உதைபந்து

Saturday, June 30, 2012

முத்து முத்து பேச்சி!


அவள் தூரே இருந்தாலும் மாமன் மீது காதல் கொண்ட பருவக்கிளி, இவன் காதல் இருந்தாலும் சொல்லத்தெரியாமல் வெட்கத்தால் கூசும் முரட்டு மாமன்! நடக்கிறது ஒரு அன்புப்போர்! 

புதுக்கவிதையும் , கிராமத்து வாசனை கவிதையுமாய் கலந்து தந்திருக்கிறேன். ( கவிதையா? # அப்பிடித்தான் நெனைக்கிறேன்.)





அன்றொரு நாள்
நள்ளிரவைக் கடந்து
நாளொன்றை பிரசவிக்க
மௌனவானம் முனகிக்கொண்டிருந்த நேரத்தில்
என் செல்போனில் சிணுங்கினாய்!

கொவ்வையாய் பழுத்திருந்த உன் உதடுவழி வார்த்தைகள்
தழுத்து தழுத்து தவழ்கின்றன!

"காலை விடிகையில்
உன் முகச்சாவி கொண்டு
என் கண்கள் திறகிறேன்!
இரவு உறங்கப்போகையில்
உன் நினைவுகள் எனக்குத் தந்த
நீங்கா பரிசுகளை நித்தலமாய்
என் பெட்டக மனதுக்குள் பூட்டிவைத்து நித்திரையாகிறேன்!

காலையொன்று பிறந்து
பிற்பகலில் பூப்பெய்தி
மாலையில் மணம் சூட்டி
ரத்திரியாய் உறங்கும் வரைக்கும்
உன் ஞாபகங்களின் கைகள் பிடித்து தான்
நீண்ட வழி நடக்கிறேன்!

"நீ எனை பிரிந்த இந்த சில நரக நாட்களுக்குள்
நாள் முழுதும் உன் ஞாபகம் தான் அசுரனே!
குளிக்கும் போதும்.....
தலை துவட்டும் போதும்.....
உன் முத்த எச்சில்
என் முழுஅழகை நான் காணும் போதும்..........
சோதியாய்..... சொப்பனமாய்......
என் கற்பனைக்குள் நிற்பவனே!
கணப்பொழுதேனும் என்
ஞாபகச்சில்வண்டு
காதல் செல்லரித்துப்போன உன் மரத்த மனதில்
சின்னதாயேனும் சிறகடித்துப்போனதுண்டோ.....?"


கேட்டாய் ! கேட்டாய்! கேள்விகளாய் கேட்டாய்!
செத்துவிட போக்றேன் என்று
என் செல் பேசி அணு அணுவாய் அலறும் வரை
கறையேதும் படியா என் கற்கண்டே
கேள்வியாய் கேட்டாய்!                    

மின்னேதும் இல்லாமல் செல்பேசி சாகிறதென்றேன்,
"பேசப்பிடிக்கா உனக்கு
பொய்யாய் ஒரு சாட்டு!
ரோமாய் நான் எரிய
நீயேன் நீரோவாய் பிடில் வாசிக்கிறாய்?" என்று
உன் வாழைமடல் விரல் வலிக்க
உன் தொலைபேசியின் "துண்டி" பொத்தான் அழுத்தி
அர்த்த ராத்திரியில் என்னை தண்டித்தாய்!

காற்று புக இடம் கொடாமல்
கவிதையாய் என்னை
கடிந்து கொண்டவளே!
கடைசிவரை நான் உனக்கு
முழுசா பதில் தர‌
மூணு செக்கன் ஒதுக்கலியே!

இதயத்தின் நாலு அறையும்
நெறஞ்சிருக்கும் உனையும் தாண்டி
சோணவறை சுவர்களை
சுரண்டிப் பார்க்கிறேன்!

தூங்கி எந்திரிச்சும்......
தூங்காம சாஞ்சிருந்தும்.....
பிஞ்சு பாதம் மோதி
கொஞ்சி கொஞ்சி நடக்கும் போதும்……
சேறில்லா கொளத்தில் பூத்த
என் செந்தாமரை வதனக்காரி
நாளும் பொழுதும் என்னையே நெனைக்கிறாளாம்!

