவது விளையாடப்போனால் நான் பொது கீப்பர் என்று ஓரத்தில் நின்று விடுவேன். ஆனால் துரதிஷ்ரவசமாக எனது பந்துவீச்சு காரணமாக யாரும் என்னை விக்கட் காப்புக்கு அனுமதிப்பதில்லை.



ஒரு அவுட்டுக்கு ரெண்டு அவுட்

இது பெரும்பாலும் நடைமுறைக்கு வருவது , எப்போதெல்லாம் எங்கள் அணியை வலுவாக வைத்திருக்க விரும்புகிறோமோ அப்போதெல்லாம் இந்தவிதி அறிமுகம் ஆகும். உதாரணமாக என்னோடு நன்றாக ஆடக்கூடிய ஆட்களை நான் சேர்த்துக்கொண்டு எதிர் அணிக்கு வெறும் மட்டை மட்டுமே பிடிக்க தெரிந்த ஆட்களை பிரித்துவிடுவது. கடுப்பாகும் அவர்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவிப்பார்கள் உடனே "நீங்கள் ஒவ்வொருவரும் இரண்டு தடவை ஆடலாம்" என்று சொல்லி சமாளித்து விடுவோம் .அதாவது ஒருவர் ஆட்டமிழந்த பிறகு இன்னொருமுறை ஆடலாம் . இந்த சலுகை ஏலம் போல் நீளும் . எதி அணி எங்கள்து ஒன்ருக்கு இரண்டு கோரிக்கையை ஏற்கவில்லையானால் சலுகையை ஏற்ற வேண்டும்.எங்களை விட சிறுவர்களுடன் ஆடப்போனால் இந்த ஏலம் நீண்டு ஒன்றுக்கு ஜந்து என்ற கணக்கில் எல்லாம் வந்து நிற்கும். கடைசியில் விளையாட்டுக்கு ஆசைப்பட்டு அவர்களை ஒவ்வொருவரையும் ஜந்துமுறை ஆட்டமிழக்க வைக்க மூச்சிரைக்க பந்துவீசி , அந்த களைப்பில் ஒழுங்காக துடுப்பாட முடியாமல் தோற்று , எங்களை விட பொடிசுகளின் வாயால் "இந்த அடி போதுமா......" கேட்ட வரலாறுகளும் உண்டு.

பந்து தொங்கினால் இரண்டு ரன்.

எங்களது எந்த ஆடுகளமுமே ஒரு பொதுவான அம்சத்தை கொண்டிருக்கும். அது தான் வெறிக்காய் மரம். இலங்கை , இந்திய போன்ற நாடுகளில் இது காணப்பட்டாலும் வேறு வேறு பெயர்களால் இது அழைக்கப் படலாம். துர் அதிஷ்ரவசமாக உங்களுக்கு விள‌ங்க வைக்க எனக்கு வேறு பெயர்கள் தெரியவில்லை. எங்கள் ஊரில் இது "வெறிக்காய் மரம்" என் செல்லமாக அழைக்கப்பட்டது. இந்த மரத்தின் காய்களை நாங்கள் தின்று விடகூடாது என்பதற்காக "இந்த மரத்தின் காய்களை தின்றால் வெறி வரும் " என்று கால காலமாக கதை கட்டி விட்டிருந்தார்கள். எனவே அதற்கு இந்த பெயர்.



என்னதான் சொன்னாலும் எங்கள் மைதானம் முழுதும் தேசிய மரமாய் பரந்து இருப்பதெல்லாம் இந்த மரம் என்பதால் , இதன் காய்கள்தான் எங்களது "பபுள் கம்". கிழிந்து போன காற்சட்டை பைநிறைய இந்த காய்களை அடுக்கி வைத்துக்கொண்டு ஆட்டத்தின் போது பபுள் கம் போல மென்றுகொண்டிருப்போம். அதிலும் அந்த மரத்தின் காயோ, பழமோ உண்பதற்கு நன்றாக இருக்காது. காய் கசக்கும், பழம் ஒரு மாதிரி உலர்ந்து போய் சவ.. சவ என்றிருக்கும். ஆக எல்லோரது தெரிவும் செங்காய் தான். அதிலும் சப்பையாக இல்லாமல் முட்டியாக இருந்தால் விருந்து தான். சிறு புழிப்பும் இனிப்புமாக தேவாமிர்தமாக இருக்கும். அந்த மாதிரியான முட்டியாக பழங்கள் கொண்டிருக்கும் மரங்களை தேர்ந்து வைத்திருப்போம். அந்த அற்புதமான பழத்தை சாப்பிட்டால் ஏன் வீட்டில் அடிக்கிறார்கள் என்பதே எனது மில்லியன் டாலர் கேள்வி.

