உதைபந்து

Monday, July 30, 2012

பெத்த மகளை விற்கும் அப்பன்கள்!



சில நாட்களுக்கு முன்னர் சொந்த வேலையாக வவுனியாவுக்கு போயிருந்தேன். மதிய உணவுக்கு பின்னர் பல்லு குத்திக்கொண்டே ஒரு மரநிழலில் எனது நண்பனின்  வரவுக்காய் காத்துக்கொண்டிருந்தேன். அந்த மரத்தையொட்டி ஒரு தனியார் மருத்துவமனை. மருத்துவமனை என்பதைவிட ஒரு பெரிய சைஸ் கிளினிக் என்பது பொருத்தமானதாக இருக்கும். அது அரச மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவரின் சொந்த கிளினிக் தான் என்பதை அந்த மருத்துவரின் பெயருக்கு பின்னாலிருந்த பட்டங்ளும், அவரது தொழில் முறைக்கான பதாகைகளும் காட்டிக்கொடுத்தன. பொது வைத்தியசாலையில் இருக்க வேண்டிய நேரத்தில் , தனது  பிரத்தியேக கிளினிக்கில் கல்லா கட்டிகொன்டிருந்தார் அந்த வைத்தியர். நமக்கு ஏன் அந்த விவகாரம் எல்லாம்? முதல்வன் அர்ஜுன் வந்து அவருக்கு சஸ்பெண்ட் ஃபக்ஸ் அனுப்புவார் தானே? நான் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்? மீண்டும் சுகமாய் பல்குத்த தொடங்கினேன்.நான் நின்ற இடத்திலிருந்து அந்த கிளினிக்கின் வரவேற்பறைக்கு பெரிய தூரம் கிடையாது, துப்பினால் எச்சில் விழும் தூரம் தான். ஆக என்ன சொல்ல வருகிறேன் என்றால் அந்த அறைக்குள் நடக்கும் அத்தனையும் எனக்கு அப்பட்டமாய் தெரிகிறது! 


 பாடசாலை முடிந்து அத்தனை பேரும் வீடு போய்விட்டதால் எனது பார்வையை வீதியில் இருந்து ஒவ்வொரு கடைகடையாக உலாவ விடுகிறேன். கடைசியில் அந்த கிளினிக்கில் எனது கண் ஸ்தம்பித்து நிற்கிறது. அழகி! அழகி! பேரழகி! நாலைந்து பதிவுகளில் இறக்கி வைத்தாலும் தீர்ந்து போகாத  பேரழகை சுமக்கும் அழகோ அழகி! பத்தொன்பதில் இருந்து இருபத்தொரு வயதுக்குள் ஊசலாடும் வயது. பின்னிக் கட்டிய தலைமுடி, நீளமாய் நீலமாய் ஒரு பாவாடை , அதன் வர்ணத்துக்கு பொருந்தும் ஒரு டீ-ஷேர்ட் , கழுத்தில் ஒரு ஒற்றைவடச் சங்கிலி கையில் ஒரு மோதிரம் கூடவே  ஒரு கடிகாரம், காலில் ஒரு தோல் செருப்பு! மொத்தமாய் அளந்து முடித்தேன். அத்தனையும் கச்சிதமாய் அவளுக்காகவே தயாரிக்கப்பட்டது போல் இருந்தது. 