வீட்டோடு கெடந்துருகி
பாட்டெழுதும் பாவி மாமன்
ரோட்டோரம் ரோந்து போகும்
கோட்டானுக்கும் குருவிக்கும்
அருவியாய் பெய்யும் மவள்
அருங்கத ஆயிரம் சொல்லி
ஆனந்தப்படும் சங்கதி சொல்ல
சந்தர்ப்பம் ஏதும் நீ
தரலியே தாயி!

விடிஞ்சா பொழுதுபட்டா
வீடெல்லாம் நெறஞ்சிருக்கா...!
இரும்பு நெஞ்சுக்குள்ளும்
கரும்பு நட்டும் சேதி தாறா....!
கம்மலும் வளவியுமாய்
உலவு வரும் எளயவளே!
(ன்) தூக்கப் பானைக்குள்
நீ கல் விட்டு எறிஞ்ச கத
இப்போ சொல்லி தீராதம்மா!

சொட்டமுதம் சிந்தும் வாயில்
சொக்குபொடி போடும் தாயி!
சொன்னது போல்! நீ சொன்னது போல்!
மாமன் மனசு பாழும் கெணறு தாயி!

சத்தியமா நாள்முழுதும்
உன்னய நெனச்சேன்னு
பொய்யாய் ஒரு பொரளி பண்ண‌
மனசுக்கு சொல்லிப்பாத்தேன்!
பிஞ்சுப் புள்ள நீயி
நெறஞ்சிருக்கும் நெஞ்சு தாயி
அதனால உள்ளுக்குள்
வஞ்சம் வந்து சேருதில்ல!

நொடி வெடிக்கும் நேரமெல்லாம்
புழுதி மவன் பொகழ் நெனைக்கும்
உன் காதல் பெருசு தாயி!

நாள் பொறந்து நடைபழகி
ரா நெறஞ்சு சரிவதற்குள்
அப்பப்போ ஒன நெனைக்கும்
என் காதல் சிறுசு தாயி !



தூங்கி எந்திரிச்சி
தூணைப் பாக்கயிலே
கண்ணாடி பக்கமாய்
களவாய் நான் ஒட்டிவைத்த
உன் ஸ்டிக்கர் பொட்டை பாத்துக்குவேன்!

வாய்க்கா வரப்போரம்
பல் தேச்சி நடக்கயிலே
என் கூட நீ வந்து
வேப்பங்குச்சி வெட்டி தந்த
இனிப்பயெல்லாம் நெனச்சுக்குவேன்!

கம்மா கரயோரம்
மொகம் கழுவ போகயிலே
ஐயோ! பாம்பு என்னு
பொய்யாய் பொரளி பண்ணி
பொசுக்குன்னு ஓடிவிட்ட
பொன்மான நெனச்சு பாப்பேன்!

காத்தால ஆத்த
கஞ்சி ஊத்தயிலே
அன்றொருநாள் வீடு வந்து
ஆளரவம் சுத்தி பாத்து
மோர்மொளகா தாரேன்னு
மோகம் தந்து போன
மேனகைய நெனச்சுக்கிறேன்!

ஆடு மேய்க்க போகயிலும்
ஆடிக்காத்தாய் ஞாபகங்கள்!
அன்றொருநாள் ஆடு ஓட்டி
சரட்டுக்கல்லில் சம்மணமாய் உக்காந்து
சொகமாய் நான் சொர்க்கத்து காத்து வாங்க.......
அந்த வழி அப்பனுக்கு
கஞ்சி கொண்டு போன நீயி
காதலாகி கனிந்து விழ
கள்ளிப் பொதர் மறைவில் நீயும் நானும்
அடிச்ச கூத்த நெனச்சுக்குவேன்!

ஆடு மேச்சு திரும்புகையில்
ஆத்தாடி (ன்) வீடு!
காத்தாடி போல
சொழலுதம்மா ஞாபகங்கள்!

