உதைபந்து

Thursday, March 15, 2012

வலியப் போய் நரிகளிடம் கடிபடும் சிங்கம்!

இந்த பதிவு ஒரு ரசிகனாக , ஒரு ஆரோகியமான கிரிக்கட் வீரரை ரசிப்பவனாக எனது ஆதங்கத்தை கொட்டித் தீர்பதற்கு எழுதுகிறேன். இது குறித்து உங்களிடையே மாற்றுக் கருத்துக்கள் இருப்பதில் தவறில்லை. இது, ஒரு கிரிக்கட் வீரரின் ரசிகனாக  எனது கோணத்திலான பார்வை மட்டுமே! யாரையும் புண்படுத்தும் நோக்கமோ, எனது கருத்தை வலிந்து திணிக்கும் எண்ணமோ எனக்கு அறவே இல்லை என்பதை ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டி அடி உதை விழுவதில் இருந்து தப்பித்துகொள்ள ஆசைப் படுகிறேன்.

 இது கிரிக்கட் பதிவாக இருக்கின்ற போதும் , ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடு என்கிற படியால் புள்ளி விபரங்களை அள்ளிவிட்டு இதை ஒரு கிரிக்கட் ஆய்வு பதிவு போல் ஆகிவிடாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாய் இருக்கிறேன். ஒரு அடிப்படை ரசிகனின் ஆதங்கங்களுக்கு புள்ளிவிபரங்கள் அவசியமற்றவை என்பது எனது தனிப்பட்ட கருத்து.

ஆனாலும் தேவைப்படும் இடங்களில் சில புள்ளிவிபரங்களையும் தந்திருக்கிறேன். ஒரு சாதனை தனி நபரின் சாதனைகளை பட்டியலிட புள்ளிவிபரங்களுக்கு தேவையும் இருக்கிறது.




சனத் ஜயசூர்யா! ஒரு இமாலய சாதனையாளன். இந்த காலத்தில் அடித்து ஆடுவதற்கு எத்தனை கொம்பன்கள் வந்த போதிலும் அத்தனைக்கும் அப்பன் எங்கள் சனத் தான் என்பேன்.


ஓய்வை அறிவித்துவிட்டு சனத் இலங்கை கிரிக்கட் அணியை காலி செய்துவிட்ட பிறகு, எந்த பதிவரோ அல்லது கிரிக்கட் அவதானியோ சனத்தை தேடாத இந்த நேரத்தில் இந்த பதிவின் அவசியம் என்ன என்று தானே பார்கிறீர்கள்?  காரணம் இருக்கு அண்ணாத்த.



ஓய்வுக்கு பின்னரும் ஆடுகிறேன் பேர்வழி என்று தான் சேர்த்துவைத்த நற்பெயர் கெட்டுவிடும்படி (ஏற்கனவே அண்ணன் அடித்த கூத்தில் பாதி கெட்டு போயாச்சு)ஆடிகிற ஆட்டம் தான் ஒரு பாமர ரசிகனான என்னை பத பதைக்க வைகின்றது.

இலங்கை அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமாகி, ஆரம்பத்தில் துடுப்பாட்ட வரிசையில் ஏழாம் நிலை வீரராக களமிறங்கி , தனது அதிரடி பாணியால் எதிரணியின் வயிறுகளையும், கிரிக்கட் ரசிகர்களின் மனங்களையும் ஒரு கலக்கு கலக்கியவர். தொடர்ச்சியான அதிரடிகளால் , இவரை ஒரு சிறந்த ஆரம்ப வீரர் என இனங்கண்டு கொண்ட இலங்கை கிரிக்கட் அணித் தலமை ஆரம்ப துடுப்பாட்டவீரராக களமிறக்கி அழகு பார்த்தது.

ஆரம்ப வீராராக பரிமாணம் கண்ட பிறகு கிரிக்கட் உலகின் அசைக்கமுடியாத ஒரு சக்தியாக வலம் வந்தார் சனத். துடுப்பாட்டம் பந்துவீச்சு என சகல துறைகளிலும் சாதனை நாயகனானார் சனத். இலங்கை 1996இல் உலகக்கிண்ணம் வென்றதில் சனத்தின் அதிரடிதான் அதி முக்கிய பங்குவகித்தது என்றால் மிகையாகாது. அந்த உலக கிண்ண தொடரின் தொடர் நாயகன் விருதும் வென்றார் சனத்.