ஒரு ஐந்தாறு நிமிடங்கள் ஒரு தலையாய் எனது பார்வைகள் நீண்டுகொண்டே இருந்தது. "அடச்சே!என்ன ரெஸ்போன்ஸே கிடைக்கல" என்று சலித்துக்கூட பார்வையை வேறு பக்கம் திருப்பிவிட முடியாத அழகி! நாகரீகம் மாறாத பவ்வியமான அழகாக இருந்தாள். குடும்ப குத்துவிளக்கு என்பார்களே ! அதே தான்!! நெற்றியில் ஒரு பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அந்த காயத்துக்காகத்தான் கிளினிக் வந்திருக்க வேண்டும். முதன் முறையாக விக்கிலீக்ஸ் சொல்லாமல் நானாக உண்மையை ஊகித்துக்கொண்டேன். சில கணங்கள் கடந்து திடீரென ஒரு ஒளி ! மின்னல் கீற்றாய் என் கண்ணை ஊடறுத்தது! அத்தனை பெரிய ஒரு சோதி பிரவாகம், ஒளி கீற்று! கண்களை கூசியது! என்ன ? அவளும் என்னை பார்க்கிறாளா ? அது தான் இந்த ஒளியியல் மாற்றமா?? கண்ணை ஊடறுத்த ஒளியை கைகளை வைத்து மறைத்துக்கொண்டே சுற்றிவர பார்க்கிறேன். புதிதாய் ஒரு பல்சர் பைக், எவனோ அருகில் நிறுத்தியிருக்கிறான், அந்த கண்ணாடியில் சூரிய ஒளி பட்டுத் தான் என் கண் கூசியிருக்கிறது. சினிமாத்தனங்கள் அந்த இடத்திலேயே பொய்த்துப் போக மீண்டும் அவள் இருந்த இடம் பார்க்கிறேன். இப்போது அவள் என்னை பார்த்துக்கொண்டிருந்தாள்.


மீண்டும் ஒளி! சுற்றிப் பார்க்கிறேன். ஆனால் அந்த பல்சர் இப்போது அங்கே இல்லை! தொடர்ந்து என் முகத்தை நானே கண்ணாடியில் பார்க்க பலமுறை யோசிப்பேன். அப்படியாகப்பட்ட "அழகன்" என்னை ஒரு பேரழகி பார்க்கிறாளா? கனவா ?நிஜமா ? என்று அறிய கையை கிள்ளிப்பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை. என் கையில் விழுந்த காகத்தின் எச்சம்மும் அதன் மணமும் நான் இன்னமும் சொர்க்கம் போய்விடவில்லை என்பதை உறுதி செய்தது. நான் அந்த காக்கா எச்சம் துடைத்த தோரணைகண்டு "களுக்" என்று சிரித்தாள், காகத்துக்கு நன்றி சொல்லிக்கொண்டேன்! என்னை பார்த்து சிரித்த நேரத்தில் அவளது கையில் இருந்த குடை தவறி கீழே விழ , குடை எடுக்க அவள் குனிந்தாள், அப்போது தான் நான் இதுவரையில் வர்ணித்தும், கவனிக்காத ஒன்ற கவனித்தேன், அவளது கழுத்தின் கீழே தொங்கிக்கொண்டிருந்தது ஒற்றை வட சங்கிலி கிடையாது , அது அவளது தாலி! அதிர்ந்தே போனேன்! கிட்டத்தட்ட நெஞ்சிடி வந்து போனது!  எனது தவணைமுறை காதல் கருகிப்போனதால் மட்டும் அல்ல , இவளவு நேரமும் அடுத்தவன் மனைவியையா பார்த்துக்கொண்டிருந்தேன் என்று குறைப்பட்டு கொண்டது நெஞ்சம்!



அவளை மீண்டும் ஒரு முறை சரியாக உற்று கவனித்தேன்! நெற்றியில் ஒட்டியிருந்த பிளாஸ்ரருக்கு பின்னால் குங்குமம் ஒளிந்திருந்து எனக்கு சிவப்பாய் எரிந்து எச்சரிக்கை செய்தது.  ஏன் இந்த சிறுவயது திருமணம்? ( இப்போது இலங்கையின் வ்டக்கு சமூகங்களை பொறுத்தவரை பெண்களின் திருமணவயது சராசரியாக 23 அல்லது அதற்கு மேல் என்ற ரீதியில் மாறிவருவது குறிப்பிடத்தக்கது) என்று ஒரு கேள்வி வேறு என்மனதில்! அவளதுன்  கையை அப்போது தான் கவனித்தேன்! எழெட்டு வெட்டு காயங்கள், தளும்பாய் இருக்கின்றன! லேசாக புரிந்தது ! காதல் -> பெற்றோரின் எதிர்ப்பு ->  பிளேடால் கையறுத்து எதிர்ப்பு - > மசியாத பெற்றோர் -> காதலுடன் ஓடிப்போய் கல்யாணம்!! வரிவரியாக ஊகித்துக்கொண்டேன், மறுபடி விக்கிலீக்ஸ் துணையின்றி ஒரு உண்மை புரிந்தது. அப்படியானால் கல்யாணமான அந்த குடும்ப குத்துவிளக்கு என்னை பார்க்க காரணம் என்ன? அது அந்த காகம் செய்த வேலையால் தான் இருக்க வேண்டும். கண்ணை அவளிடம் இருந்து அகற்றி வேறிடம் பார்க்க முயற்சி செய்தேன்!