கள்ளிப்பொதர் மறைவில்
காதல் செஞ்ச அப்புறமா,
தெருவழி வந்த என்ன
குறுகுறுன்னு மொறச்சுப் பாத்து
"முத்தம் போடத்தெரியா மொரட்டு மாமான்னு"
தடிச்சு போன ஒதடு பிதுக்கி
ஒத்த கையால் இழுத்து பாத்து
ரத்த தடம் சோதிச்சு
என் மார்பில் குத்துவதாய்
உன் வீட்டு தேக்கு தூணில் குத்தியது
தெனம் தெனம் உன் வீடு
கடந்து நான் போகயில
செல்லமாய் இன்னும் கூட
வலிக்கவே செய்யுதடி!

ராத்திரியானாலே ஒன்னோட
ராகம் தான் தாயி!
ஆத்தாக்கு தெரியாம
திருவிழா அன்னிக்கு
திருட்டுத்தனமா வீடு வந்து
பொரண்டு கெடந்த என எழுப்பி
போர்வைக்குள் புகுந்து
நித்தியிலே நீறும்....
வாயிலே வெல்லமுமாய்...
பொட்டுன்னு போட்டுவிட்டு
சட்டுன்னு மறஞ்சியே.......
கரஞ்சிச்சா.....?  கரஞ்சிச்சா......?
அந்த வெல்லம் தான் கரஞ்சிச்சா?
அடிமனசு ஆழத்தில
இன்னமும் கெடந்து இனிக்குதடி!

இத்தனையு ஒனக்கு சொல்லி
செல்லமாய் சிரிகணும் என்னு
கோடி மொற நெனச்சிருப்பேன்!
பேசவந்த நேரம் எல்லாம்
போக்கத்த மாமனுக்கு
சீக்கு வந்த கோழியாட்டம்
வெக்கம் வந்து விக்கிடறென்!

மொரட்டு சீவன் என்னு
நீ அறிஞ்ச (ன்) மாமன்
பலாப்பழ பயலு தாயி!
முள்ளு முள்ளா எத்தனையோ
மொரட்டுத்தனம் கெடந்தாலும்
உள்ளுக்குளே வெல்லச்சாறாய்
சேத்து வச்சு கெடப்பதெல்லாம்
நெனச்சாலே நாவூறும்
செல்லமே (ன்) நெனைப்பு தாயி!

ஆனாலும் ஒன்னு தாயி.....
நாள் பொறந்து நடைபழகி
ரா நெறஞ்சு சரிவதற்குள்
அப்பப்போ ஒன நெனைக்கும்
என் காதல் சிறுசு தாயி !


டிஸ்கி : எத்தனையோ கெட்ட பழக்கங்களுக்குள் எனக்கு இருக்கும் கெட்ட பழக்கம் கவிதை என்ற பெயரில் ஏதாவது கிறுக்கி வைத்து விடுவது. படிச்சுகிட்டு இவளோ தூரம் உயிரோட வந்திருக்கீங்கன்னா உங்களுக்கு ஆயுசு ரொம்ப கெட்டி தான். ஏதனாச்சும் கெட்ட வார்த்தயில திட்டணும் போல இருந்த ஒரு பிரச்சினையும் கிடையாது, பின்னூட்ட பெட்டியில் தாராளமாக திட்டி கொட்டிவிட்டு போகலாம்.

22 comments:

  1. "நொடி வெடிக்கும் நேரமெல்லாம்
    புழுதி மவன் பொகழ் நெனைக்கும்
    உன் காதல் பெருசு தாயி!

    நாள் பொறந்து நடைபழகி
    ரா நெறஞ்சு சரிவதற்குள்
    அப்பப்போ ஒன நெனைக்கும்
    என் காதல் சிறுசு தாயி !"

    நிஜமான குற்ற உணர்ச்சி மச்சி. உண்மைய சொல்லு நீ யாரை நினைச்சு எழுதினாய் என்று.