அந்த உலகக் கிண்ண தொடருக்கு பின்னர் சனத் காட்டில் ஒரே அடை மழைதான் போங்கள்! ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமான அரைச்சதம் (17 பந்துகள்), அதிவேகமான சதம் (48 பந்துகள்) , அதிவேகமான 150 (96 பந்துகள்) என தனது அதிரடியால் கிரிக்கட் உலகின் பந்து வீச்சாளர்களை நிலை குலைய செய்தார் சனத். (அதி வேகமான சனத்தின் சதமடித்த சாதனை அதே போட்டியில் பாகிஸ்தானின் சகிட் அஃப்ரிடியால் முறியடிக்கப்பட்டது. அஃப்ரிடி 38 பந்துகளில் சதம் கடந்தார். அது போல அதி வேக 150 என்ற சனத்தின் சாதனை பின்னாளில் அவுஸ்ரேலியாவின் ஷேன் வொட்சனால் முறியடிக்கப்பட்டது) ஆனால் இன்னமும் அதி வேக அரைச் சதத்துக்கு சொந்தக்காரராக மிளிர்கிறார் சனத்.

இது தவிர ஏகப்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரராக மிளிர்கிறார் சனத். ஒரு நாள் கிரிக்கட் உலகில் 400 போட்டிகளை கடந்த முதல் வீரர் சனத்தே தான். அது போக உலகு கண்ட ஒரு சிறந்த சகல துறை வீரரும் சனத் தான் என்பேன். ஒரு நாள் போட்டிகளில் 14874 ஒட்டங்களும் 323 விக்கட்டுகளுமே இதற்கு சாட்சி. சச்சினுக்கு அடுத்த படியாக ஒரு நாள் கிரிக்கட் அரங்கில் அதிக பட்ச ஓட்டங்களை அடித்தவர் சனத் தான். 



டெஸ்ட் போட்டிகளில் அரு அணி இன்னிங்க்ஸ் ஒன்றில் பெற்றுக்கொண்ட அதி கூடிய ஓட்ட எண்ணிக்கையான 954 (1997இல்) ஓட்டங்களை இலங்கை அணி பெற்றுக்கொண்ட போது அந்த போட்டியில் 340 ஓட்டங்கலை பெற்றிருந்தார் சனத் (இதுவே சனத்தின் அதிகூடிய டெஸ்ட் பெறுபேறு ஆகும்). இந்த போடியில் ரொஷான் மகாநாமவுடன் இணைந்து டெஸ்ட் அரங்கில் அதிகூடிய  இணைப்பாட்டமான 576 ஓட்டங்கள் என்ற சாதனையை செய்தார். பின்னாளில் (2005இல்)  இந்த சாதனை சகபாடிகளான மகேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்காரவினால் முறியடிக்கப்பட்டது (624 ஓட்டங்கள்) .

டெஸ்ட் போட்டிகளில் 6973 ஓட்டங்களும் 98 விக்கட்டுகளும் சனத்தின் டெஸ்ட் ஆதிக்கத்தையே காட்டி நிற்கின்றது. 

இலங்கை அணியின் தலைவராக , ஆசிய பதினொருவர் அணியின் வீரராக , மும்பை இந்தியன்ஸ் அணிவீரராக, எத்தனையோ இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் இலங்கைபிராந்திய அணிகளின் வீரராக வலம் வந்தவர் எங்கள் சனத்.

1996 இல் இலங்கை உலக கிண்ணத்தை வென்ற பிறகு, இலங்கையின் அடி நுனி சந்து பொந்துகள் எல்லாம் கிரிக்கட் உள்நுழைய தொடங்கிவிட்ட பிறகு எமது வாய்களில் எல்லாம் உச்சரிக்கப்பட்ட பெயராக இருத்து என்றால் அது சனத்தின் பெயர் மட்டுமே! 