சிறிது நேரத்தின் பின் என் முதுக்குக்கு பின்னார் பார்வை ஒன்று ஊடுருவுவது போல ஒரு உள்ளுணர்வு. ( அல்லது அந்த அழகை மீண்டும் பார்க்கச் சொல்லி எனது மனது தானாகவே கிளப்பிய போலியான உள்ளுணர்வாகவும் இருக்கலாம் # சைக்காலஜி தெரிஞ்ச யாராச்சும் ... பிளீஸ்..........) உண்மை தான் அவள் என்னையே பார்க்கிறாள் ! அந்த பார்வை சாதாரண பார்வை, காதல் பார்வை என்ற எல்லைகளை தாண்டி ஒரு விரசம் கலந்த பார்வையாக என் மேல் படருகிறது. அவள் என்னை மேய்ந்த விதத்தில் நானே கூசிப்போனேன். ஒரு அழகி என்னை அப்படி விரசத்தோடு மேய்வதை என் வாலிபம் வரவேற்றாலும், எனக்குள் எப்போதும் இருக்கக்கூடிய கலாசார உணர்வாளனும், எம் குல பெண்களின் கற்பு நெறி தவறா நடத்தையின் மீது நம்பிக்கை கொண்ட ஒருவனும் , அந்த பெண்ணை குற்றவாளி கூண்டில் ஏற்றி விட்டார்கள். 


ஓடுகாலி என்று தொடங்கி சங்ககாலம் தொடக்கம் இந்த காலம் வரை இப்படியான பெண்களுக்கு உலகு வழங்கி வந்த அத்தனை வசைமொழிகளையும் அவர்கள் பாடி தீர்த்தார்கள். இத்தனைக்கும் என் வாலிபம் ஒன்றும் உத்தமனாய் நடந்து கொள்ளவில்லை, அவள் மீதே என் பார்வை இருந்தது. சிந்தனை என்னவென்னவெல்லாம் சிந்திக்க தொடங்கியது. பண்பாட்டை மீறிய அந்த பார்வையை என் உள்மனது வரவேற்பதாய் இல்லை!


சில நிமிட இடைவெளியில் அந்த கிளினிக்கில் மருத்துவர் அறையிலிருந்து ஒரு பெரியவர் வெளியே வந்தார் , அவளது தந்தையாக இருக்க வேண்டும். இவளும் "என்னப்பா சொன்னார்?"  என்றே எழுந்தாள் , பொய்யாகாத என் கணிப்புகள்தொடர்கிறது. அதே அறையிலிருந்து அவளது அப்பாவைவிட வயதில் மூத்த ஒருவர் வெளியே வந்தார், அவளது பெரியப்பாவாக இருக்க வேண்டும். செல்வச்செழிப்பாக இருந்தார், வந்ததும் வராததுமாக இவளது நெற்றியில் முத்தமிட்டார், இவள் வெறுப்பாய் நெழிந்தாள், எனக்கு தூக்கி வாரி போட்டது. "என்ன மானங்கெட்ட குடும்பம்டா இது?" பெரியப்பன் மகளை பொதுஇடத்தில் வைத்து இப்படி அணைத்து முத்தமிடுகிறானே" நான் சிந்தித்து முடிக்க முன்னமே முத்தமிட்டவன் , அவளது அப்பாவை "மாமா, வேன் வந்திட்டா, இவவுக்கு சாப்பாடு ஒத்துக்கலயாம் அது தான் சத்தியாம் ( வாந்தி) , உதுக்கு போய் அந்த கிழவி பேரனா, பேத்தியா எண்டு செக் பண்ணிட்டு வா மோனே எண்டு விசர்க் கதையெல்லாம் கதைக்குது, எங்களுக்கு வாழுறதுக்கு இன்னும் காலம் கிடக்கு அதுக்குள்ள கிழவிக்கு அவசரம், இல்லையா யாழி?" சொல்லிக்கொண்டே ஒரு சிரிப்புடன் மறுபடி முத்தம். 