    ReplyDelete
    Replies
    1. காஜல் அகர்வாலை நெனச்சுத் தான் எழுதினேன்னு உண்மைய சொன்னா நீயி நம்பவா போற?

      Delete
  2. அருமையா செந்தமிழ்ல தொடங்கி நம் தமிழ்ல முடிச்சிருக்கிற சூப்பரோ சூப்பர்

    ReplyDelete
  3. அனுபவிக்காமல் இது போல எழுத இயலாது , நிச்சயம் குடுத்து வைத்த காதல் , வாழ்த்துக்கள் கிஷோர்

    ReplyDelete
    Replies
    1. என்னது அனுபவிச்சதா? எல்லாம் கரை புரண்டு ஓடுகின்ற கற்பனை வெள்ளமய்யா! அப்போ வைரமுத்து எழுதுற எல்லா கவிதையும் அவரு அனுபவிச்சதா? ( எலேய்! வைரமுத்தும் நீயும் ஒன்னாலே?) ஒரு கவிஞன் கற்பனையில் ஏதாவது எழுதிட கூடாதே! ஒடனே கிஷோகருக்கும் காஜல் அகர்வாலுக்கும் காதல்ன்னு பொரளிய கெளப்பிர வேண்டியது. சே..... பொல்லாத சமுதாயமப்பா....

      Delete
    2. வாழ்த்துக்கு ரொம்ப நன்றி நண்பா! என்ன ஒன்லைனான்னு கேட்டுட்டு ஓடினவன் தான் அப்புறம் ஆளையே காணமே!

      Delete
    3. //என்னது அனுபவிச்சதா? எல்லாம் கரை புரண்டு ஓடுகின்ற கற்பனை வெள்ளமய்யா!//

      எல்லா சமாச்சாரமும் ஞான் அறியும் சாரே

      Delete
    4. சாரே ! செத்தே சாத்ரேளா?

      Delete
    5. இந்தியா வாரும் சாத்துரேன்

      Delete
    6. ஐயையோ! அப்டீன்னா பிளான் கான்சல்!

      Delete
  4. ரொம்ப நல்ல இருக்கு நண்பா கவிதை.

    ReplyDelete
  5. தல.. வார்த்தைக்கு வார்த்தை பின்னி எடுக்கிறீங்க! ரொம்பவே அனுபவிச்சிருக்கீங்க போல..
    வட்டார சொற்பிரயோகங்கள்லாம் வாசனை தூக்குது.. விட்டா இன்னொரு கருவாச்சி காவியமே எழுதித் தள்ளிருவீங்க தம்பி!

    ReplyDelete
    Replies
    1. கருவாச்சி காவியம் எல்லாம் இப்போ எழுதுறதா இல்ல! நித்தியானந்தா ரஞ்சிதாவ வச்சி ஒரு "கவர்ச்சி காவியம் " எழுத பிளான் போட்டுக்கிட்டு இருக்கேன்.

      Delete
  6. எதுக்கும் சூதானமா இருந்துக்கோங்க தல!
    காஜல் அகர்வால்னு பொய் சொன்னா உன் கருவாச்சி அருவாளோட வந்துரப்போறா!

    # எங்களுக்கு.. தேவை.. உண்மை..
    நடந்தது என்ன???

    ReplyDelete
    Replies
    1. ஷோக்கா சொன்னீங்க தலைவா

      Delete
    2. என்ன ரெண்டு பேரும் சேந்து கலாய்க்கிறீங்களா? இப்போ என்ன உண்மைய சொல்லியாகணும் அவளவுதானே? என்னோட கருவாச்சி யாருன்னா சிம்ரன்.

      Delete
    3. இந்த vishayam சிம்ரன் purusanukku theriyuma ?

      Delete
    4. எல்லாம் ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கில ஓடுறது தான்!

      Delete
  7. படிச்சிட்டு அடுத்த வருசம் வர்ரேன்........

    ReplyDelete
    Replies
    1. என்ன தலைவா இப்போல்லாம் எழுதுறத வுட்டாச்சா? வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றிண்ணே!

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...