ஷம்போவை எடுத்து தலையில் தேய்த்து , தலை முடியை நெற்றி தெரிய பின்னோக்கி இழுத்துக் கொண்டு "என்னை பார்க்க ஜேசூர்யா போல இருக்கா?" என நான் மைதாங்களில் அலையுமளவிற்கும், வழமையாக பால் தேனீர் குடிப்பதால் அன்றொருநாள் மட்டும் தாய் கொடுத்த  பிளேன் டீயை குடிக்க மறுத்த என் நண்பனிடம் "டேய் ஜேசூரியாவும் பிளேன்டீ தான்டா குடிப்பான் " என்று சொல்லி அவனை ஏமாற்றி அவனை அவன் தாய் பிளேன்டீ குடிக்க பண்ணுமளவிற்கு நாங்கள் எல்லோரும் ஜெயசூர்யா பைத்தியமாகி இருந்தோம்.

எங்கள் ஊரிலும் , நாட்டிலும் எத்தனையோ ஜெயசூரியா பைத்தியங்கள் அலைவதற்கு தனது துடுப்பாட்டத்தின் மூலம் காரணமாகிவிட்டிருந்தார்.

இவரது அதிரடி பொறுக்க முடியாமல் , எப்படியாவது இவரை மைதானத்தை விட்டு வெளியேற்ற வேண்டுமென்று "கருங்குரங்கு, தேவாங்கு" என்றெல்லாம் சனத்தை வெள்ளயர்கள் திட்டிய சம்பவங்களையும் கிரிக்கட் உலகு கண்டது. பந்து வீச்சு கைகொடுக்காத பட்சத்தில் , எதிரியை மன உளைச்சலுக்கு ஆளாக்கி ஆட்டமிழக்க வைப்பது அன்றிலிருந்து இன்று வரை மேற்குலக கிரிக்கட் அணிகள் கொண்டிருக்கும் மோசமான தந்திரோபாயம்.



ஒரு காலத்தில் கிரிக்கட் உலகின் ஜாம்பவான்கள் என்று சொல்லபட்ட அத்தனை பந்துவீச்சாளர்களும் பந்து வீச பயந்த ஒரு துடுப்பாட வீரர் இருந்தாரென்றால்  அது சாட் சாத் எங்கள் சனத் தான். இதை அன்டெர்சன் , நியூசிலாந்தின் காரிஸ் , இந்தியாவின் வெங்கடேஷ் பிரஷாந்த் போன்றோரிடம் கேட்டால் நன்றாகவே சொல்வார்கள். இந்த பந்து வீச்சாளர்களை நிறைய போடிகளில் துவைத்து காயப் போட்டவர் சனத்."மச்சி எப்பிடி போட்டாலும் அடிக்கிறான் மச்சி .." என்று  பந்து வீச்சாளர்கள் புலம்பியதும் உண்டு. ஆனால் அது ஒரு காலம் , அழகிய காலம் காலம்..........

இந்த "ஒரு காலத்தில்....... " என்ற வரிகளோடுதான் ஆரம்பமாகிறது எனது ஆதங்கம். என்னைக் கேட்டால் 1996 களில் ஆரம்பித்த சனத்தின் அதிரடியும் அவர் மீதான பந்துவீச்சாளர்களின் பயமும் 2008 வரை தான் நீடித்தது என்பேன். அல்லது இன்னும் கொஞ்சம் அதிகரித்து கூறினால் முதலாவது ஜ.பி.எல் போட்டிகள் வரை சனத்தின் ஆதிக்கம் தொடர்ந்தது எனலாம். இந்த முதலாவது ஜ.பி.எல் தொடரில் தான் இறுதியாக சனத்தின் அதிரடியில் ஏதோ பாதியாவது பார்க்க கிடைத்தது எனலாம். சென்னை சுப்பெர் கிங்க்ஸ்கு எதிரான போட்டியில் அவர் சதம் விளாசியபோது சென்னையின் பந்துவீச்சு பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத் அதே பழைய மரண பயத்துடன் போட்டியை பார்த்துக்கொண்டிருந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. (இந்த சதம் விளாசலில் தன் சக இலங்கை கிரிக்கட் வீரர் சாமர கபுகெதரவின் ஓவரில் நான்கு சிக்சர்கள் விளாசியதும் அடக்கம்).