எனக்கு அந்த மரமே முறிந்து தலையில் விழுந்துவிடும் போல் இருந்தது. மறுபடி அந்த காகம் பீச்சி நான் நரகத்தில் இல்லை என்று சொல்லக்கூடாத என்று இருந்தது. அந்த நாய்க்கு அவளது ( இப்போது யாழி!! அவன் பெயர் சொல்லித்தான் தெரியும்) அப்பாவைவிட வயது இரண்டு மூன்று அதிகம் இருக்கலாம். "எவ்ர்மார்டீனுக்கு " விளம்பரத்துக்கு வருபவன் போல் ஒரு தலை, அவனுக்கு இருந்தது தொப்பை என்று சொன்னால் தொப்பை வைத்திருப்பவர்கல் எல்லோரும் என்னோடு சண்டைக்கு வருவார்கள். அப்படியொரு வயிறு! தார் பூசிய  பவர்ஸ்ரார் போல் இருந்தான். இந்த பூதத்துடன் அவள் வாழப்போகும் காலப்பகுதியில் "ஃபூட் பொய்சன்" ஆனால் ஒழிய அவள் வாந்தி எடுக்க வேறு வழியே கிடையாது. இந்த லட்சணத்தில் அந்த அண்டா வாழுவதற்கு இன்னமும் காலம் இருப்பதாக கணக்கு போடுகிறது. அவளது விரசப்பார்வைக்கான அர்த்தம் லேசாய் எனக்கு புரிந்தது. பணத்தை அடித்து ஒரு இளம் பெண்ணின் வாழ்வை சூறையாடி இருக்கிறது அந்த கிழப் பெருச்சாளி!



எனக்கு அவன் மீது கூட அந்தளவு கோபம் இல்லை , காசைப்பார்த்ததும் வாயை பொளந்து கொண்டு பெத்த பெண்களை இப்படி பாழும் கிணத்தில் தள்ளும் அவளது அப்பன் போன்ற ஆட்களை ,நடு ரோட்டில் வைத்து அறுக்க மனது துடித்தது. "நீயெல்லாம் அவளுக்கு அப்பன் கிடையாதுடா.. நீ...." என்று நான் இழுக்கவும் , அந்த மாப்பிள்ளை பெருச்சாளி "மாமா" என்று கூப்பாடு போட்டது ! அதே .....  அதே தான் ..... ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க! எனது ஊகத்தில் இடையில் ஒரு மாற்றம்  காதல் -> பெற்றோரின் எதிர்ப்பு ->  பிளேடால் கையறுத்து எதிர்ப்பு - > மசியாத பெற்றோர் -> பணத்தால் அடித்த பெருச்சாளிக்கு பலவந்த கல்யாணம்! வாழ்கை வெறுத்தது! 