வெறிக்காய் மரம்


சரி விசயத்துக்கு வருவோம். அந்த வெறிக்காய் மரம் ஊசி இலைகளும் , முட்களுமாக  நிறைந்தது இருக்கும். அதில் போய் பந்து விழுந்தால் மறுபடி கீழே விழுவது வெறும் 5% சாத்தியம் தான். எனவே விதியொன்றை உருவாக்கினோம் பந்து மரத்தில் தொங்கிவிட்டால் மேலதிகாமக ஓட முடியாது. தொங்கிடிட்டால் இரண்டு ஓட்டங்கள் வழங்கப்படும். மெல்போர்ன் மூடுமைதானத்தின் கூரையில் பந்து பட்டுவிட்டால் ஆறு ஓட்டங்களும், ஸிம்பாப்வேயின் மைதானத்துக்கு நடுவே வளர்ந்திருக்கும் மரத்தின் வேரில் பட்டால் நான்கு ஓட்டங்களும் கொடுப்பதில்லையா ? அது போல் தான் இதுவும். இது மர‌த்துக்கு மட்டுமல்ல வேறெதிலும் பொருந்தும்.


வளவுக்குள் போனால் அவுட்.

இந்த விதியானது ஆட்ட மட்டுபத்தல் மற்றும் பந்து பாதுகாப்பு சட்டங்களுக்கு அமைய உருவக்கப் பட்டது. எங்களது கிரிக்கட் காய்ச்சல் ஊர் முழுதும் பரவிக்கிடந்தது என்னவோ சில பெரிசுகளை எரிச்சல் படுத்தியிருக்க வேண்டும். பந்துகளை நாங்கள் அடிக்கும் போது அவர்களது வளவுக்குள் (காணிக்குள்) போய்விட்டால் பந்தை எடுத்து ஒழித்து வைப்பதும் , அதன் பின்பு அடுத்தநாள் அதை இரண்டாய் வெட்டி எங்களது மைதானத்தில் எறிந்து "நீங்கள் யாருடன் மோதுகிறீர்கள் தெரியுமா?" என்ற தொனியில் எச்சரிக்கை செய்வதும் வாடிக்கையாகிப் போனது.

விளையாடுகிறோம் பேர்வழி என்று அவர்கள் யன்னல் கண்ணடிகளை உடைப்பதும், பந்து அவர்கள் வீட்டின் உள்ளே விழுந்தவுடன் தாம் தூம் என்று மதில் பாய்ந்து பந்து எடுக்கப் போய் அவர்கள் பூச்செடிகளை நாசம் பண்ணியதும் அவர்கள் கடுப்புக்கு காரணமாக  இருக்கலாம். ஆனால் சண்டையில் கிழியாத சட்டை எங்கே இருக்கிறது? விளையாட்டு என்று வந்தால் கண்ணாடிகள் உடைவதும் , பூசட்டிகள் நொருங்குவதும் சகஜம் தானே? ஆக நான் இலங்கை அணியில் தலைவராக இல்லாமல் , இப்படி வெட்டியாக உக்கார்ந்து மொக்கை பதிவுகள் போடவேண்டுமென பதினைந்து வருடத்துக்கு முன்னமே எனது ஊர் சதி பண்ணி இருக்கிறது.



சரி அதை விடுவோம்..! எங்கள் அதிரடி மன்னர்கள் அடிக்கடி தங்கள் வீரத்தை காட்டப் போய் நாளுக்கு ஒரு பந்து தொலைவதை தடுக்க ஒரு விதியை அறிமுகம் செய்தோம். அதாவது எந்த வளவானது சர்ச்சைக்குரியதோ அதற்குள் பந்தை அடிக்கும் நபர் ஆட்டமிழந்துவிடுவார். அது போக அடித்தவரே பந்தையும் எடுத்து வரவேண்டும். அந்த வீட்டு நாயோ, வீட்டு உரிமையாளரோ பாராத சமயம், லாவகமாக  பந்தை எடுத்து வருவது அவரவர் சாமர்த்தியம்.