அந்த போட்டிக்கு பின்பு சனத்தின் அதிரடியையோ, பந்து வீச்சாலர்கள் மத்தியில் சனத் பற்றிய பயத்தையோ நான் பார்க்கவே இல்லை. சனத் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் காமடி பீஸ் ஆகிப்போனார். அதற்கு பல காரணங்கள்.



சாதரணமாக் உடல் வல்லமையை நம்பி ஆடப்படும் ஒரு விளையாட்டை விளையாடும் ஒரு விளையாட்டு வீரரது உடல் நிலை சராசரியாக 35 - 40 வயதுக்குள் தனது வல்லமையை இழக்க ஆரம்பித்துவிடும். இது சாதாரண விஞ்ஞானம். இதனாலேயே அநேகமான உதைபந்தாட்ட வீரர்கள், அல்லது கிரிக்கட் வீரர்கள் தங்களது முப்பத்தைந்தாவது அகவை நிறைவடைந்ததும் ஓய்வு குறித்து சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள். கிரிக்கட்டில் ஓய்வுக்காலம் என்பது இப்போது சராசரியாக 36,37 வயதாக இருக்கின்றது.

இந்த 37 வயதுக்கு பின்னர் கிரிக்கட் ஆடுவது என்பது சற்று குதிரைக் கொம்பான விசயம் தான். வயதேற்றம் , உடல் தளர்ச்சியால் உடல் சரிவர ஒத்துழைக்காது. கிரிக்கட் என்பது சரியான உடல் தகுதி, வலிமை என்பனவற்றோடு ஆடப்படுவது. மற்றும் கிரிக்கட் ஆடுவதற்கு அதி முக்கியமாக "டைமிங்" அவசியம். எகிறிவரும் வேகப்பந்துகளையும் , நொடியில் குழப்பிவிடும் சுழல் பந்துகளையும் சந்தித்து லாவகமாக ஆடுவதற்கு "டைமிங்" மிகவும் அவசியம். இந்த டைமிங்குக்கு உடல் தகுதி , வலிமை அத்தியாவசியமானது. இந்த வலிமை மற்றும் உடல் தகுதிகளை 37+ வயதில் எதிர் பார்க்க முடியாது.

உங்களது மனமும், ஆட்ட நுணுக்கமும் உங்களோடு கூடவே இருந்தாலும் இந்த "டைமிங்+உடல் தகுதி" இலாவிட்டால் சாலமன் பாப்பையா பாணியில் "வயசாச்சில்லே......." என்று கூறிவிட்டு போய்கொண்டே இருக்க வேண்டியது தான். டிராவிட் போன்று மட்டயடித்து ஆடும் வீரருக்கே நிலமை இதுவென்றால், அதிரடியையே அடையாளமாக கொண்ட சனத்திற்கு, உடல் தகுதியின்றி ஒரு ஆணியையும் புடுங்க முடியாதென்பது அவருக்கு ஆரம்பத்தில் விளங்காமல் போனது பெரும் துயரமே! 

 மனோதிடமும், தொடர்ந்து கிரிக்கட் ஆடும் ஆசையும் கொண்ட சச்சினுக்கு இப்போது நேரும் துயரம் கூட இந்த "டைமிங்" பிரச்சினை தான். இந்த "டைமிங்கை" மனிதர் தொலைத்து ரொம்ப நாள் ஆயிற்று. இது குறித்து இறுதியில் சற்று விரிவாக பார்ப்போம். இப்போது சனத்தின் கதைக்கு வருவோம்...



சனத் தனது 38வது வயதுக்கு பின்னர் (2008 க்கு பின்னர்) கிரிக்கட் ஆடுவதற்கு தீர்மானித்தது தான் அவரது நற்பெயருக்கு களங்கம் கொண்டுவந்து சேர்த்தது என்பேன்.

எந்த பெரிய வீரராக இருந்தாலும் , எவளவு சாதனை செய்திருந்தாலும் ஒரு கட்டத்தில் ஓய்வு பெறுவதென்பது காலத்தின் கட்டாயமாகிறது. நல்ல நிலையில் ஆடிக்கொண்டிருந்தாலும் , நல்ல ஃபொர்மில் இருந்தாலும் , அடுத்து ஏறப்போகின்ற வயதையும் அதனால் உடலில் ஏற்பட போகும் மாற்றத்தால் ஆட்டத்தில் நிகழ போகிற இறங்கு நிலைகளையும் கருத்தில் கொண்டு தக்க தருணத்தில் ஓய்வை அறிவிப்பதே ஒரு சிறந்த வீரனின் சிறந்த முடிவாக இருக்க முடியும்.