பார்த்துக்கொண்டேயிருக்கையில் ஒரு டொல்ஃபின் ரக வேன் வந்து நின்றது. எல்லோரும் ஏறினார்கள், புறப்பட்டு போக முன் இதுவரை பார்க்காத ஒரு புத் பார்வையை என் மீது எறிந்துவிட்டு மறைந்தாள், அந்த பார்வையில்  கலந்திருந்தது  சோகமா?  விரக்தியா?  வாழ்வியலோடு உள்ள கோபமா? எதுவும் புரியவில்லை. அந்த பார்வையில் இழையோடிய சோகம் என்னை என்னமோ செய்தது. எனக்குள் இருந்த அந்த கலாசார காவலனும், சமூக ஆர்வலனும் ஆளுக்கொரு ஐந்தடி கயிற்றை எடுத்துக்கொண்டு தூக்கில் தொங்க மரத்தை தேடி ஓடிப்போனார்கள். எப்போதும் நான் சரி என்று நம்பும் யதர்த்த மனிதன், அவளோடு பிணைந்துகிடக்கும் சோகத்தை நினைத்து அவனும் கவலைப்பட ஆரம்பித்தான். மனித உணர்வுகள் என்று வரும் போது பண்பாடு, நாகரீகம் , பழக்கவழக்கம் எல்லாம் எல்லை மீறுகிறது! மறுபடி அதை ஒப்புக்கொள்கிறேன்! 

டிஸ்கி : வெளிநாட்டு மாப்பிள்ளை என்பதற்காக அறுபது வயது கிழவனுக்கு இருபது வயது மகளை தாரை வார்த்தது, காணிக்காக நாளை சாகப்போறவனை மாப்பிள்ளையாக்கியது  என்று எத்தனையோ கதைகள் கேட்டறிந்து இருந்தாலும் , அந்த கதைகள் தராத சோகத்தை நான் கண்ணால் கண்ட அந்த சம்பவம் உணர்த்திவிட்டு சென்றது. இப்படியும் இருக்காங்கப்பா என்று கவலைப்பட மட்டுமே முடிந்தது!

25 comments:

  1. வேதனைப்படும் சம்பவம்....

    ReplyDelete
    Replies
    1. வேதனைப்பட மட்டுமே முடிகிறது என்பது இன்னும் வேதனை அண்ணே!

      Delete
  2. நம்மால வருதபடத்தான் முடியும் வேற என்ன பன்றது

    ReplyDelete
  3. நம்மால வருதபடத்தான் முடியும் வேற என்ன பன்றது

    ReplyDelete
    Replies
    1. வேற அதுவும் பண்ண முடியாம இருக்குங்கிறதே பெரிய வருத்தம் தானே! ஹும்ம்ம்ம்.....

      Delete
  4. டேய்...என்னடா இப்படி எல்லாம் எழுதுற...
    அநியாயத்துக்கு நல்லா இருக்கு.

    இப்படியெல்லாம் உலகசினிமா விமர்சனம் எழுதுனே... ‘கொண்டே புடுவேன்’.

    மனசில இருக்குறதை கொட்டியிருக்கேன்...லைட்டா புகையுது...

    ReplyDelete
    Replies
    1. அண்ணே ! சினிமா விமரசனத்தை பொறுத்தவரை நான் அப்பப்போ தான் எழுதுவதுண்டு, இது போல சம்பவங்களை நடக்கும் நேரம் எல்லாம் எழுதி புலம்புவது வாடிக்கை. என்னண்ணே பண்றது ? புலம்ப மட்டும் தான் முடிகிறது!

      # என்ன சொல்ல வர்ரீங்க ? இப்புடி இனிமே எழுதாதங்கிறீங்களா? இல்ல நல்லாயிருக்கு எழுதுங்கிறீங்களா?

      Delete
  5. ரொம்ப நேரமா ஒரு பெண்ணை பார்த்து செஞ்ச வர்ணனை நன்று...அதே சமயம் வலிகள் ...வேதனை...பாவம் அந்த பெண்...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுகளுக்கு நன்றிண்ணே! இந்த வாரம் அந்த பெண்ணின் பிம்பத்துடனேயே நகர்கிறது!

      Delete
  6. முழுமையாக வாசிக்க இப்போது தான் நேரம் கிடைத்தது.

    வெளிநாட்டு மோகம் தலைவிரித்தாடும் தேசத்தில் உன் ஆதங்கங்கட்கு வெகுமதி கிடைக்க வாழ்த்துக்கள் நண்பா .

    உன் புலனாய்விற்கு என் பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. எனக்கு வெகுமதி எல்லாம் வேண்டாம் நண்பா! இதுபோல சமூக அநீதிகள் இனிமேல் நடக்காமல் இருக்க ஒரு வழி பிறந்தாலே போதுமானது!