இந்த விதியை இப்போது கூட அனுசரிக்கின்றோம். நான் ஊருக்கு விடுமுறையில் போகும் போது எங்களது அண்டை வீட்டாருக்கு (முன்பு அங்கே எல்லா விதத்திலும் எனக்கு உற்சாகம் தரும் நிரூபன் அண்ணா குடும்பம் இருந்தது. இப்போது நிலமை தலை கீழ்) நாங்கள் அந்த தெருவில்  கிரிக்கட் ஆடுவது பிடிக்காது. காரணம் காண்ணாடி உடைவது ம‌ட்டுமல்ல. அவர்கள் வீட்டில் அத்தனையும் (ஆறு பிள்ளைகள்)  பெண்ண்கள். கேட்கவா வேண்டும்? ஏற்கனவே நாங்கள் எம்.பி.எல் (மூர்ஸ்ரீற் கிரிக்கட் லீக்) என்று ஒன்று தொடங்கி , அந்தன் சீசன் முடிவில் அனது நண்பன் ஒருவன் அந்த வீட்டின் மூத்த பெண்ணை தளிக்கொண்டு போய்விட்டான். அதன் பின்பும் அங்கே போன பின்பு பந்து திரும்பும் என்று எப்படி எதிர்பார்ப்பது?



எனது நண்பன் எம்.பி.எல் ஆட வரும்போது எல்லாம் . "நான் கீப்பர் நிக்கிறேன் மச்சான்" என்னும்போதே நான் சுதாகரித்திருக்க வேண்டும். ஏனென்றால் கீப்பர் நின்றால் அந்த வீட்டின் கதவு நேராக தெரியும். அப்படித்தான் அந்த காதால் காவியம் உருவாகி எனது பல "டன்லப்" பந்துகளுக்கு ஆப்பு வைக்க காரணமானது.இப்போது கூட இன்னுமொரு ஜந்து எம்.பி.எல் சீசனுக்கு திட்டமிட்டு இருப்பதாக நண்பர்கள் வட்டரத்திலிருந்து செய்தி. அதிலும் ரெண்டவது சீசன் ஆரம்பமாகி விட்டதாம்.  எனக்கென்னவோ ஆறாவது சீசன் முடிவில் அந்த வீட்டுக்காரரும் அவரது மனைவியும் தான் மிஞ்சுவார்கள் என நினைக்கிறேன். யார் கண்டார் ஏழாவது சீசன் நடத்தி அந்த வீட்டுக்காரரை மட்டும் மிச்சம் வைப்பார்கள் என நினைக்கிறேன்.

மிகச்சரியான விதிகளோடு விளையாடப்பட்ட கிரிக்கட்டைவிட , நாங்கள் விளையாடிய விருத்தறியா கிரிக்கட் எனக்கு  நிறைய சந்தோஷத்தை தந்தது அதைவிட நிறைய கற்றுத்தந்தது. அதை பகிரும் போது அதை மீண்டும் அனுபவித்த சுகம் எனக்கு. அவ்வாறான உங்களது பால்ய பருவ விளையாட்டு அனுபவத்தை இந்த பதிவு தரும் என்ற நம்பிக்கையில் நான்.
Local children play cricket on February 24, 2011 in Nagpur, India.


பாகம் ஒன்றை படிக்க இங்கே சொடுக்குங்கள்

3 comments:

  1. நண்பரே தங்கள் பதிவை என் தளத்தில் இணைத்தமைக்கு நன்றி. சுருக்கத்தை தராமல் இணைப்பை மட்டுமே பதிவிட்டுள்ளீர்கள். எதிர்காலத்தில் பதிவை இணைக்கும்போது சில விடயங்களை கவனித்தால் உங்கள் பதிவு அழகாக தோன்றும். இப்போது உங்கள் பதிவை என்தளம் வந்து பாருங்கள். எவ்வாறு இணைப்பது என்று என்னுடைய பதிவில் விளக்கமாக தந்துள்ளேன்.அந்த பதிவை படிக்க கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள். சின்ன விசயமே.
    http://www.googlesri.com/2012/02/are-you-want-to-writer.html

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. @http://www.blogger.com/profile/01919642979997781143
      மிக்க நன்றி அன்பரே! அந்த விடையங்களை இனிவரும் காலங்களில் கவனத்தில் கொள்கிறேன். ஆதரவுக்கு நன்றி

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...