இன்னும் கொஞ்சம் களத்தில் இருந்து ஆட மாட்டானா? அல்லது "அட இவன் ஏன் இப்போ ஓய்வை அறிவித்தான். நால்லா தானே ஆடிகொண்டு இருந்தான் " என மக்கள் பேசும் ஒரு ஓய்வு தான் ஒரு வீரனின்  சிறந்ததொரு ஓய்வாக இருக்க முடியும். இவ்வாறான ஓய்வைத் தான் முரளி தரனும், மத்யூ கெய்டனும்  அறிவித்தார்கள்.

இந்த இருவராலும் இன்னமும் குறைந்தது ஒரு வருட காலமேனும் விளையாடியிருக்க முடியுமென்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அவர்களது ஃபோர்ம் மற்றும் உடல் தகுதி நல்ல நிலையில் தான் இருந்தது. கெய்டன் பந்துவீச்சாளர்களையும் முரளி துடுப்பாட்ட வீரர்களையும் அச்சுறுத்தும் நிலையில் தாங்கள் இருக்கும் போதே தங்களது ஓய்வை அறிவித்து கிரிக்கட் உலகில்  தங்களது பெயரினை பாதுகாத்து கொண்டார்கள்.

சனத் அந்த வரிசையில் இடம் பெற்றிருந்தால் அவரது புகழ் எப்போதும் மங்காமல் இருந்திருக்கும், அவர் எப்போது பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமான ஒருவராகவே கணிக்கப்பட்டு இருப்பார். 


ஆனால் சனத் சேர்ந்தது "எப்படா இவனுகள் வெளிய போவானுகள்?" என்று எல்ல தரப்பும் புலம்பி, வெளியேற்றப்பட்ட ஜாவிட் மியாண்டாட், கங்குலி, அனில் கும்ளே, அர்ஜுனா ரனதுங்க ஆகியோரது வரிசையில்.

கிரிக்கட் உலகில் பெரும் ஜாம்பவன்களாக திகழ்ந்து சில பல காரணங்களால் அணியில் இருந்து வெளியேறாமல் தொங்கிகொண்டிருந்து பின்னர் பல நிர்பந்தங்களுக்கு பின்னர் ஓய்வை அறிவித்தவர்கள் (பச்சையாக சொல்லப்போனால் வெளியேற்றப் பட்டவர்கள்) வரிசையில் தான் சனத்  சேர்ந்தார். 






2006 ஏப்ரலில் இல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்ற சனத் அப்படியே போயிருக்கலாம். மறுபடியும் மே மாசத்தில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் களமிறங்கியது அவரது அடி பொடிகளான எங்களுக்கு சந்தோஷமாக இருந்த போதிலும் கிரிக்கட் உலகில் அது ஒரு கேலிக்குரிய விடயமாகவே பார்கப்பட்டது.

அந்த தொடரில் அவரால் சரியாக ஆடக்கூட முடியவில்லை . கடைசியாக 2007 இல் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அண்டர்சனுக்கு போட்டு விளாசிவிட்டு டெஸ்ட் அரங்கில் இருந்து நிஜமாகவே ஓய்வு பெற்றார் சனத். இந்த அவமானம் தேவயா?  என்று முணுமுணுத்தது கிரிக்கட் உலகம்.



2007 உலக கிண்ண போட்டிகளுடனாவது அவர் ஒருநாள் அரங்குக்கு குட் பாய் சொல்லி இருக்கலாம். இறுதி போட்டியில் சிறந்ததொரு ஆட்டம் ஆடிவிட்டு ஓய்வு பெற்றார் சனத் என்று ஊர் சொல்லி இருக்கும். ஆனால் மனுசன் விட்டாரா? தான் சேர்த்துவைத்த நல்ல பெயர் கெடும்வரைக்கும் ஓயமாட்டேன் என சபதம் எடுத்தவர் போல அடித்து துரத்தும் வரைக்கும் அணியில் தொங்கிக் கொண்டே இருந்தர். 