      Delete
  7. உண்மையில் நம்மால் வேதனைப்பட மட்டும்தான் முடிகிறது. உன்னை கலாய்க்கும் எண்ணத்தோடுதான் வந்தேன் ஆனால் கவலை கலாய்ப்பதற்கு இடம் தரவில்லை. இது மட்டுமா எழுதக்கூசும் சில விடயங்கள் கூட சில தறிகெட்ட அப்பன்களால் அரங்கேறுகின்றன :(

    ReplyDelete
    Replies
    1. விதிவிலக்கான சில தறிகெட்ட ஜென்மங்களை என்ன செய்தும் திருத்திவிட முடியாது நண்பா! எல்லாம் விதி!

      * ஒருத்தன் என்ன எழுதியிருக்கான்னு செக் பண்ணாமலே , ஆ ஊ ன்னா கலாய்க்க கெளம்பிடுறது, ஏன்டா இந்த கொலவெறி?

      Delete
  8. Replies
    1. ரொம்ப நன்றி ! வருகைக்கும் , பின்னூடத்துக்கும் ,பாராட்டுக்கும்!

      Delete
  9. நன்றாக உணர்வுகளை வடித்திருந்தாய்! சரி, இந்த கட்டுரையில் ஆரம்பத்தில் ஏன் தேவையில்லாத பகடிகள்? அது சொல்ல வந்த விஷயத்தின் தீவிரத்தை குறைப்பதாகவே எனக்குப் படுகிறது. எழுதும் விஷயத்திர்கேற்ப உன் பகடிகளை குறைப்பது நல்லது என்றே தோன்றுகிறது. அப்புறம் இன்னொரு விஷயம், இந்த கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் (உன் பார்வையில்) இப்படிப்பட்ட பால்யத் திருமணங்கள் நான் வசிக்கும் பீகாரில் தினசரி கதை. அதைப் பற்றி நான் ஒரு கதை என் வலையில் எழுதி இருக்கிறேன். தேவதாஸ் கதை முதல் இன்று வரை மிகவும் சகஜமாய் உள்ள இந்த விஷயத்தில் அந்த பெண்ணின் பார்வை மட்டுமே இதில் (நீ நேரில் கண்டதால்) வித்தியாசமாய் உள்ளது. இது ஜாதி ஒழியாது என்பதை போல் நித்தம் தொடரக் கூடிய ஒன்றே.......இவங்களை எல்லாம் ஆயிரம் பெரியார் வந்தாலும்.............................................

    ReplyDelete
    Replies
    1. அந்த சம்ப‌வத்தை மட்டும் அப்படியே அழுதுவடித்து சொல்லாமால் , அதை ஒரு சம்பவ கோர்வையாக சொல்லலாம் என்று நினைத்தேன்! அது தான்!

      இப்போதும் பால்ய விவாகமா? அப்படி எதுவுமே இல்லை என இந்திய அரசும் சில மீடியாக்களும் மார் தட்டுகின்றனரே?

      Delete
  10. இதுக்கு என்ன கருத்து சொல்றதுன்னே தெரியல மச்சி! ரொம்ப கொடுமை நண்பா.

    ReplyDelete
    Replies
    1. என்னிடமிருக்கும் பதில் கூட மௌனம் தான்!

      Delete
  11. பார்த்து தலைவா.. அது வயது வரம்பைத் தாண்டிய​ காதல் திருமணமாக​ இருந்திருக்கப் போகுது!

    ReplyDelete
    Replies
    1. அந்த சம்பவத்தை நேரில் கண்டவன், நீ சொல்வது போல் இருக்க நூறுக்கு இருநூறு வீதம் வாய்ப்பே கிடையாது தல‌!

      Delete
  12. உனக்குள் ஒளிந்திருக்கும் அந்த​ 'தம்பி' மாதவனை அங்கே வெளியே கொண்டு வந்திருக்கலாமே கிஷோக்கு!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...