2011 உலக கிண்ண போட்டிகளுக்கு முன்னரான இங்கிலாந்து தொடரில் அப்போதைய அணி தலைவர் சங்கக்கார , கிட்டத்தட்ட சனத்தை பகிரங்கமாகவே விமர்சிக்கும் அளவுக்கு அண்ணனின் தொங்கல் இருந்தது.

2010இல் அரசியலுக்கு போனார். அப்போதாவது கிரிக்கட்டை விடுவாரா என்று பார்த்தால் , தனது அரசியல் பலத்தை கொண்டு பின் கதவு வழியாக அணிக்குள் நிழையவே எத்தனித்தார். 2011 உலக கிண்ண அணியுஇல் இந்த இடம் பிடிப்பார் அந்தா இடம் பிடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளை அரவிந்தாவின் அணித்தேர்வு தலமை பொறுப்பு அதற்கு ஆப்பு வைத்தது.(உண்மையில் நான் கூட சனத்தின் உலககிண்ண வருகையை எதிர் பார்த்து தான் காத்திருந்தேன். என்ன செய்வது விமர்சனம் என்பது வேறு, ரசனை என்பது வேறு.

இறுதியில் உலககிண்ண தொடருக்கு பின்னர் இடம்பெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் , T20 தொடரிலும்  ஆடி தனது 22 வருட கிரிக்கட் வாழ்கையை முடித்துகொண்டது இந்த கிழசிங்கம். 

சரி அப்பாடா! இனியாவது இருக்கும் மானத்தை காப்பாற்றுவார் என்று பார்த்தால், இப்போது பங்களாதேஷ் லீக் ஆடுகிறேன் பேர்வழி என்று கிளம்பி இருக்கிறார். ஓய்வுக்கு பின்னர் உள்ளூர் போட்டிகலில் ஆடுவது கூட பரவாயில்லை. சர்வதேச கவனம் அதிகம் படாத இடம். அடிவாங்கினாலும் அசிங்க பட்டாலும் நம்மோடு போய் விடும். ஆனால் இது போன்ற சர்வதேச கண்கள் மொய்த்துள்ள இடத்தில் அடிபடுவதென்பது , நீங்கள் சேர்த்துவைத்த அத்தனை நற்பெயரையும் கெடுத்துவிடும் சனத் சார்!



"நான் பணத்துக்காக ஆடவில்லை. எனது சுய விருப்பத்துக்காக ஆடுகிறேன்" என்று சொல்லி இருந்தீர்கள்.கிரிக்கட் ஆசை என்பது சரி தான். ஆனால் அதை உள்ளூரில் ஆடலாமே! ஏனெனில் சர்வதேச கிரிக்கட் உலகுக்கு உங்களை ஒரு சினம் கொண்ட சிங்கமாகவே மட்டுமே தெரியும். நீங்கள் இவ்வாறு பல்லும் விழுந்து, நகமும் கழன்ற பின்னர் வேட்டைக்கு கிளம்பி இருப்பது ஆபத்து சார்! 

பந்துவீச்சின் ஜாம்பவான்களையெல்லாம் வேட்டையாடிய உங்களை, நேற்று பொந்துக்குள் இருந்து வந்த நரிகள் எல்லாம் கடித்து , பிராண்டி காயப்படுத்துவது தெரியவில்லையா?

முன்பெல்லாம் சனத்துக்கு ஓஃப் திசையில் விக்கட்டுக்கு சற்று வெளியாக பவுண்ஸ் ஆகி பந்து வந்தால் தேர்ட் மேன் பகுதியில் அல்லது கவர் பொயிண்ட் பகுதில் சிக்ஸ் பறக்கும். அதுபோல் லெக் திசையில் ஓவெர் பிச் ஆக பந்து விழுந்தால் மிட் ஓன் பகுதியில் பந்து பவிலியன் கூரை தொடும்.

ஆனால் இன்று நடப்பதோ தலை கீழ் , பந்து வீச்சாளர்கலெல்லாம் அப்படித்தான் (வேண்டும் என்றே) பந்தை வீசுகிறார்கள். சனத்தும் அதே பாணியில் அடிக்கிறார், ஆனால் பந்து மட்டும் அந்த 15 யார் தூரத்தில் மேலெழும்பி சனத்தின் விக்கட் பறக்கிறது. இது காட்டுவது யாதெனில் சனத்தின் 'டைமிங்கும்" அவரது உடல் தகுதியும் முற்றாக இல்லை என்பதையே! 

சனத்துக்கு ஒரு ரசிகனாக சொல்லிக்கொள்ள விரும்புவது! நீங்கள் சிங்கம் தான், இன்னமும் உங்கள் கர்ச்சனையை எந்த பந்து வீச்சாளரும் மறந்துவிடவில்லை! ஆனால் பல் விழுந்த நகம் உடைந்த சிங்கம் வேட்டையாட முடியாதென்பது தான் காட்டின் விதி. நரிகளால் பிராண்டப்பட்டு அவமானத்துடன் காட்டில் அலைந்து இறப்பதை விட , வீரமுடன் வேட்டையாடி ஏற்கனவே சேர்த்துவைத்த இறைச்சிகளை உண்டு ஓய்வெடுப்பதே சிங்கத்துகு அழகு. அதுவே கௌரவமும் கூட!

இந்த கிரிக்கட் காட்டில் இன்னுமொரு கிரிக்கட் கிழம் சிங்கம் ஒன்று கூட தனது நூறாவது வேட்டைக்காய் அலைந்து கொண்டிருக்கிறது.

சச்சின் ! சாதனைகளுக்கு சொந்தகாரர். ஆனால் இந்த சதத்தில் சதமடிக்கிறேன் என்று சறுக்குகிறார்.சச்சினுக்கும் அவரது சரியான "டைமிங்" அவரைவிட்டு போய் ரொம்ப நாளாச்சு. அதனால் தான் ஒரு காலத்தில் சச்சினை ஆட்டமிழக்கவைக்க முரளிதரனும், ஷேர்ன் வோர்ன்னும், மெக்ராத்தும் தேவைப்பட்ட இடத்தில் இன்று நேற்று முளைத்த கல்ஃபின்காசும், ஸுவார்ட் புரோர்ட்டும்,பீட்டர் சிடிலும் , டோகர்ட்டியும் சச்சினை உண்டு இல்லை என பண்ணினார்கள்.(கடந்த இங்கிலாந்து அவுஸ்ரேலியா தொடர்கள் உதாரணம்)

சச்சினை நேசித்த பல கிரிக்கட் அவதானிகளே அவரது ஓய்வுக்கான அவசியம் குறித்து அறிக்கைகள் வெளியிட ஆரம்பித்துள்ள நிலையில் சச்சின் ஒரு நாள் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதே  அவரது புகழுக்கு இழுக்கிலாததாக இருக்கும். 

உஷாரா இருந்துக்கோ மச்சி....


சச்சின் கடைசியாக சதமடித்து ஒரு வருடமும் ஒரு வாரமும் ஆகிவிட்ட நிலையில் ஒருவேளை அடுத்து பாகிஸ்தானுடன் ஆசிய கோப்பையில் ஆடும் போது தனது 100வது சதத்தை அடித்துவிட்டால் , ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து "யாஆஆஆஆஆ கூஊஊஊஊஊ.. சச்சின் சதமடித்து விட்டார் " என்பதாக  இருக்காது. மாறாக 'அப்பாடா ஒரு வழியாக அடிச்சிற்றாரப்பா..." என்பதாகவே இருக்கும்.

இந்த வகை கருத்துக்கள் ஒரு புகழ் கொண்ட வீரனுக்கு ஆரோகியமான கருதுக்களாக இருக்காது. சச்சின் இந்த 100வது சதத்தை ஒரு வருடத்துக்கு முன்பே அடித்து இருந்தால் அதன் கனாகனமே வேறு, ஆனால் இனி அவர் அடித்தால் அது ரசிகர்களை ஒரு நிம்மதி பெருமூச்சு விடவைக்குமே ஒழிய அத்தனை உற்சாக படுத்துமா என்பது கேள்விக்குறியே!

இந்த சச்சினின் 100வது சதம் மீதான அழுத்தம் அவுஸ்ரேலிய , இங்கிலாந்து சுற்றுபயணங்களில் இந்திய வீரர்களது மனதில் எதிர்மரையான அழுத்தங்களை ஏற்படுத்தி ஒரு வகையில் அவர்களது தொடர் தோல்விக்கு காரணமாக இருந்தது என்பது பலர் ஏற்றுக்கொண்ட உண்மை.

தற்போதைய சச்சினை விட ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக ஆடக்கூடிய வீரர்களை இந்தியா கொண்டிருக்கிறது என்பது வெளிப்படை. வெறும் இரண்டு கோடி பேர் உள்ள இலங்கையில் சனத்தின் இடத்கிற்கு இத்தனை  போட்டி எழுந்திருக்கும் போது நூற்றியிருபது கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா பற்றி சச்சின் யோசிப்பது அவசியம்.

சச்சின் சிறந்த ஒரு டெஸ்ட் வீரர். அவர் தனது நுறாவது சதத்தை டெஸ்டில் சாதிக்க முயற்சிப்பது அவருக்கும் இளம் தலைமுறைக்கும் நல்லது.

இல்லையென்றால் அவரும் அனில் கும்ளே, கங்குலி, ஜயசுரியா , கபில் தேவ், மியாண்டாட் வரிசையில் சேரும் நாள் தூரத்தில் இல்லை.


அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் அப்பா....

2 comments:

  1. முற்றிலும் உண்மை .. IPL லில் கங்குலி ஆட வருவது இப்பவே கண்ண கட்டுது.. அவரு டக் அவுட் ஆனா எனக்கு குறஞ்சது 10 பேராவது போன் பண்ணி நக்கல் உடுவானுங்க, மச்சி உங்க ஆளு டக் ஆமே !!".. அதுக்கேத்த மாதிரி நம்ம ஆளும் டக் அவுட் ஆகாம ஒரு சிரியஷும் விளையாடமாட்டார்.



    IPL மாட்சுல கங்குலி கால்ல விழுந்த ரசிகரப்பாத்து பொறாமப் பட்டவன் நான்.. ஆனா இந்த வயசுல சரியா விளையாடாம MATCH WINNER ஆ ஜொலிக்காம இருக்கறது வருத்தமே !!



    அப்புறம் உங்க பதிவுல சின்ன திருத்தம்.. கங்குலி ரிட்டயர்ட் ஆகா சொல்லி பலமுறை வற்புறுத்தப் பட்டாரே தவிர, ரிட்டயர்ட் ஆகும் வரை சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். அவரின் கடைசி டெஸ்டில் அவர் 50 ஐ கடந்தார் என்பது குறிப்பிடவேண்டியது.. சிறப்பாக விளையாடும்போதுதான் ரிட்டைர்மென்ட் அறிவித்தார்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது மேலான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. எமக்கு பிடித்தவர்கள் சொதப்பும் போது எமக்கு சங்கடங்களும் , கடுப்பும் ஏற்படுவது இயல்பு தான்.

      நான் ஒன்றும் கங்குலியை பற்றி ஒன்றும் தப்பாக சொல்லவில்லை. அவரது ஷொட்டுகாகவே அவரை ரசித்தவன். நான் சொல்ல்வந்தது என்னவெனில் முறையான நேரத்தில் ஓய்வு பெறாமல் இழுத்தடித்துக் கொண்டு இருந்தவர்களை பற்றிதான் சொன்னேன். ஏன் ஜெயசூரியா கூட தனது கடைசி டெஸ்டில் 78 ஓட்டங்கள் பெற்றார். அண்டர்சன் வீசிய ஒரு ஓவரில் ஆறு பவுண்டரிகள் என்ற உகக சாதனையோடுதான் டெஸ்ட் அரங்கில் இருந்து சாதனையோடு தான் விடைபெற்றார்.

      2001 - 2002 காலப்பகுதியோடு ஒப்பிடுகையில் டெஸ்ட் அரங்கில் கங்குலியின் இறுதிநாட்கள் அவளவு ஒன்றும் மோசமாக இருக்கவில்லை தான். உடன்படுகிறேன்!

      ஆக நான் இவர்களெல்லாம் தரமான வீரர்கள் இல்லை என்று சொல்லவில்லை, தகுந்த நேர முடிவுகளை தள்ளிப் போட்டவர்கள் என்றே சொன்னேன்.

      உங்கள் மேலான ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்தும் சந்திப்போம்.

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...